2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மு.காவிலிருந்து யாராவது பிரிந்து செல்வார்களாயின் அது அமைச்சுப் பதவிக்காகத்தான்: ஹக்கீம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

'முஸ்லிம் காங்கிரஸிலிருந்து யாராவது பிரிந்து செல்வார்களாயின் அதற்கு காரணம் தங்களுக்கு அமைச்சுப் பதவிகள் தேவை என்பதுதான். அதேபோல் சிலர் கட்சி தொடங்குவதும் முழு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான். தலைவர் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் இந்த வரலாறு தொடர்ந்து வருகிறது. இந்த வரலாறு கிழக்குத் தேர்தலுக்குப் பின்னரும் தொடருமா என்றும் கேட்கப்படுகிறது.

கிழக்குத் தேர்தலுக்குப் பிறகும் இவ்வாறு இடம்பெறுமாயின் அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் சரியான அணையினை கட்டும் என்பதில் குறித்த நபர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலின்  அம்பாறை கரையோரப் பிரதேசத்துக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் நேற்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும், கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸின்  வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

'கிழக்கு மாகாணசபையின் ஆட்சியினைத் தீர்மானிக்கிற சக்தி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை வைத்துக் கொண்டு யாரும் வியாபாரம் செய்ய முடியாது. மக்கள் ஆணையினை அடிப்படையாகக் கொண்டு கட்சிதான் அந்த விடயத்தைத்  தீர்மானிக்கும். மக்கள் ஆணையினைக் காவிக் கொண்டு அடுத்த நாள் யாரும் ஓடிவிட முடியாது.

முஸ்லிம் காங்கிரஸை அடிபணிய வைக்க நினைப்போரிடம் நாம் மசிந்து கொடுத்தது கிடையாது. ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மசிய வேண்டிய நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட வேண்டிய துரதிஷ்டத்தை நாம் அனுபவித்திருக்கின்றோம். ஆனால், இந்தத் தேர்தலுக்குப் பிறகு அதை எதிர்கொள்வதற்கு மக்களைத் தயார் படுத்த வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இணைந்தா தனித்தா போட்டியிடுவது என்று முடிவெடுக்கும் விவகாரத்தின் போது, கட்சிக்குள் பலவிதமான உள்முரண்பாடுகள் தோன்றியிருந்தன. ஆளும் தரப்பினரோடு மிகத் திறந்த மனதோடு நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அந்தப் பேச்சுவார்த்தைகளின் போதும், அதன் பிறகும் எமது அணிக்குள் ஏற்பட்ட குழறுபடிகளை சமாளிப்பதற்கு நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களையெல்லாம் இங்கு கூறமுடியாது. ஆனால், அவை என்றோ ஒரு நாள் வரலாற்றில் பதியப்படலாம். இருந்தாலும், இந்தத் தேர்தல் முடியும் வரையாவது அவற்றினை பரம ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருக்கிறது.

மக்கள் ஆணையினை அடகு வைத்து விட்டு கபடத்தனமாக யாரும் விளையாட முடியாது என்பதை கட்சிக்குள்ளும், வெளியிலும் இருப்பவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக தமது பதவிகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொள்வது என்கிற எதிர்பார்ப்புகள் பலருக்கும் இருக்கும். அதற்காக, கட்சி எக்கேடுகெட்டுப் போனாலும் பரவாயில்லை என்று தடியெடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரர்கள் ஆகி விட முடியாது.

இனியும் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கட்சித் தலைவரைப் பணயக் கைதியாக்கி பந்தயமாடுகின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ்   இருக்காது.

கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுப் போனால், இந்தக் கட்சியின் தலைவர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடுவதென தீர்மானித்தவுடன் கட்சிக்குள் இருக்கும் சிலரே கூறியிருக்கின்றார்கள். தலைமைத்துவம் என்கிற இந்த முற்கிரீடத்தை ஒருபொழுதும் நான் தோல்விகளுக்கு அஞ்சி சுமந்ததில்லை. நான் சவால்களை நேரடியாக களத்தில் கண்டு எதிர்கொள்பவன்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை அச்சுறுத்தி, அடிபணிய வைத்து, கபட நாடகமாடுவதற்கு எவருக்கும் நான் இடம் கொடுத்தது கிடையாது. தலைவரைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு  முஸ்லிம் காங்கிரஸை யாரும் இனி பலவீனப்படுத்தி விடமுடியாது.

கிழக்குத் தேர்தலின் பிறகு, முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் செல்வாக்கினை தமக்கு விரும்பியவாறெல்லாம் திருப்பியெடுத்து விட முடியும் என்கிற திட்டத்தோடு எந்த சக்தி வந்தாலும் அதை உறுதியோடு நாம் சந்திப்போம்' என்றார்.

இந்நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசனலி, பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுமான கே.எம்.எம். ஜவாத், ஏ.எம். அப்துல் மஜீத், ஏ.எம். ஜெமீல் மற்றும் ஆயிரக் கணக்கான கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.     
                                                 

You May Also Like

  Comments - 0

  • mmn Friday, 03 August 2012 05:47 AM

    நீங்கள் எல்லோரும் சமூகத்தை கைவிட்டு விட்டீர்கள்

    Reply : 0       0

    Ishaq Add Monday, 06 August 2012 09:46 AM

    இது ஹக்கிம்ட தேர்தலோ அதாட தேர்தலோ அல்ல. முஸ்லிம்கலின் பலத்தைக் காட்டுகின்ற தேர்தல் ஆகும். உணர்ந்து வாக்களியுங்கள்.

    Reply : 0       0

    Suhaib Saturday, 04 August 2012 12:56 PM

    ஒருவரிடம் பேரினவாத அரசாங்கம் திருப்தி அடைந்தால் எச்சேவையும் செய்யலாம். ஆனால் சிறுபான்மைக்கு விசுவாசமானவர்களுக்கு பேரினவாத அரசாங்கம் மூலம் சேவை செய்வது கடினம். எனவே முஸ்லிம் காங்கிரஸ் சரியான வழியில் செல்கின்றது என்பது சேவை செய்ய முடியாமல் இருப்பதால் புலனாகின்றது. வாழ்க முஸ்லிம் காங்கிரஸ்.

    Reply : 0       0

    Addalaichenai Saturday, 04 August 2012 05:34 AM

    உங்களுக்கு இப்பதான் தெரியுமோ அமைச்சர் மார் கட்டுற கட்டிடங்கள் ஒன்றும் அவர்களுடைய பணத்தில் இருந்து இல்ல என்.ஜீ.ஓ. பணம், அரச பணத்தில் தான் என்று.......... இதெல்லாம் எப்ப படிச்சி நீங்க எப்ப அரசியல் கதைக்கிற.......சும்மா போய் வாய்க்குள் விரலை வைத்து தூங்குங்க இம்றான்......

    Reply : 0       0

    Addalaichenai Friday, 03 August 2012 05:51 PM

    முல்லா கேள்விகள்?
    1. இது ஹகீமுக்கு எத்தனையாவது ஒப்பந்தம்?
    2. இது வரை எத்தனை ஒப்பந்தத்தில் வெற்றி? எத்தனை தோல்வி?
    3. மக்களைச் சந்திக்க கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி மகிந்தவுக்கு நேரம் இருக்கும். ரனிலுக்கு நேரம் இருக்கும் ஹகீமுக்கு நேரம் இருக்குமா?
    4. இவ்வளவு காலமும் முஸ்லிம் சமூகத்திற்கு செய்த ஒரு நல்ல விடயம் அல்லது பெற்றுக் கொடுத்த விடயம் ஒன்றேனும்......?
    5. தோ்தல் இல்லாத சந்தர்பத்தில் எத்தனை தடவை கிழக்கிற்கு வந்திருக்கிறார்?
    6. இவருக்கு ஒதுக்கப்படும் வரவு செலவுத்திட்ட நிதிக்கு என்ன அல்லது எங்கேனும் எது நடக்கிறது?
    7. அதாவுல்லா பிரியக் காரணம் யார்?
    8. றிசாட் பிரியக் காரணம் யார்?
    9. இவரால் என்ன செய்ய முடியும்?
    10. உலகில் இவர் மட்டுந்தானா கட்சி நடத்துறாரு?

    Reply : 0       0

    Nallawan Friday, 03 August 2012 05:40 PM

    அவர்(உங்க தலைவர்) இவ்வளவு காலமா முஸ்லிம்களுக்காக பெற்றுத் தந்தது எது? அஸ்ரப் பாரளுமன்றத்தில் 11 வருடங்கள் தான் இருந்தார்.

    Reply : 0       0

    muhammad Friday, 03 August 2012 12:55 PM

    மர்ஹும் அஷ்ரஃப் மரணித்ததில இரிந்து இந்த கதைதான் வித்தியாசம் ஒன்டும் இல்லை. கொன்ஷம் மக்கள் நல்லா சிந்திஷ்ஷு பாருங்க. அடுத்த தேர்தலுக்கு வந்தும் இதே பாட்டுத்தான் பாடுவார்.

    Reply : 0       0

    paksha Friday, 03 August 2012 09:28 AM

    நீங்க சொல்றது சரி தான். ஆனா எங்கட வாக்கை பெற்று கொன்டு சென்று நாளை அரசிடம் சின்ன பதவிக்காக சமூகத்தை விற்க துடிக்கும் நபர்களை அடையாளம் கண்டு வாக்கு போடாமல் யாரு விலை போகாமல் நமக்காக இருப்பினம் என்று கருதும் நபர்களை தெரிவு செய்வோம்.

    Reply : 0       0

    feenix Friday, 03 August 2012 05:55 AM

    இன்றைய நிலைமையில் முஸ்லிம்களின் தேவை (பள்ளி வாசல்களில் தொழக்கூட முடியாத குற்றுயிரான நிலைமை,) சத்திர சிகிச்சையே தவிர அபிவிருத்தி அல்ல இது முஸ்லிம்களாகிய எம்முடைய தார்மீக உரிமைகளை வென்றெடுக்க எவ்வாறு வாக்களிக்கலாமோ அதன் படி செயற்படுங்கள் மாறாக கட்சிகளுக்குள் அடித்துக் கொள்ள வேண்டாம் என்னை பொறுத்தவரை இப்போதையே நிலைமையில் சர்வதேசம் ஏற்றுகொண்டிருக்கின்ற ஏக பிரதிநிதியை தெரிவு செய்வதுதான் சிறந்தது.

    Reply : 0       0

    Nallawan Thursday, 02 August 2012 08:34 AM

    உங்க கட்சியில் இருந்து நிறையப் போ் போகப்போறாங்க எங்கிறது மட்டும் உங்கள் பேச்சில தெரியுது. தலைவா! மு.கா. வி்ல் இருந்து போன அனைவரும் உங்களாலதான் போன என்டாவது தெரியுமா? இப்ப நீங்க நிண்டு கதைக்கிற இடத்தில இருந்து தான் போன தோ்தலுக்கு வந்து அட்டாளைச்சேனையை வரலாறு காணாத அபிவிருத்தி நாளையில் இருந்து காணப்போகிறது என்ற நீங்க இப்பதான் வந்திருக்கிறயள். அந்த இடமும் ஊரும் அப்படியே தான் இருக்கு தலைவா! நீங்க நின்று கதைக்கிறது அதாவுல்லா கட்டிக் கொடுத்த கட்டிடம். இந்த ஊருல நீங்க கட்டின கட்டிடத்தில இருந்து கதக்கிற என்றா ஒரு செங்கல் மேல இருந்து கதைக்க ஏலா....

    Reply : 0       0

    Hasmeer Thursday, 02 August 2012 05:40 PM

    அட்டாளைச்சேனை வாக்கினால் அமைச்சர் ஆனவர்கள் அட்டாளைச்சேனைக்கு இது மட்டும் அல்ல இன்னும் எவ்வளவு செய்யனும்!

    Reply : 0       0

    Kanavaan Thursday, 02 August 2012 05:23 PM

    ஐயா ஹக்கீம், நீங்கள் அரசுடன் இணைவதற்கு முன்னராகவும் பின்னராகவும் எத்தனையோ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளீர்கள். அதில் ஒன்றைத்தானும் இதுவரை கூறவில்லையே. இரகசியமாக வைத்திருந்தால்தான் மேலும் மேலும் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரையும் மடையர்களாக்கலாம் என் யோசிக்கிறீர்களா? வாஸ்த்தவம்தான்.

    Reply : 0       0

    Thavam Thursday, 02 August 2012 04:33 PM

    சொந்த பணமோ, கடன் பட்ட பணமோ தலைவர் உருப்படியா செய்த சேவைதான் என்ன?

    Reply : 0       0

    jesmin Thursday, 02 August 2012 11:40 AM

    முஸ்லிம் காங்கிரசில் இருந்து யாரும் விலகிச்சென்றால் அமைச்சுப்பதவிகளுக்காக த்தான் என்றால் நீங்கள் அரசுடன் ஓட்டிகொண்டிருப்பதும் அந்த அமைச்சுபதவிகளுக்காகத்தானே .உங்க உம்மா என்றால் உம்மா, எங்க உம்மா என்றால் சும்மா.

    Reply : 0       0

    imran Thursday, 02 August 2012 11:11 AM

    அதாவுல்லாட சொந்த பனத்துல கட்டவில்லயே? ஏனென்றால் SLMC தனது அரசியல் வரலாற்றிலே எக்கச்சக்கமான குள்ள நரிகளையும், பச்சோந்திகளையும், சமூகத்தை காட்டிக்கிக்கொடுதவர்களையும், கண்டுள்ளது, (இவர்கள் அனைவரும் மற்றவர்கள் போடும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டியவர்கள்) இவ்வாறு செல்லவிருப்பவர்களுக்குதான் தலைவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 02 August 2012 09:57 AM

    அப்போ மொத்தமாக வெறும் ஐந்தே ஐந்து ஆசனங்களை பெற்றாலும் அதட்கு காரணமாக உங்கள் முடிவுக்கும் கொள்கைக்கும் தார்மீக பொறுபேற்று விலகும் என்னம் கிஞ்சித்தும் இல்லை???

    Reply : 0       0

    Rakesh Thursday, 02 August 2012 09:52 AM

    தலைவா உங்கள பணயக் கைதியாக்கி பந்தாடின ஆட்கள் ஆரெண்டு கட்டாயம் சொல்லனும்.

    Reply : 0       0

    nandu Thursday, 02 August 2012 09:22 AM

    எத்தனை நாடகம் இன்னும் உண்டு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .