2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

’’உயிரற்ற குழந்தையை நீட்டினார்கள்’’: நீதிமன்றத்தில் தாய் கதறல்

Editorial   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிடப்பட்ட வீட்டுப் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்களால், ஏழு நாட்களே ஆன பாப்பி என்ற பெண் குழந்தை உயிரிழந்தது. இது குறித்த மரண விசாரணை 'பார்னெட்' (Barnet) மரண விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. லண்டனில் 'எட்ஜ்வேர்' (Edgware) மருத்துவச்சிகள் குழுவின் மேற்பார்வையில் இந்த வீட்டுப்  பிரசவம் முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தாய் ஜெம்மா லோமஸ் அளித்த திடுக்கிடும் வாக்குமூலத்தில் "குழந்தை பிறந்தபோது அது நீல நிறத்தில் அசைவற்று இருந்தது. அந்த மருத்துவச்சி குழந்தையை என் மார்பின் மீது வைத்து, 'இதோ உன் குழந்தை' என்று சாதாரணமாகக் கூறினார். நீல நிறத்தில் அசைவற்று இருந்த குழந்தையின் வாயிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது. ஒரு பிணத்தை என்னிடம் ஒப்படைத்தது போன்ற அந்த கொடூரமான நினைவுகள் என் மனதை விட்டு நீங்கவில்லை."

"குழந்தையிடம் ஏதோ கோளாறு இருப்பதாக நான் கத்தினேன். ஆனால் அங்கிருந்த மருத்துவச்சிகள் எந்தவித அவசரமும் காட்டாமல் மிகவும் மெதுவாகச் செயல்பட்டனர். அவர்கள் விரைவாகச் செயல்படவில்லை."

குழந்தை பிறந்த பிறகு சுமார் ஏழு முதல் எட்டு நிமிடங்கள் வரை மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லவில்லை (Oxygen starvation) என்பதை லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ஜெம்மா லோமஸின் முதல் குழந்தை அறுவை சிகிச்சை (C-Section) மூலம் பிறந்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது குழந்தையை வீட்டில் இயற்கையான முறையில் (VBAC - Vaginal Birth After Caesarean) பெற்றெடுப்பதில் உள்ள ஆபத்துகள் குறித்து தலைமை மருத்துவச்சி அலைஸ் போர்டுமேன் சரியாக விளக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

சிசேரியனுக்குப் பிறகு வீட்டில் பிரசவம் பார்ப்பது அதிக ஆபத்தானது என்று தெரிந்தும், அதற்கான அபாயங்கள் குறித்து தாயிடம் ஆலோசனை நடத்தாமல் மருத்துவச்சிகள் குழு ஊக்கப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தத் துயரமான சம்பவம், மருத்துவத்துறையில் நிலவும் அலட்சியம் மற்றும் முறையான ஆலோசனையின்மை எவ்வாறு ஒரு பிஞ்சுயிரைப் பறிக்கும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .