A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 11 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவண்ணாமலை
தொண்டையில் தென்னம்பூ சிக்கி ஆபத்தான நிலையிலிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின் உயிரைத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலை வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து வைத்தியசாலை காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் எம்ஆர்கே ராஜாசெல்வம் கூறும்போது;
“திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு மூக்கு மற்றும் வாயில் நுரையுடன், சுயநினைவு இல்லாமல் ஒன்றரை வயதுக் குழந்தை ரோஹித் என்பவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டார்.
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தில் இருந்து ஆபத்தான நிலையில் குழந்தையைக் கொண்டுவந்த தாய் நந்தினி உள்ளிட்டவர்கள், "ஏதோ ஒரு பொருளை மென்று தின்றபோது, மூச்சு, பேச்சு இல்லாமல் போனதாகவும் அது என்ன பொருள் எனத் தெரியவில்லை" என்றும் தெரிவித்தனர். நாடித் துடிப்பு குறைந்ததால், கண்முன்னே குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது தெரிந்தது.
இதனால், குழந்தையை அறுவை சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்று, அதன் பிறகு சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலை இல்லை. மிக மோசமான நிலையில் குழந்தை இருந்தது. இதனால், அறுவை சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்வதைத் தவிர்த்து, அவசர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்த மயக்க மருந்து டொக்டர் ஆனந்த்ராஜ் தலைமையிலான குழுவை வரவழைத்து, சிகிச்சையைத் தொடங்கினோம்.
LARYNGO SCOPE முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டது. அந்த சிகிச்சை மூலம் வாயைத் திறந்து பரிசோதனை செய்து பார்த்தபோது, பச்சை நிறத்தில் ஏதோ ஒரு பொருள், தொண்டைக் குழியில் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. அதனை எடுக்க முயன்றபோது, தொண்டைப் பகுதியில் உருண்டது. குழந்தையின் நிலையும் ஆபத்தை நோக்கிச் சென்றது.
பின்னர், கடுமையான முயற்சிக்குப் பிறகு வாய் வழியாகவே, தொண்டைப் பகுதியில் சிக்கிய பொருளை, வெளியே எடுத்தோம். அதனைப் பார்த்தபோது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. குழந்தையின் தொண்டைக் குழியில் தென்னம்பூ சிக்கிக் கொண்டிருந்தது. 10 நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு, குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
பின்னர், செயற்கை சுவாசம் கொடுத்து, 20 நிமிடங்கள் எங்களது கண்காணிப்பில் வைத்திருந்தோம். அதன் பிறகு குழந்தையின் நிலையில் முன்னேற்றம் தெரிந்ததால், வார்டுக்கு அனுப்பி வைத்தோம். குழந்தை, இன்று நன்றாக இருக்கிறார்.
குழந்தையைக் காப்பாற்ற மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை போராடினோம். என்னுடைய 15 ஆண்டு காலப் பணியில், இப்படியொரு சம்பவத்தைப் பார்த்ததில்லை. இறப்பை நோக்கிச் சென்ற குழந்தையைக் காப்பாற்றியது மனதுக்கு நிறைவைக் கொடுக்கிறது” என்றார்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த மருத்துவர்களுக்கு, தாய் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago