2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரேஸிலில் ஜனாதிபதியானார் ‘அயன மண்டல ட்ரம்ப்’

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் 4ஆவது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலின் ஜனாதிபதியாக, கடும்போக்கு வலதுசாரியான ஜெய்ர் பொல்சொனாரோ, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (28) நடைபெற்ற, ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாங்கட்ட வாக்கெடுப்பில் இலகுவாக வெற்றிபெற்றே, அவர் இவ்வெற்றியைப் பெற்றார்.

“அயன மண்டல ட்ரம்ப்” என அழைக்கப்படும் இவர், 55.13 சதவீதமான வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் பெர்ணான்டோ ஹடட், 44.87 சதவீத வாக்குகளையே பெற்றார்.

பிரேஸிலில் இராணுவ ஆட்சி நிலவிய போது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளுக்கு ஆதரவு; பெண்களுக்கு எதிரான கருத்துகள்; இனவாதக் கருத்துகள்; சமபாலுறவாளர்களுக்கு எதிரான கருத்துகள் போன்றவற்றை வெளிப்படுத்தி, சர்வதேச அளவில் விமர்சனங்களைச் சந்தித்திருந்தாலும், ஊழலால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்த பிரேஸில் மக்கள், ஊழலுக்கெதிராகச் செயற்படப் போவதாகக் கூறிய பொல்சொனாரோவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

வெற்றியைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “நாமனைவரும் இணைந்து, பிரேஸிலின் எதிர்காலத்தை மாற்றுவோம்” என்று தெரிவித்தார்.

பைபிளையும் அரசமைப்பையும் வைத்துக்கொண்டு ஆட்சிசெய்யப் போவதாகத் தெரிவித்த அவர், “சோஷலிசம், கொம்யூனிசம், பரப்பியல்வாதம், இடதுசாரித்துவத்தின் கடும்போக்கு நிலைமை ஆகியவற்றுடன் நாம் தொடர்ந்தும் இணைந்து செயற்பட முடியாது” என்று தெரிவித்தார்.

ஜனாதிபதியாகத் தெரிவாகிய அவர், அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல், பதவிக்கு வரவுள்ளார்.

பொல்சொனாரோவின் கடும்போக்கான கருத்துகள் காரணமாக, “அயன மண்டல ட்ரம்ப்” என அவர் அழைக்கப்படும் நிலையில், அவரின் வெற்றியைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவருக்கு அழைப்பெடுத்து வாழ்த்துத் தெரிவித்தமை, அதிக கவனத்தை ஈர்த்தது.

இரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காக, இரு தலைவர்களும் இணைந்து செயற்படச் சம்மதித்தனர் என, வெள்ளை மாளிகை தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X