2026 மார்ச் 07, சனிக்கிழமை

பிரதமர் மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 01 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு;

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

கபில் சிபல், சசி தரூர், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி தலைமையின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஜம்முவில் நேற்று முன்தினம் 23 தலைவர்களும் ஒன்றுகூடினர். அப்போது அவர்கள் கூறும்போது, "காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது, கட்சியை பலப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஜம்முவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:

பல்வேறு தலைவர்களின் சிறப்பு குணாதிசயங்களை கண்டுவியந்திருக்கிறேன். நான் கிராமத்தைச் சேர்ந்தவன். பிரதமர் மோடியும் கிராமத்தில் இருந்து தலைவராக உருவெடுத்தவர். எங்களுக்குள் அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் பிரதமர் மோடியின் குணாதிசயத்தைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர் தனது பூர்விகத்தை மறைக்க விரும்பவில்லை. தேநீர் விற்றதை பகிரங்கமாக கூறியுள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை எம்.பி.பதவிக் காலம் கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி  நிறைவு பெற்றது. அதன்போது மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "எனது நெருங்கிய நண்பர் ஆசாத். அவருக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .