Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பாறுக் ஷிஹான்
தனது கோழிக் கடையை சுத்தம் செய்யும் போது மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் செவ்வாய்க்கிழமை (21) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் மின்சாரத்தால் தாக்கப்பட்ட நிலையில் அயலில் உள்ளவர்களினால் உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இல. 202/1, மல் 13ம் வீதி, மலையடிக்கிரமம், சம்மந்துறை முகவரியைச் சேர்ந்த 42 வயதுடைய கலந்தர் லெப்பை ரமீஸ் என்ற குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .