2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'மட்டக்களப்பு, தரமான கபடி வீரர்களைக் கொண்ட மாவட்டமாக திகழ்கிறது'

Thipaan   / 2015 மே 18 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கையில் தரமான கபடி வீரர்களைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார், சனிக்கிழமை(17) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் 20வருடங்களுக்கு பின்னர் கபடி சங்கம் அமைக்கும் கூட்டம் எல்லை வீதியில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான நிர்வாகத்தெரிவும் நடைபெற்றது.

இந்த நிர்வாகத்தின் புதிய தலைவராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவுசெய்யப்பட்டார்.

புதிய கபடி சங்கத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கபடி வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் எதிர்காலத்தில் இந்த சங்கம் மூலம் ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார், மட்டக்களப்பு மாவட்ட பதில் விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயக்குமார், தன்னாமுனை மியானி வள நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை இருதயராஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்காலத்தில் கபடி சங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பில் கபடி வீரர்கள் தமது பயிற்சியை மேற்கொள்வதற்கு உரிய இடம் இல்லாத காரணத்தினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதன் காரணமாக அதனை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதேபோன்று, இந்த ஆண்டு பாடசாலை மட்டத்திலும் கழக மட்டத்திலும் கபடி சுற்றுப்போட்டிகளை நடாத்துவதுடன் பயிற்சி முகாம்களையும் மேற்கொள்வது எனவும் கபடி நடுவர்களை பதிவுசெய்து அவர்களுக்கான நடுவர் அந்தஸ்தை தகுதியுள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் இந்த கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பில் உள்ள கபடி வீரர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தமிழர்களின் விளையாட்டாக கருதப்படும் கபடி விளையாட்டு நிகழ்வானது தமிழர்கள் மத்தியில் அருகிவருவதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .