2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பாட்டியின் கைரேகையில் விளையாடிய பேத்தி

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 16 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெற்று காகிதத்தில் கைரேகை பெற்று அபகரித்த சொத்துகளை மீட்கக் கோரி மூதாட்டி தொடர்ந்த வழக்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி இறுதி முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாலம்மாள் (95) மூதாட்டி தாக்கல் செய்த மனுவில், ‘எனது மகள் வழி முதல் பேத்தியான லோகநாயகி, வெற்று காகிதத்தில் கைவிரல் ரேகைகளை வாங்கி, எனது சொத்துகளை அவள் பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளாள்.

இதனால், இது தொடர்பான பத்திரப்பதிவை ரத்து செய்த நான், எனது சொத்துகளை எனது மகள் பெயரிலும், இரண்டாவது பேத்தி பெயரிலும் எழுதி வைத்தேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில், லோகநாயகி அபகரித்த சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் நான் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தேன்.

அந்தப் புகார் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தனது புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மூதாட்டி சாலம்மாள் கொடுத்த புகாரின்பேரில் இரண்டு தரப்பினரையும் அழைத்து, அவர்களின் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளித்து, 4 வாரங்களில் சட்டப்படி இறுதி முடிவெடுக்க வேண்டும்’ என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .