2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஊ.சே.லாப கொடுப்பனவுகளை வழங்க வேண்டும்'

Thipaan   / 2015 ஜூலை 06 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

தொடர்ச்சியான நிரந்தர சேவையில் உள்வாங்கப்பட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஊழியர் சேமலாப கொடுப்பனவுகளை உடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனும் கோரிக்கையினை அரசிடம் முன்வைக்கவுள்ளதாக தேசிய திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்க உபதலைவரும் அம்பாறை மாவட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்க தலைவருமான ஐ.எச்.எ.வஹாப் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலக மகாசங்க கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் உள்ளிட்ட சில கோரிக்கைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு சில மாதங்களில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஊழியர் சேமலாப கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், திடீரென இரத்துச் செய்யப்பட்டமை ஏமாற்றம் அளித்தாகவும் அதனை வழங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படவேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்களில் சுற்றுநிருபத்துக்கமைவாக கள உத்தியோகத்தர்கள்  மாதம் ஒருமுறை பிரதேச செயலகம் செல்லும்போது அம்பாறை மாவட்டத்தில் மட்டும் வாரத்துக்கு இருமுறையும், அதனையும் தாண்டி ஒரு சில பிரதேச செயலகங்களில் வாரத்தில்; ஐந்து நாட்களுக்கும் கையொப்பம் இட பிரதேச செயலாளர்களால் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது எந்தவகையிலும் நியாயமில்லை என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கூட்டத்தில் தீhமானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் மட்டும் முஸ்லிம் பிரதேசங்களில் வலய நாளாக வெள்ளிக்கிழமையை அமுல்படுத்துமாறு மாவட்ட திவிநெகும பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனும் தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டதாக விளக்கினார்.

தேர்தல் கடமைகளில் திவிநெகும உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பதுடன் முறையற்ற இடமாற்றங்கள் ரத்துச் செய்யப்படவேண்டும் எனும் தீர்மானங்களும் அனைவரது ஆதரவோடும் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த தீர்மானங்கள் அடங்கிய மகஜர்கள் ஜனாதிபதி, சமுர்த்தி அமைச்சின் செயலாளர், திவிநெகும திணைக்களப் பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டவர்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .