2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் பிரசாரம் செய்தோருக்கு அழைப்பாணை

Super User   / 2011 மார்ச் 14 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று மாநாகர சபை தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிற்கு  மாத்திரம் வாக்களிக்குமாறு 'அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்' என்ற பெயரைப் பயன்படுத்தி அக்கரைப்பற்றுப் பிரதேச பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலமாக வேண்டுகோள் விடுத்த மூன்று நபர்களை நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு அக்கரைப்பற்று நீதவான் ரி. சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு நாளை 15 ஆம் திகதி அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முதன்மை வேட்பாளரான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி) மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் யூ.எல். உவைஸ் ஆகியோர் மேற்படி விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடொன்றை செய்திருந்தனர்.

எஸ்.எல்.எம். அலியார், ரி.எஸ். ஆதம்லெப்பை, ஏ.எல். அப்துல் ரஷிட் ஆகிய நபர்கள் அக்கரைப்பற்றுப் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலமாக 'அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்' எனும் பெயரை  பயன்படுத்தி ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுவதாகவும், பள்ளிவாசல்களில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்காக செல்லும் வாக்காளர்களிடம் தேசிய காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கட்டளையிடப்படுவதாகவும், இதனால் கருத்துச் சுதந்திரம் மீறப்படுவதாகவும்  அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாட்டினை அக்கரைப்பற்றுப் பொலிஸார் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வழக்காக பாரப்படுத்திய போதே, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், குறித்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0

  • RUWAIZ Tuesday, 15 March 2011 02:25 AM

    தயவு செய்து பள்ளிவாயலை அரசியலுக்கு பயன்படுத்தவேண்டாம்.

    Reply : 0       0

    Raheem Tuesday, 15 March 2011 05:19 AM

    புனித ஸ்தலத்தின் மகிமை பேணப்படவேண்டும். பள்ளியில் தான்தோன்றித் தனமாக நடக்காமல் நாம் ஜனநாயகத்தில் நம்பக்கை கொண்டு தேர்தலில் இறங்கிருக்கிறோம். யாவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் நீதி நிலைக்குக் வேண்டும். அது அக்கரைபற்றில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .