2025 மே 05, திங்கட்கிழமை

6 நாள்களின் பின்னர் சிறுமியின் சடலம் ஒப்படைப்பு

Princiya Dixci   / 2021 ஜூன் 25 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கடந்த வெள்ளிக்கிழமையன்று, தனது உயிரை மாய்த்துக் கொண்ட காரைதீவைச் சேர்ந்த சுகுமார் டினேகா என்ற 17 வயதுச் சிறுமியின் சடலம், ஆறாம் நாளன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறுமியின் சடலம், காரைதீவு இந்து மயானத்தில் நேற்று (24) காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 6 நாள்களாகக் கையளிக்கப்படாமல் இழுபறியிலுள்ள சிறுமியின் உடலை கையளிக்க அரசும், நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் மேற்கொண்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்தே, சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட காரைதீவைச் சேர்ந்த இந்தச் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை (18) சடலமாக மீட்கப்பட்டார். சடலம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.  

சடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி இப்ராஹிம் நஸ்ரூல் இஸ்லாம், உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

ஆனால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் குடும்பத்தினர் சொல்வதால் உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொள்ள முடியாது என்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் சட்ட வைத்திய அதிகாரி மறுத்து, இதை விசேட சட்ட வைத்திய அதிகாரிதான் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.

இருப்பினும், திடீர் மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பிரகாரம் உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொள்ள மாட்டார் என்றும் நீதவானின் உத்தரவு வேண்டும் என்றும் அம்பாறை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி மறுத்துவிட்டார். 

சம்மாந்துறை பொலிஸார், இதை எழுத்துமூலம் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரியபோதும் அவர் எழுத்தில் கொடுக்க மறுத்து விட்டார். சம்மாந்துறை நீதவான் ஐ. என். ரிஸ்வானுக்கு, பொலிஸார் விவரங்களைத் தெரிவித்தனர்.

இதைனையடுத்து, விசேட சட்ட வைத்திய அதிகாரி மன்றில் ஆஜராகி விளக்கம் தர வேண்டுமென, நீதவான் ஐ. என். ரிஸ்வான் உத்தரவிட்டார். ஆயினும், விசேட சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு ஆஜராகத் தவறியதால் பிடியாணை உத்தரவை, செவ்வாய்க்கிழமை (22) நீதவான் பிறப்பித்தார்.

இந்நிலையிலேயே,   அம்பாறை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி, புதன்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சட்ட ஏற்பாடுகளை நீதவான் எடுத்துரைத்து, இவரைக் கடுமையாக எச்சரித்தார்.

இனி மேல் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்து மன்னிப்புக் கோரிய விசேட சட்ட வைத்திய அதிகாரி, காரைதீவு சிறுமியின் உடலத்தின் மீதான பரிசோதனையை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதனையடுத்து, நேற்று முன்தினம் (23) காலை அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அன்று மாலை உறவினரிடம் சடலம் கையளிக்கப்பட்டது. மறுநாள் அதாவது நேற்று (24) சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X