2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'ஆணைக்குழுவின் பணிகளை சுமுகமாக நிறைவேற்ற இடமளிக்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை சுமுகமாக முன்னெடுப்பதற்கு இடமளித்தாலே, ஆணைக்குழுவின் பணியை செவ்வனே நிறைவேற்றமுடியும் என்று  காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான முதலாவது அமர்வு,  கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் திங்கட்கிழமை (06) ஆரம்பமாகியது.
இதன்போது, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் இது காலத்தை இழுத்தடித்து தங்களை ஏமாற்றுவதற்கான முயற்சி என்றும் தெரிவித்து கறுப்புத்துணியால் தங்களது வாய்களை மூடிக்கட்டியவாறு  கல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர், படுகொலை செய்யப்பட்டோர் உறவினர்கள் அமையத்தின் சார்பாக விசாரணை ஆணைக்குழுவின் முன்பாக  பிரசன்னமாகிய அடிகளார் ஏ.கமலகுமார் தலைமையிலான செயற்பாட்டாளர்கள், ஆணைக்குழுவிடம் இந்த ஆணைக்குழு விசாரணை கண்துடைப்பானது  என்றும் இதற்கு பதிலாக சர்வதேச விசாரணையை  கோரி நிற்பதாகவும்  கூறி ஆணைக்குழுவிடம்  மகஜரொன்றையும் கையளித்தனர்.  
இந்த நிலையிலேயே, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

'ஆணைக்குழு அதன் இடைக்கால அறிக்கையை  இனிமேலே சமர்ப்பிக்கவுள்ளது. இந்த ஆணைக்குழு தனக்கு இடப்பட்ட ஆணைக்கு அப்பாலும் சென்று அதன் கடமைகளை நிறைவேற்றியுள்ளது. கொழும்பு, கொட்டஹேனாவில் காணாமல் போனவர்களையும் கூட ஆணைக்குழு இந்த விசாரணைக்குள் உள்வாங்கியுள்ளது. இது அதன் பரந்துபட்ட மனிதாபிமானப் பணிகளுக்கான சிறந்த சான்றாகும்.

தற்போது  எமக்கு கிடைக்கப்பெற்ற விசாரணைகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த நிலையில், காணாமல் போனோர் பற்றிய விசாரணைகள் சுமுகமாகவும்  இடையூறின்றியும்  முன்னெடுப்பதற்கு  இடமளிக்கவேண்டும். அப்பொழுதே  அது அறிக்கையாகவும் ஆதாரமாகவும் இருக்கும். அதன் மூலமே  ஆணைக்குழுவின் பணியை செவ்வனே நிறைவேற்றமுடியும்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X