2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

சேனாநாயக்க சமுத்திர நீர் வேகமாக வெளியேற்றப்படுவதால் பாதிப்பு

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட், அப்துல் அஸீஸ்,எம்.எம்.ஜெஸ்மின்)

சேனநாயக்க சமுத்திரத்தின் 06 வான் கதவுகளும் நேற்று இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதால் அம்பாறை மாவட்டத்திலுள்ள பல நீர்த் நிலைகளின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், செக்கனுக்கு 09 ஆயிரம் கன அடி அளவான நீர் - மேற்படி சமுத்திரத்திலிருந்து வெளியேற்றப்படுவதாக அறியக் கிடைக்கின்றது.

மேற்படி நீர் - வேகமாக வெளியேறுவதன் காரணமாக, பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலிம்சேனை கொங்றீட் வீதியும் சேதத்துக்குள்ளாகியது.

மேற்படி வீதி முற்றாக உடையும் பட்சத்தில் அதனையண்டியுள்ள குடியிருப்புகள், வயல் நிலங்கள் மற்றும் பிரதேசங்கள் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் என அஞ்சப்பட்டதையடுத்து – அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் ஒன்றிணைந்து குறித்த வீதியில் மண் மற்றும் கற்களையிட்டு நிரப்பினர்.

இதேவேளை, சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து ஒலுவில் பிரதேசத்திலுள்ள களியோடை ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதோடு, ஆற்றினை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக, களியோடைப் பகுதியிலுள்ள நெல்வயல்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.

சேனநாயக்க சமுத்திரத்தின் ஆறு வான்கதவுகளும் சில நாட்களுக்கு முன்னரும் திறக்கப்பட்டிருந்தது. அதன்போது செக்கனுக்கு 08 ஆயிரம் கன அடி அளவான நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது இன்று 09 ஆயிரம் கன அடி அளவான நீர் வெளியேற்றப்பட்டது.

இந்தக் குளத்திலிருந்து இவ்வாறு நீர் வெளியேற்றப்படுவதால் அட்டாளைச்சேனை, இறக்காமம், வரிப்பத்தான்சேனை, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, கரவாகுப்பற்று, கல்முனை மற்றும் கிட்டங்கி போன்ற பகுதிகளில் நீர் பரவக் கூடிய நிலை ஏற்படலாம் என – நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்றுப் பிராந்தியக் காரியாலய உதவிப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த வீதியை கிழக்கு மாகாண வீதி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை நேரில் சென்று பார்வையிட்டார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .