2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

வளர்ப்பு நாய் நக்கியதால் கை, கால்களை இழந்த பெண்

S.Renuka   / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வம்சாவளியை சேர்ந்த 52 வயதான மன்ஜீத் சங்கா இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மன்ஜீத் சங்கா கையில் ஒரு சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் மன்ஜீத் தனது செல்ல நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நாய் அவரது காயத்தை நக்கியுள்ளது.

அடுத்த நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு மறுநாளே அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குக் கடுமையான 'Sepsis' தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

மன்ஜீத் சுமார் 32 வாரங்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார். கோமா நிலையில் இருந்தபோது, அவரது இதயம் 6 முறை துடிப்பதை நிறுத்தியது.

அவரது உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, மருத்துவர்கள் அவரது இரண்டு கைகளையும், முழங்கால்களுக்கு கீழே, இரண்டு கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

கடந்த பெப்ரவரி 18-ஆம் திகதி மன்ஜீத் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது அவர் செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்காக நிதி திரட்டி வருகிறார்.

செல்லப் பிராணிகளின் உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள், மனிதர்களின் திறந்த காயங்கள் வழியாக உடலில் நுழையும்போது இத்தகைய உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .