2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

கிண்ணத்தைச் சுவீகரித்தது துறைநீலாவணை மத்திய வி.க

வடிவேல் சக்திவேல்   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

துறைநீலாவணை மண்ணின் அபிவிருத்தி, கல்வியில் முன்னோடியாக திகழ்ந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் ஒருவராகவும், துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழ்ந்த, அமரர் வேலுப்பிள்ளை நாகேந்திரனின் 38ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டும், கழகத்தின் 45ஆவது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு நடத்தப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடரில், துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம், சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

இரண்டு வாரங்களாக இடம்பெற்ற இந்தத் தொடரில், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 32 கழகங்கள் விளையாடின. 11 வீரர்களைக் கொண்ட, 9 ஓவர்கள் கொண்ட தொடராக இது இடம்பெற்றது.

இதன் இறுதிப் போட்டியில், துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகமும் கோட்டைக்கல்லாறு வளர்மதி விளையாட்டுக் கழகமும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) மோதின.

இந்தப் போட்டி, கழகத்தின் தலைவர் சண்முகம் அரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதில், திருமதி நேசமணி நாகேந்திரன், பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் விதாதவள நிலையத்தின் பொறுப்பதிகாரி நா.புள்ளநாயகம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் த.விநாயகமூர்த்தி, ஆசிரியர் ஆ.சர்வேஸ்வரன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் தி.தாயாளன், அபிவிருத்தி உத்தியோகத்தர் சோ.சந்திரகுமார், மா.பரசுராமன், முன்னாள் தலைவர் கே.ஜெயநாதன், மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கோட்டைக்கல்லாறு வளர்மதி அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றிபெறுவதற்கு 87 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய துறைநீலாவணை மத்திய வி.க, நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடி, இலக்கை அடைந்ததோடு, சம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

இதன்போது வெற்றி பெற்ற அணிகளுக்குப் பதக்கம் அணிவிக்கப்பட்டு, முதலிடத்தைப் பெற்ற அணிக்கு 20,000 ரூபாயும், இரண்டாம் பெற்ற அணிக்கு10,000 ரூபாயும் வழங்கப்பட்டதோடு, தனிப்பட்ட விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .