2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பொய்யான குற்றச்சாட்டு மூலம் அரசியலிலிருந்து ஓரங்கட்ட முயற்சி: அக்கரைப்பற்று பிரதேச சபை உதவி தவிசாளர்

Super User   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று பிரதேச சபையினர் புரிகின்ற மோசடிகளுக்கு எதிராக - நான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முடக்குவதற்காகவும், அரசியல் ரீதியாக என்னை ஓரங்கட்டும் நோக்குடனும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளரும் அவரின் குழுவினரும் பல்வேறு கேவலமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஒன்று தான், அக்கரைப்பற்றுப் பிரதேச சபையில் இருந்த கணிணி உள்ளிட்ட சில பொருட்களை நான் உடைத்து விட்டதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரமாகும் என்று – அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஐ.எல்.ஏ. ஹக்கீம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

"அக்கரைப்பற்று பிரதேச சபையினர் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக, மூன்று கொங்றீட் வீதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதற்கான கொடுப்பனவுகள் பெறப்பட்டுள்ளன. ஆனால், குறித்த இடங்களில் கொங்றீட் வீதிகள் இல்லை. மாறாக அங்கு கிறவல் வீதிகளே உள்ளன. இந்த வீதிகளை அமைப்பதற்குரிய அனுமதிகளை தவிசாளரே வழங்கியுள்ளார்.

இவை போன்று பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இவைகள் குறித்து பலமுறை பிரதேச சபை கூட்டங்களில் நான் கேள்வி எழுப்பிய போதும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. எனவே, இந்த விவகாரங்களை பொதுமக்களின் பார்வைகளுக்குக் கொண்டு செல்லும் வகையில் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினேன். அதில் நான் தெரிவித்த விடயங்கள் 'தமிழ் மிரர்' உள்ளிட்ட ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் தான், 28ஆம் திகதியன்று அக்கரைப்பற்று பிரதேச சபையிலுள்ள கணிணிகள் மற்றும் சில தளபாடங்களை – என்னோடு சென்ற குழுவினர் உடைத்ததாகக் கூறி, அக்கரைப்பற்று பிரதேச சபையினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பிரதேச சபையின் சொத்துக்களை நானும், இன்னொரு நபரும் சேர்ந்தே உடைத்ததாக பிரதேச சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், என்னோடு வந்ததாகக் கூறப்படும் குறித்த நபர் - சம்பவ தினத்தன்று கொழும்பில் இருந்தார். அவர் கொழும்பில் இருந்தமையை உறுதிப்படுத்துவதற்குரிய பல ஆவணங்கள் உள்ளன.

இதேவேளை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் இணைப்பாளர் என்று கூறப்படும் றினோஸ் என்பவரின் வாகனத்தினையும் - அன்றைய தினம் பிரதேச சபை வளாகத்துக்குள் வைத்து நாம் சேதப்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தன்னுடைய வாகனத்தை யாரும் சேதப்படுத்தவில்லை என்றும் தனது வாகனத்தின் கண்ணாடி முன்பே உடைந்திருந்ததாகவும் - குறித்த இணைப்பாளர் றினோஸ் என்பவர் தெரிவிக்கின்றார். அவ்வாறு  அவர் தெரிவித்தமையை உறுதிப்படுத்தும் வகையிலான அவரின் குரல் பதிவு என்னிடம் உள்ளது.

ஆக, இவ்விவகாரமானது – அக்கரைப்பற்று பிரதேச சபையினரின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக நான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முடிக்கும் ஒரு முயற்சியேயன்றி வேறொன்றுமில்லை.

பொய்யான குற்றச்சாட்டுகளை என்மீது தொடர்ந்து சுமத்துவதன் மூலமாக என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு அக்கரைப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளரும் அவரின் குழுவினரும் முயற்சிக்கின்றனர். ஆனால், அது ஒரு போதும் நிறைவேறாது!

அக்கரைப்பற்று பிரதேச சபையானது தேசிய காங்கிரசின் ஆளுகையின் கீழ் உள்ளது. அந்தக் கட்சியினூடாகவே நானும் தெரிவு செய்யப்பட்டு, உதவித் தவிசாளராகப் பதவி வகிக்கின்றேன்.

அதற்காக – எனது கட்சி சார்பானவர்கள் செய்யும் ஊழல்களையும், மோசடிகளையும் என்னால் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மக்கள் எனக்காக வாக்களித்தமைக்கும், அதனூடாக நான் இந்தப் பதவியினை வகிப்பதற்கும் ஒரு நோக்கமும், அர்த்தமும் இருக்கின்றது.

மக்களுக்கான அபிவிருத்திகளில் மோசடிகள் இடம்பெறும் போது – அவற்றினை பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியாது. அவ்வாறு செய்வது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும். இந்த வகையான துரோகங்களைப் புரிபவர்கள் இறை தண்டனையிலிருந்து ஒரு போதும் தப்பிக்க முடியாது!

மேலும், அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான கணிணிகள் மற்றும் தளபாடங்களை உடைத்தவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டொன்றில் என்னை மாட்டி விட வேண்டும் என்பதற்காக - பிரதேச சபையின் சொத்துக்களை உடைத்த ஈனச் செயலை ஒருபோதும் மன்னிக்க முடியாது!

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேச சபையினரின் ஊழல் மோசடிகளை நான் வெளிப்படுத்தத் தொடங்கியதில் இருந்து – பல்வேறு வகையிலும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றேன். அண்மையில் தொலைபேசி மூலமாக எனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் ஒன்று குறித்தும் அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

எது எவ்வாறிருந்தபோதும், அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைமைத்துவத்துக்கும் நான் என்றும் விசுவாசமுள்ளவன். தேசிய காங்கிரஸின் ஊடாகவே எனது அரசியல் பயணம் தொடரும்" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • meenavan Monday, 02 April 2012 10:33 PM

    அக்கரைப்பற்றில் என்ன நடக்கிறது?

    Reply : 0       0

    Faazil Tuesday, 03 April 2012 12:30 AM

    அக்கரைப்பற்று அரோகரா. அராஜக அரசியலுக்கு இருக்கு ஆப்பு! கொஞ்சம் பொறுங்க.

    Reply : 0       0

    minwar Tuesday, 03 April 2012 01:27 AM

    ஹக்கீம் பிசி (இவரை இப்படித்தான் ஊரில் அழைப்பார்கள்) நல்ல மனிதர். அநியாயங்களைச் சகித்துக் கொள்ளாதவர். இதனால்தான் இவருக்கு இந்த வினைகள் வந்திருக்கின்றன. அரசியலில் உள்ளவர்களைப் போல் உழைக்கத் தொடங்கினால் இந்த மனிதர் பல வாகனங்களை ஓட்டலாம். ஆனால், நேர்மையாக வாழ்வதால் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளார்.

    Reply : 0       0

    razeek Tuesday, 03 April 2012 03:41 AM

    கொம்பியுட்டர் ஒடைச்சத பொலிஸ் விசாரனை செய்யட்டும் இந்த கொங்ரீட் ரோட் மோசடியபத்தி ஆரு விசாரன பன்னுவது இதுக்கு என்ன தீர்வு அப்ப கெறவல் ரோட்டுதான எங்குட நெலம? கொங்ரீட் ரோட் கனவு அவ்வளவுதானா?

    Reply : 0       0

    abdul Tuesday, 03 April 2012 06:04 AM

    சபையில் உழல் நடந்தால் சபை அமர்வில் பேச வேண்டும்.

    Reply : 0       0

    abdullah` Tuesday, 03 April 2012 11:11 PM

    சபையில் பல தடவை உங்கள்மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டை வண்மையாக கண்டிக்கின்றோம்.

    Reply : 0       0

    sana Wednesday, 04 April 2012 03:18 AM

    unkalathu payanam thodaratum uthavi thavisaalare.. Allah thunai nitpaan.

    Reply : 0       0

    nigga Wednesday, 04 April 2012 02:05 PM

    நீங்கள் சொல்வது மட்டும் உண்மை ,சொல்வது எல்லாம் பொய். இது தான் உங்களது முயலுக்கு மூன்றுகால் விவாதம். தனது கதிரை கனவை மறந்து இந்த சமுகத்தின் அபிவிருத்திக்காக பயணிக்க எல்லோருடனும் கை கோர்த்து அரசியல் பயணத்தை தொடருங்கள் . இல்லாவிடின் நாளை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். இறைவன் அவரவர் எண்ணங்களை நன்கு அறிந்தவன்.

    Reply : 0       0

    karunkodi mahan Thursday, 05 April 2012 10:20 PM

    அதா உல்லா சொல்லுறார் எண்டு ஓட்டு போட்டிங்க இல்ல? இப்ப றோட்டையும் நீங்களே போடுங்க மக்காள்..... இது நீங்களா தேடிகொண்டது .......

    Reply : 0       0

    Riyas Friday, 06 April 2012 06:04 AM

    ஐயா ! சூடு போடுற மாடு வைக்கோல் தின்னுவது வழமை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .