2025 ஜூலை 02, புதன்கிழமை

’தொற்றாளர்கள் இரணவிலவுக்கு அனுப்பப்படுவர்’

Editorial   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாறுக் ஷிஹான்

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மூவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்றிரவு சிலாபம் பகுதியில் அமைந்துள்ள இரணவில கொவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவுக்கு அனுப்பவுள்ளதாகவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக இன்று (18) மாலை 6 மணியளவில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொர்ந்தும் அவர் கூறுகையில்,

“எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் ஒலுவில் பகுதியில் கடற்படையினரால் துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் 80பேர் கொழும்பு, ஜாஎல பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இருந்தார்கள்.

“முதலாவது தொகுதியில் 28 பேரும் இரண்டாவது தொகுதியில் 52 பேரும் ஆக 80 பேர் கொண்டுவரப்பட்டார்கள். இந்த முதலாவது தொகுதியில் கொண்டு வரப்பட்டிருந்த 28 பேரில் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளமை கண்டறியப்பட்டு ஏற்கெனவே சிலாபத்தில் அமைந்துள்ள இரணவில பகுதியில் உள்ள பராமரிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து நேற்று நாங்கள் முதல் தொகுதியில் வந்த 23 பேருக்கான மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பினோம்.

“அதன் மூலமாக அந்த 23 பேரில் 3 பேருக்கு நோய் தொற்று உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆகவே அந்த 23 பேரில் அந்த மூவரையும் நாங்கள் தனிமைப்படுத்தி தற்போது வைத்திருக்கின்றோம். அவர்களை இன்னும் ஒரு மணி நேரத்தில் நாங்கள் சிலாபத்தில் அமைந்துள்ள இரணவில பகுதியில் அமைந்துள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்ப இருக்கின்றோம்.

“அங்கு அவர்கள் பராமரிக்கப்படுவார்கள். ஏனைய 52 பேருக்குமான ஆய்வுகள் திங்கட்கிழமை (20) மாதிரிகள் எடுக்கப்பட்டு, கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படும்” என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .