2025 ஜூலை 09, புதன்கிழமை

கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் சம்பியன்

Thipaan   / 2014 செப்டெம்பர் 28 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.றம்ஸான், ஏ.எஸ்.எம்.முஜாஹித்


காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர் பேரின்பம் சர்மேந்திரன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் சுவீகரித்து சம்பியனானது.

அணிக்கு 11 பேர் கொண்ட 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட  டுவெண்டி 20 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 32 கழகங்கள் பங்குபற்றின.

இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது.

இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட இரு கழகங்களிலும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் 15.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் தொழில், தொழில் உறவுகள் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கலாநிதி றியர்அட்மிரல் சரத்வீரசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெட்ணம், முன்னாள் காரைதீவு பிரதேச செயலாளர் எம்.இராமகிருஷ்ணன், உதவிக் கல்விப் பணிப்பாளரும், மூத்த ஊடகவியலாளருமான வீ.ரீ.சகாதேவராஜா, காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஆர்.பாஸ்கரன் உள்ளிட்டோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது கழக வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு தொடர் நாயகனுக்கான கிண்ணம், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனுக்கான கிண்ணம் என்பன கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .