2025 ஜூன் 28, சனிக்கிழமை

உப மின் நிலையத்தை நிரந்தர மின்சார சேவையாக மாற்றக் கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஜூன் 26 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வாழும் 48,000 மக்களில் சுமார் 25,000 பேர் மின் பாவனையாளர்களாக இருக்கின்றபோதும் உப மின் நிலையத்தை நிரந்தர மின்சாரப் பாவனையாளர் சேவை நிலையமாக மாற்றியமைக்கலாம் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளருமான எஸ்.எல்.முனாஸ், வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அட்டாளைச்சேனை பிரதேசம் ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, ஆலிம்நகர், அஷ்ரப்நகர், சம்புநகர், ஆலம்குளம், மீலாத் நகர் மற்றும் தீகவாபி, போன்ற கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, கல்விக்கல்லூரி, கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி, சஹ்வா அரபுக்கல்லூரி, பெண்களுக்கான அரபுக்கல்லூரிகள், தேசிய பாடசாலை, மகளிர் உயர்தரப் பாடசாலை, மாகாவித்தியாலயங்கள், வித்தியாலயங்கள் போன்ற கல்வி நிறுவனங்களுடன் போட்யாட் சர்வதேச தொழிற்சாலை, சீரா சீமெந்துக் கலவைத் தொழிற்சாலை, தும்புத் தொழிற்சாலை, கொந்தறாத்து நிறுவனங்கள் என்று பல தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

இவ்வாறுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒரு மின்சார நிலையமின்றி மக்கள் வெளியூருக்குச் செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது என்பது ஒரு கவலைக்குரிய விடயமாகும். இதனை ஊர்பற்றுள்ள எந்த அரசியல்வாதிகளும் கல்விமான்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

எனவே, அன்றிருந்தவர்கள் செய்த தவறுகளை இனியும் இப்போதுள்ளவர்கள் செய்யக்கூடாது என்பதையும் கடந்த 25 வருட காலமாக இந்த உபமின் நிலையம் இயங்கிவருகின்றது என்பதை சுட்டிக்காட்டிவனாகவும் இதற்கு தகுந்த தீர்வை எடுக்க காலம் தாழ்த்தாது இந்த உப மின் நிலையத்தை உடனடியாக அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நன்மை கருதி நிரந்தர மின்சாரப் பாவனையாளர் சேவை நிலையமாக மாற்றித்தருமாறு உரிய அதிகாரிகளை மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .