2024 மே 03, வெள்ளிக்கிழமை

பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம்; இருவர் கைது

Freelancer   / 2023 ஏப்ரல் 27 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

இலஞ்சம் கொடுத்து பொலிஸ் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளும்  நடைபெற்று வருகின்றன.

கடந்த 21ஆம் திகதி, ஏறாவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினருக்கு  தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது.

அதாவது, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலையில் தரித்து நிற்பதாகவும் குறித்த ரயில் பயணிக்கின்ற தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்து கொண்டிருப்பதாகவும்  தகவல் கிடைத்தது. 

குறித்த சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழு, ஏற்கெனவே வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவினருக்கும் ஐயங்கேணி பகுதிச் சேர்ந்த  இளைஞர் குழுவுக்கும் முன்விரோத மோதலின்  தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்றுளள்தாகவும் ஐயங்கேணி பகுதியில் இருந்து வாள், கத்தி உள்ளிட்ட  ஆயுதங்களுடன் வந்த குழுவினர், வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவினருடன் தாக்குதலின் ஈடுபட்ட நிலையில், இரு தரப்பினரிலும் சிலர் காயமடைந்திருந்தனர்.

இத்தாக்குதலின் போது, ஐயங்கேணி பகுதியில் இருந்து வந்தாறுமூலை பகுதிக்கு தாக்குதலுக்காக வருகை தந்த குழுவினர்,  தப்பிசட சென்ற நிலையில் அவர்கள் வருகை தந்த  மோட்டார் சைக்கிள் ஒன்று  கைவிடப்பட்டிருந்தது.  கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளை வந்தாறுமூலை பகுதி இளைஞர் குழுவினால்   ரயில் தண்டவாளத்தில் வைத்து எரிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்னவின் கட்டளைக்கமைய, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்தவின் ஆலோசனைக்கமைய, ஏறாவூர் பொலிஸ் நிலைய  பதில் பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர்  வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டனர். 

மோட்டார் சைக்கிளை தீ வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 3 சந்தேகநபர்கள் உட்பட  தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரையும்  கைது செய்து,  ஏறாவூர் நீதிமன்றத்தில் அன்றைய தினம் ஆஜர் செய்யப்பட்ட  நிலையில், தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்த பொலிஸ் பரிசோதகர்  வை.விஜயராஜாவிற்கு புதன்கிழமை (25) மாலை குறித்த தாக்குதல் சம்பவத்தில்  ஐயங்கேணி பகுதியில் இருந்து வந்து வாள்வெட்டு  தாக்குதல் மேற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்காக  முன் ஆயத்தங்களை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிப்பதற்காக அவரது  45 வயது மதிக்கத்தக்க  தாய் மற்றும் 23 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவரும்  20 ஆயிரம் ரூபாய் பணத்தை பொலிஸ் பரிசோதகர்  வை.விஜயராஜாவிற்கு  இலஞ்சமாக வழங்கி, கடமைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .