2025 மே 08, வியாழக்கிழமை

ஜப்பானில் பரவும் புது பக்டீரியா: 1000 பேர் பாதிப்பு

Editorial   / 2024 ஜூன் 18 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டோக்கியோ:  'குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ்' எனப்படும் இறைச்சியை உண்ணும் அரிதான பக்டீரியா ஜப்பானில் பரவி வருகிறது. இந்த பக்டீரியா தொற்றை கவனிக்காமல் விட்டால், இரண்டு நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பக்டீரியாவினால் இதுவரையிலும் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் பக்டீரியா 1999ல் ஜப்பானில் கண்டறியப்பட்டது. இந்த வகை தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி பழகுபவர்களுக்கும், அவர்களுடன் உணவு மற்றும் பானங்களை பகிர்ந்து உண்பவர்களுக்கும் எளிதில் பாதிப்பு ஏற்படுவதாக ஜப்பான் தொற்று நோயியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த வகை பக்டீரியா தொற்று பொதுவாக வீக்கம் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது; மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்னைகள், உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது ஜப்பானில் பக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000த்தை நெருங்கியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட அதிகம் என அந்நாட்டு தேசிய தொற்று நோயியல் மையம் தெரிவித்து உள்ளது.

இறைச்சி உண்ணும் பக்டீரியா குறித்து, டோக்கியோ மருத்துவ பல்கலைக் கழகத்தின் தொற்று நோயியல் பேராசிரியர் கென்கிகுச்சி கூறியதாவது:

இந்த பக்டீரியா தொற்றுக்கு ஆளாகும் நபர்களில் பெரும்பாலானோரின் இறப்பு, 48 மணி நேரத்திற்குள் நிகழ்கிறது. நோயாளிகளுக்கு முதலில் காலில் வீக்கம் காணப்படுகிறது; சில மணி நேரங்களில் அது முழங்கால் வரை விரிவடைகிறது. 48 மணி நேரத்திற்குள் அவர்கள் இறக்கின்றனர்.

ஜப்பானில் தற்போதைய தொற்று நோய் விகிதப்படி, இந்த பக்டீரியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2,500ஐ எட்டக்கூடும். அதிர்ச்சியூட்டும் வகையில் அவர்களில் 30 சதவீதம் பேர் இறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X