2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முறையாக செயற்படாத திண்மக் கழிவகற்றல் நிலையத்தால் மக்கள் அவதி

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை,ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் அமைக்கப்பட்ட திண்மக் கழிவகற்றல் நிலையமானது முறையாக செயற்படாமையின்மையால் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு யுனெப்ஸ் நிறுவனத்தால் மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்நிலையம் தற்போது கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது.இதனால் மழை காலங்களில் இப்பகுதியில் தேங்கும் நீர் வடிந்தோடி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாய்காலினுள் உள்ள நீருடன் சேர்ந்து சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு பலமுறை கொண்டுவரப்பட் போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தா.சந்திரகுமார் கூறுகையில்,

திண்மக் கழிவுகளை சேதனப் பசளையாக மாற்றும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.தான் பதவி வகித்த காலத்தில் இப்பிரச்சினை தொடர்பாக பலமுறை சபையில் எடுத்து கூறிய போதும்,அச்சபையின் தவிசாளரோ அச்சபையோ கவனம் செலுத்தமால் புறந்தள்ளியது.

அத்தோடு சுற்றுப்புற வேலிகள் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உடைந்துள்ளதால் அதனூடாக நாய்கள் நுழைந்து கழிவுகளை அயல் இடங்களுக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆலய தலைவர் ஜே.குமாரசிங்கம் கூறுகையில்,

திண்மக் கழிவகற்றல் நிலையமானது மயானத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்டதன் பின்னர் மயானத்தின் எல்லை சுருக்கப்பட்டதுடன் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு முறையாக இத்திட்டம் அமுல்படுத்தாமையினால் குப்பை கூளங்கள் நிறைந்து துர்நாற்றம் வீசுவதாகவும்  துர்நாற்றத்தின் மத்தியிலேயே இம்மயானத்தில் இடம்பெறும் இறுதிசடங்குகளில் மக்கள் கலந்து கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதேச சபை செயலாளர் திருமதி. கமலநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, 

இப்பிரச்சினை தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளரூடாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இத்திண்மக்கழிவுகளை சேதனப்பசளையாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டம் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதியை எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனவரி மாதம் அளவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் இங்கு தேங்கும் கழிவு நீரினை வாய்காலுக்குள் செல்லாமால் வயல் வெளிகளுக்குள் செல்வதற்கான நடவடிக்கை உடன் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .