2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அம்பாறையில் எழுத்தறிவு தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்,ஐ.ஏ.ஸிறாஜ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்,பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம். ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

சம்மாந்தறை கல்வி வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் பேரணி நடைபெற்றது.

பாடசாலையில் இருந்து ஆரம்பமான இப்பேரணி வேப்பையடி பிரதான வீதியின் ஊடாக பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நாவிதன்வெளி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, வேப்பையடியில் உள்ள சங்க சபைகளின் தலைவர்கள், செயலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, 'எழுத்தறிவினூடாக ஒரு நிலை பேறான சமுதாயம்' எனும் தொனிப்பொருளில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக முறைசாரா மற்றும் விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று காதிரியா வித்தியாலயத்தில் பேரணி நடைபெற்றது.

உதவி அதிபர் யூ.எல்.ஏ.ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் பொதுமக்களிடம் சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி விசேடமாக வெளியீட்டு வைக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை மாணவர்கள் விநியோகித்தனர்.

பின்னர் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் சென்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசீம் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான ஏ.எம்.அஹமட்லெவ்வை, ஏ.எச்.பௌஸ், கணக்காளர் கே.றிஸ்விஎஹ்சர்,உதவி கல்விப் பணிப்பாளர்களான எம்.எல்.எம்.லாபீர், எம்.ஏ.எம்.அஸ்ஹர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல்.நஹுர்த்தம்பி ஆகியோரிடம் துண்டுப்பிரசுரத்தை மாணவர்கள் வழங்கினர்.

இதன்போது, அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் முறைசாரா பிரிவுக்கான உதவிக் கல்வி பணிப்பாளர் எம்.எல்.எம்.லாபீர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

நாம் நமது சமுதாயத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் உதவி செய்வது எமது அனைவரினதும் கடமையாகும்.

கல்வியின் வளர்ச்சிக்கு இரவு, பகல் பாராது நமது சமூகத்தவர்கள் கல்வியலாளர்கள் புத்துஜீவிகள் படித்தவர்கள் முழு மனதுடன் உழைப்பது காலத்தின் தேவையாகும் என்றார்.

மேலும்,'எழுத்தறிவு மற்றும் உறுதிமிக்க சமூகம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாத்தில்  மாணவர்களுக்கு எழுத்தறிவு தொடர்பாக  விழிப்பூட்டும் விஷேட உரை  சிரேஷ்ட  ஆசிரியர் எம்.ஐ.எம்.காசீம்மால் வழங்கப்பட்டதுடன்,அது தொடர்பான சின்னம் சகல மாணவர்களுக்கு அணிவிக்கப்பட்டு மாணவர் மத்தியில் வினா விடைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன

பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை  வலயக் கல்விப் பணிமனையின் முறை சாரா கல்விப்பிரிவில் கடமையாற்றும் ஜெய்க்கா நிறுவனத்தின் ஜப்பான் நாட்டு பிரதிநிதி சௌரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்தார்.

இதேவேளை,நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திலும் சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .