2025 மே 05, திங்கட்கிழமை

சுற்றாடல் உரிமத்தை உறுதி செய்வதற்கு இரு வார கால அவகாசம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜனவரி 28 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணையில் இயங்கி வருகின்ற அரிசி ஆலைகளின் சுற்றாடல் உரிமம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட விசேட கூட்டம், கல்முனை மாநகர சபை மேயர் செயலகத்தில் நேற்று (27) மாலை நடைபெற்றது.

மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், சுகாதாரப் பிரிவுத் தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்களான எம்.சி.எம்.றியாஸ், திருமதி பி.எஸ்.குமாரன், கல்முனை பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.சம்சுதீன் ஆகியோரும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது சுற்றாடலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் குறித்த அரிசி ஆலைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

பொதுமக்களின் முறைப்பாட்டுகளைத் தொடர்ந்தே, இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பொதுமக்களின் நலன்களுக்கு எந்தரீதியிலும் பாதிப்பில்லாத வகையில் சுற்றாடல் அதிகார சபையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, அரிசி ஆலைகளின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, மேயர்  இதன்போது வலியுறுத்தினார்.

அரிசி ஆலைகளில் இருந்து வெளிப்படும் புகை, கழிவு நீர், தூசுகள் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பொறிமுறையின் கீழ் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தால் உரிய தொழில்நுட்பங்களுடன் இப்பொறிமுறையை செய்துகொள்ள வேண்டும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர் எம்.சி.எம்.றியாஸ் அறிவுறுத்தினார்.

உரிய பொறிமுறையின் கீழ் செயற்படாத அரிசி ஆலைகள் எக்காரணம் கொண்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் இது விடயத்தில் எவ்விதத் தளர்வையும் காட்ட முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மேயர் வழங்கிய ஆலோசனைக்கமைவாக, கூடிய விரைவாக இதனை செய்து முடிப்பதற்கு அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததுடன், இதனை சிறப்பாக செய்து முடிப்பதற்கு இரு வார கால அவகாசத்தை வழங்குவதற்கு சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உடன்பட்டனர்.

பெரிய நீலாவணை பகுதியில் 12 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X