2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'ஹக்கீமை ராஜித சேனாரத்ன விமர்சித்துள்ளமை கண்டனத்துக்குரியது'

Thipaan   / 2015 ஜூலை 02 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித், ஏ.ஜே.எம்.ஹனீபா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதில் தீவிரமாக செயற்பட்ட ராஜித சேனாரத்ன, எமது கட்சியின் தற்போதைய தலைவரான ரவூப் ஹக்கீமை வேண்டத்தகாத வார்த்தைகளினால் விமர்சித்துள்ளமை கண்டனத்துக்குரியது என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு  திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட விமர்சனக் கருத்துத் தொடர்பில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் கண்டன அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றினார்.

இவ்விடயம் தொடர்பில் முடிவுரை நிகழ்த்துகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,

'பதவிக்காக காலத்துக்கு காலம் கட்சி விட்டு கட்சி மாறுகின்ற அமைச்சர் ராஜித, எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், பதவிக்காக மதத்தைக் கூட மாற்றிக் கொள்வார் என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய கூற்றாகும்.

இது ஒட்டு முஸ்லிம்களையும் அவமானப்படுத்துகின்ற ஒரு விசமனத்தனமான கருத்தாகும்.

அமைச்சர் ராஜித, தான் எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியாமல் தடுமாறுகின்ற ஒரு மட்டரகமான அரசியல்வாதியாவார்.'

'முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பற்றி விமர்சிப்பதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. அதற்கு அவர் தகுதியற்றவர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் பலம் குறித்து ராஜித அச்சப்படுவதையே அவரது கருத்து வெளிப்படுத்துகிறது. சிலவேளை ஹக்கீம் பிரதமராகி விடுவாரோ என்று அவர் பயப்படுகிறார் போல் தெரிகிறது.'

'முஸ்லிம் தலைமைகளை எப்போதும் இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவதையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதனால் தான் மறைந்த தலைவர் அஷ்ரப்க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதில் அவர் மிகவும் தீவிரமாக முன்னிலை வகித்திருந்தார்.

பதவிகளுக்காக மதம் மாறிய வரலாறு முஸ்லிம்களிடம் கிடையாது. அது மாற்று சமூகத்தினரிடம் காணப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ பரம்பரையில் வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மஹிந்த ராஜபக்ஷ போன்றோரின் குடும்பங்கள் அதிகாரப் பதவிகளுக்காக பௌத்த மத்தத்துக்கு மாறியிருந்தனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட முடியும்' என்று முதல்வர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .