2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காதலருடன் தப்பிச் செல்ல முயன்ற பாக். பெண் கைது

Freelancer   / 2023 ஜூலை 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலருடன் புதுடெல்லிக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சீமா குலாமை ஹைதரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர் சீமா ஹைதர் (27). இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீமா ஹைதர், ஒன்-லைனில் பப்ஜி விளையாட்டை விளையாடி வந்தார்.

அப்போது புதுடெல்லி அருகேயுள்ள உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் (22) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகவே சமூக வலைதளம் வாயிலாக காதலித்து வந்தனர். அவ்வப்போது நேபாளத்தில் இருவரும் நேரில் சந்தித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து காதலருடன் இந்தியாவில் நிரந்தரமாக தங்க முடிவு செய்த சீமா ஹைதர், முதல் கணவரை பிரிந்து கடந்த மே மாதம் நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தார்.   சச்சினின் வீட்டில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அவர் வசித்து வந்தார். அவர் குறித்து சந்தேகம் எழுந்ததால் அப்பகுதி மக்கள் பொலிஸில் தகவல் தெரிவித்தனர்.

பொலிஸார் தேடுவதை அறிந்ததும் சச்சினும், சீமா ஹைதரும் ஹரியாணாவுக்கு தப்பிச் சென்றனர். அங்கு கைது செய்யப்பட்டனர். சீமா, அவரது 4 குழந்தைகள் ஆகியோரின் கடவுச்சீட்டுகள், அலைபேசிகளை பொலிஸார் ஏற்கெனவே பறிமுதல் செய்துள்ளனர்   பாகிஸ்தான் இராணுவம், ஐஎஸ்ஐ ஆகியவற்றுடன் அவருக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சீமாவின் செல்போனில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த செல்போன்களை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீமாவின் அண்ணன், மாமா ஆகியோர் பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X