2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆங்கிலமொழி தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம்.எம்.றம்ஸான்)

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய  மாவட்டங்களில் கடந்த  5 வருடங்களுக்கும் மேலாக தொண்டர் அடிப்படையில் பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் ஆங்கில ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்குமாறு  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்கு  மாகாண சபையின் கல்வி அமைச்சின் மீதான விவாதத்தின்போதே இவ்விடயம் அவரால் முன்மொழியப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றி வரும் ஆங்கில தொண்டர் ஆசிரியர்களை இப்பொழுது ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்க்கும் முகமாக கோரப்பட்டிருக்கும் விண்ணப்பத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.  இந்த ஆசிரியர்கள் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மாகாணசபை அலுவலக கட்டிட படிக்கட்டுகளில் ஏறியிறங்கி திரிகின்றனர். இவர்கள் மீது விசேட கவனம் செலுத்தி இவர்களுக்கென்று விசேட ஆங்கில ஆசிரியர்கள் ஆட்சேர்ப்புத் திட்டமொன்றை உருவாக்கி இவர்களின் கல்வித் தகைமைக்கேற்ப இவர்களை உள்வாங்குவதற்கான கொள்கைகளை கல்வியமைச்சு வகுக்கவேண்டும்.

ஏற்கெனவே இவ்விடயம் தொடர்பில் மாகாண கல்விச்சேவை ஆணைக்குழுவுக்கு தன்னால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆசிரியர்கள் நியமனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டு இவர்களை நிரந்தரமாக நியமிக்க கல்வியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்விடயம் மாகாண கல்வியமைச்சரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த ஆங்கில தொண்டர் ஆசிரியர்களை உள்வாங்க விசேட திட்டம் வகுக்கப்பட்டு  நிரந்தரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் விமலவீர திஸாநாயக  உறுதியளித்தார்.

இதேவேளை, கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய  மேலதிக ஆசிரியர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2009.06.05ஆம் திகதி கல்முனை வலயத்திலிருந்து அக்கரைப்பற்று மற்றும்  சம்மாந்துறை கல்வி வலயங்களுக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரினால்  இரண்டு வருட நிபந்தனை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.  இவ்வாசிரியர்களை இந்த வருட இறுதிக்குள் மீண்டும் அவர்கள் ஏற்கெனவே கடமையாற்றிய அதே பாடசாலைகளுக்கு இடமாற்றுமாறும் அவர் கோரினார்.

இது அவர்களின் அடிப்படை உரிமையும் ஜனநாயகம் மறுக்கப்பட்ட ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும். இவர்களை ஏற்கெனவே கூறிய நிபந்தனை அடிப்படையில் மீண்டும் கல்முனை வலயத்திற்கு  இடமாற்றம்   வழங்காவிட்டால் இந்த ஆசிரியர்கள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.  இதற்கு நானே தலைமை தாங்கி போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்  குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • ameerudeeen Friday, 25 November 2011 06:41 PM

    ஆங்கில ஆசிரியர் பிரச்சினை உடனே தீர்க்கப்படனும். நல்லதொரு விடயம் பேசினீங்க. அமைச்சர் அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்தால் எமது மாணவச் செல்வெங்களுக்கு பாரிய பலன் கிட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .