2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணிநேரம் முடக்கம்

J.A. George   / 2021 ஜனவரி 07 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது.  இதில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். 

இவர் வருகிற 20ஆம் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

ஜோ பைடன் வரும் 20ஆம் திகதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.  

பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் வழங்குவதற்கான ஒப்புதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் பணிகள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்து வருகின்றன.  

இதற்காக உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்.  இந்நிலையில், நாடாளுமன்றத்தின் முன் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.  அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். கலைய மறுத்த போராட்டக்காரர்கள் மீது துப்பாகி சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது.

இதனிடையே ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள். அமைதி காக்கவும் என பதிவிட்டுள்ளார்.

இந்த போராட்டம் பற்றி ட்ரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன.  இதனால், தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் அதனை கட்டுப்படுத்துவதற்காக டிரம்பின் 3 பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.  அவற்றில் தனது ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, குடிமக்கள் ஒற்றுமை அல்லது வன்முறை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்புடைய டுவிட்டரின் கொள்கை விதிகளை மீறும் வகையிலான செயல்கள் வருங்காலத்தில் நடைபெற்றால், ட்ரம்பின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்து உள்ளது.

பேஸ்புக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் உரையாற்றிய வீடியோவை நீக்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .