2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தமிழ் மொழி பயன்பாட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறு, அரச அதிபருக்கு வேண்டுகோள்

Thipaan   / 2015 மார்ச் 25 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எம்.சி. அன்சார்

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள தமிழ் மொழி பயன்பாட்டு உரிமையை  உறுதிப்படுத்துமாறு கோரி, அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்கவிடம் கல்முனை அபிவிருத்தி மன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை(24) வேண்டுகோள் விடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக துசித பீ வணிகசிங்க நியமிக்கப்படுள்ளதோடு இவர் தனது கடமைகளை திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை அபிவிருத்தி மன்றத்தின் அஷ்ஷெய்கு ஏ.பி.எம்.அஸ்ஹர் அனுப்பி  வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது,

கேகாலை மாவட்டத்தில் அரசாங்க அதிபராகக்கடமையாற்றிய நீங்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

ஏற்கெனவே மூவின சமூகங்கள் வாழும்பிரதேசத்தில் கடமையாற்றிய அனுபவம் உங்களுக்கு இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றக்கிடைத்தமை நிச்சயமாக உங்களுக்குக்கிடைத்த பாக்கியம் என்பதை எதிர்காலத்தில்  நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நாம் நம்புகிறோம்.

பிரட்மன் வீரகோன் போன்ற சிரேஷ்ட சிவில் அதிகாரிகள் இம்மாவட்டத்தில் கடமையாற்றிய பின்னர்தான்  பிரதமர்களின் செயலாளர்களாக மாறினர் என்பது வரலாறாகும்.

இம்மாவட்த்தின் உன்னதமான பொறுப்பை நீங்கள், திங்கட்கிழமை(23) முதல் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.
இம்மாவட்டத்தை சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்ய வழிகாட்டுவதும் ஆலோசனைகள் வழங்குவதும் உங்கள் மீதுள்ள கடமையாகும்.

மூவின சமூகங்களுக்கும் அந்தந்த சமூகங்களுக்கு பாதகமில்லாமல் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது உங்கள் மீது  இம்மாவட்டத்திலுள்ள சகல மக்களும் நம்பிக்கை வைக்க சந்தர்ப்பமாக அமையும்.

இதேவேளை, இம்மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களில் கரையோரப்பிரதேசங்களிலுள்ள 13 பிரதேச செயலகங்ளிலும் தமிழ் மொழி அரச கரும மொழியாகப்பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இங்கு கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் இப்பிரதேச செயலகங்களின் கீழ் வாழும் 3லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ் மொழியை  தாய் மொழியாகவும் அரச கரும மொழியாகவும் பயன்படுத்தி வரும் நிலையில், அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து வரும் கடிதங்கள்  மற்றும் சுற்று நிருபங்கள் அநேகமானவை தனிச்சிங்களத்திலேயே வருகின்றன. இதனால் இப்பிரதேச அலுவலர்கள் மற்றும் பொது மக்கள்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இந்நடை முறைச்சிக்கல் தொடர்பாக முன்னர் கடமையாற்றிய அரசாங்க அதிபரிடம்  பல முறை சுட்டிக்காட்டப்பட்டும் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.

இருப்பினும் நீங்கள் இந்நடைமுறையை நீக்கி தமிழ் மொழியிலேயே கருமமாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட செயலகத்திலுள்ள மற்றும் மாவட்ட செயலகத்துக்கு வெளியிலுள்ள  திணைக்கள தலைவர்களுக்கு நீங்கள் கண்டிப்பான  உத்தரவுகளை வழங்க வேண்டும்.

இவ்விடயத்தில் உங்களது உத்தரவினை உதாசீனப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க பின்நிற்கக்கூடாது எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X