2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சமாதானத்துக்கு எதிராக யார் வந்தாலும் எதிர்ப்போம்: ராதா

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

உழைப்பதற்காக வந்தவர்கள் மலையக தமிழர்கள். அதேபோல் உரிமைக்காக போராடியவர்கள் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள். இவர்கள் அனைவரும் அமைதியையும் சமாதானத்தையும் வேண்டியே கடந்த தேர்தலில் வாக்களித்தனர். ஆகவே சமாதானத்துக்கு எதிராக யார் வந்தாலும் எதிர்ப்போம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் நேற்று (05) மாலை நடைபெற்ற தொழிநுட்ப ஆய்வு கூடத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

'ஒரு திரைப்படத்தின் முக்கியத்துவ பாத்திரம் வில்லன். அதேபோல் எமது நாட்டின் அரசியலில் தற்போது உள்ள வில்லன் பாத்திரத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுள்ளார்
திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரத்தினால் கதை விறுவிறுப்படைவது போலவும், சண்டைகள் உருவாவதுபோலவுமே எமது நாட்டின் அரசியலில் அவர் அவ்வப்போது தோன்றி கலகத்தினை விளைவிக்கமுனைகின்றார்' என தெரிவித்தார்.

'முன்னாள் கதாநாயகனாக இருந்த முன்னாள் ஜனாதிபதி இன்று வில்லனாக மாறிவிட்டார். அதனால் அடிக்கடி நாடாளுமன்றத்தையும் மக்களையும் குழப்பி, குழம்பிய குட்டையினுள் மீன் பிடிக்கப்பார்க்கின்றார் என்றார்.

ஆகவே, மக்கள் தெளிவாக செயற்பட்டு கடந்த காலத்தில் எவ்வாறு ஒட்டுமொத்தமாக வாக்களித்து நல்லாட்சியை உருவாக்கினீர்களோ அதில் இருந்து சற்றும் விலகாமால் செயற்பட்டு நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க பாடுபடவேண்டும் வேண்டும்' என குறிப்பிட்டார்.

'இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிறுபான்மை மக்கள் வாக்குகளை அள்ளி அள்ளி கொடுத்துள்ளோம். ஆகவே அவர்கள் எமக்கு தரவேண்டியதையும் அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும்.'

'இந்த நாட்டுக்கு உழைப்பதற்காக வந்தவர்கள் மலையக தமிழர்கள். அதேபோல் உரிமைக்காக போராடியவர்கள் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள். இவர்கள் அனைவரும் அமைதியையும் சமாதானத்தையும் வேண்டியே கடந்த தேர்தலில் வாக்களித்தனர். ஆகவே சமாதானத்துக்கு எதிராக யார் வந்தாலும் எதிர்ப்போம்.' என கூறினார்.

'மலையகத்தில் உள்ள தமிழர்கள் உரிமையயை  இழந்திருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கிலே உள்ள தமிழர்கள் உறவுகளை இழந்திருக்கின்றார்கள். ஆகவே மலையகத்திலே தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்கும்' என்றார்.

'மேலும் இராமகிருஷ்ணர் நாமத்தில் உள்ள இப்பாடசாலையின் தொழில்நுட்ப கூடம் என் கைகளால் திறக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன். இத்தொழில் நுட்ப கூடத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்தி தமது தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

தேசிய பாடசாலையின் அதிபர் எம்.கிருபைராஜா தலைமையில் சிவஸ்ரீ ப.கேதீஸ்வர குருக்களின் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில், வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், அம்பாறை மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினம், உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் அமைச்சருக்கான நினைவுச்சின்னம் பாடசாலை அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .