அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாகக் கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாகப் புதிதாக சிலருக்கு கிழக்கு மாகாண சபையால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, மாநகர சபையின் தற்காலிக ஊழியர்கள், இன்று (01) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டதுடன், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் கல்முனை மாநகர சபையின் அனைத்துப் பிரிவுகளினதும் பணிகள் முடங்கியதுடன், திண்மக்கழிவகற்றல் உள்ளிட்ட சேவைகள் எவையும் இடம்பெறவில்லை.
அத்துடன், மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள கல்முனை பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
கல்முனை மாநகர சபை தற்காலிக ஊழியர்களின் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் அங்கு வருகை தந்திருந்ததுடன், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீபும் அங்கு வருகை தந்து, ஊழியர்களின் ஆதங்கங்களைக் கேட்டறிந்து கொண்டதுடன், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் இப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பேன் என்று உறுதியளித்தார்.
குறித்த ஊழியர்கள், புதிய நியமனங்களைக் கண்டித்தும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஊழியர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்;
"கல்முனை மாநகர சயையில் நாங்கள் 102 பேர், கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாகக் கடமையாற்றி வருகின்றோம்.
“என்றோ ஒரு நாள் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் கடமையாற்றி வருகின்ற எமக்கு அநீதியிழைக்கும் வகையில், அரசியல் ரீதியாக கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட உத்தரவின் பேரில், புதிதாக சிலருக்கு நிரந்தர தொழில் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இது எமது வயிற்றில் அடிக்கும் மனிதாபிமானமற்ற செயற்பாடாகும்.
“இந்த அரசியல் ரீதியான நியமன நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறான கண்மூடித்தனமான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
“ஆகையினால் புதிய நியமனத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு வேண்டுகின்றோம். இல்லையேல் எமது போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தனர்.

24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026