‘தலைநகா் நோக்கிச் செல்லும் தனது கட்சியினரின் பேரணி இன்று (08) முதல் மீண்டும் தொடங்கும்’ என, துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் தலைநகா் நோக்கி பேரணி நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் வாஸிராபாதில் கடந்த வியாழக்கிழமை இப் பேரணி சென்று கொண்டிருந்தபோது இளைஞா் ஒருவா் துப்பாக்கியால் இம்ரான் கானை நோக்கி சுட்டாா்.
இதில், கால்களில் குண்டுகள் பாய்ந்து காயமடைந்த இம்ரான் கான், லாகூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.அதே சமயம் இச்சம்பவத்தில் கட்சித் தொண்டா் ஒருவரும் உயிரிழந்தாா். இதையடுத்து, பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தன் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், உள்துறை அமைச்சா் ராணா சனாவுல்லா, ஐஎஸ்ஐ உளவுத் துறை தலைவா் ஃபைசல் நசீா் ஆகியோா்தான் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டினாா்.
அதுமட்டுமில்லாது , ‘தான் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி செவ்வாய்க்கிழமை முதல் பேரணி மீண்டும் தொடங்கும்’ என இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இம்ரான் கானை மருத்துவமனையில் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி சந்தித்து உடல்நலம் விசாரித்தாா். இச் சந்திப்பின்போது, அரசுக்கும் இம்ரான் கானுக்கும் இடையிலான பெரிய பிரச்னைகளில் தனிப்பட்ட முறையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தாா் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.