2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆவணங்களுக்கு தீ; சந்தேசநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Freelancer   / 2023 மார்ச் 01 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற ஆவணக் காப்பகத்தை தீயிட்டு எரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 03 சந்தேகநபர்களையும் மீண்டும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் தெசீபா ரஜீவன், நேற்று (28) உத்தரவிட்டார்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் புதன்கிழமை (21) அதிகாலை வேளையில் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு வைக்கப்பட்ட தீயினால் நீதிமன்றின் வழக்கு பதிவேட்டு அறை மற்றும் திறந்த நீதிமன்றம் போன்ற பல பிரிவுகளிலுள்ள ஆவணக் கோப்புகள் முற்றாக எரிந்துள்ளன.

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா பதிவுகளில் 03 நபர்கள் முகத்தை மூடியவாறு நீதிமன்ற வளாகத்தில் உள் நுழைந்து கட்டத்துக்கு தீ வைத்து விட்டு, தப்பியோடும் காட்சி பதிவாகியிருந்தது.

இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்வதற்கு விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 28, 24 மற்றும் 19 வயதுடைய 03 சந்தேகநபர்கள் கல்முனை மற்றும் பெரியநீலாவனை பிரதேசத்தில் மறைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவ் வழக்கு நேற்று (28) மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் தெசீபா ரஜீவன், சந்தேகதேகநபர்களை மீண்டும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல் தொடர்பான விவரம் மற்றும் வங்கிக் கணக்கறிக்கை விவரம் ஆகியவற்றை பெற்று, மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .