Editorial / 2023 செப்டெம்பர் 22 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதற்கும் பேராசைபடும் மனிதர்கள் மரணத்துக்கு மட்டுமே அஞ்சுகின்றனர் எனப் பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அந்தளவுக்கு ஆசையில் மிதந்துகொண்டே இருப்பார்கள். இதில், உழைப்பு எதுவுமின்றி இலவசமாக கிடைப்பதற்கும் அதிர்ஷ்டத்துக்கும் பலரும் காத்திருந்து, காத்திருந்து தங்களுடைய வாழ்நாளையே வீணாக்கிவிடுவர்.
திருடர்கள், கொள்ளையடிப்போர், வழிப்பறியில் ஈடுபடுவோர் இவர்களுக்கு மத்தியில் ஏமாற்று பேர்வழிகளின் கைவரிசை எண்ணிலடங்காதவை. அவ்வாறானவர்களிடம் ஏமாந்தவர்கள் மீண்டும், மீண்டும் அதற்காகவே ஏமாந்து விடுகின்றனர்.
அலைபேசி, திறன்பேசி ஆகியவற்றின் பாவனைகள் அதிகரித்துள்ளன. அதில்வரும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளித்த பலரும் தங்களுடைய வங்கிக்கணக்கில் வைப்பிலிருந்த பெரும் தொகை பணத்தை இழந்துள்ளனர்.
பெருந்தொகை பணத்தை உதவுவதாக கூறி, வட்ஸ்அப்க்கு செய்திகளை அனுப்பும் ஒரு குழுவினர், பணத்தை கட்டுக்காட்டாக அடுக்கி பொதிசெய்வதைப் போல படங்களை அனுப்பி, இறுதியில், சுங்கப் பணம் கட்டவேண்டும் என்றும், அதற்காக இலட்சக்கணக்கில் பணத்தை கறந்துமுள்ளனர்.
ஆரம்பத்தில் ஈசி கேஸ்ஸில் இவ்வாறான ஏமாற்றுவேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள், மனங்களை கவரும் வகையிலான மின்னஞ்சல்களை அனுப்பி, கடனட்டை அல்லது வங்கி அட்டைகளின் இரகசிய எண்களைத் திருடி, பொருட்களாகவோ, பணமாகவோ கொள்ளையடித்து விடுகின்றனர்.
இவ்வாறான மோசடிக்காரர்களின் வலைக்குள் விழுந்துவிடுவோரில் ஒருசிலர் மட்டுமே உண்மையை சொல்லி, தங்களைப் போல மற்ற எவருமே பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். ஏமாந்தவர்களில் இன்னும் சிலர், தங்களைப் போலவே பலரும் ஏமாறவேண்டுமென்ற கெட்ட நோக்கத்தில் மௌனம் காத்துவிடுகின்றனர்.
நமது நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களிடம் வெளிநாட்டு மோகம் அதிகரித்துவிட்டது. சட்டரீதியில் பயணத்தை மேற்கொள்ள முடியாதவர்கள். அல்லது அதற்காக தகுதியில்லாதவர்கள் போலியான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களை பெருந்தொகை பணத்தைக் கொடுத்து செய்துகொண்டு, விமான நிலையத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.
2023.09.20
தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக முறையாக விண்ணப்பம் செய்து. விசாக்களை பெற்று வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாதவர்கள், போலியாக விளம்பரம் செய்வோரின் வலையில் சிக்கி பல இலட்சம் ரூபாயை இழந்து நிர்க்கதியாகவே நிற்கின்றனர்.
இன்னும் சிலர், கடல்வழியாக சட்டவிரோதமான பயணங்களை மேற்கொண்டு, நடுக்கடலில் வைத்து சிக்கிக்கொள்கின்றனர். இல்லையேல் ஏதாவது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். தப்பித்தவறியேனும் அந்த நாட்டின் தரை எல்லைக்குச் சென்றவர்கள் சிக்கிக்கொள்கின்றனர்.
அவ்வாறானவர்கள் அகதிமுகாம்களில் படும்பாடு சொல்லில் அடங்காதவை. தங்களுடைய நாட்டுக்கு அகதிகளாக வரவேண்டாம், சட்டவிரோதமான கடல் பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டாலும் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கொலி போலவே பலருக்கும் இருக்கின்றது.
தங்களுக்கு வரும் விளம்பரம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஆகியவற்றில் உண்மையானது எது, போலியானவை எவை? என்பதை இனங்கண்டு கொள்வதன் ஊடாகவே ஏமாறாமல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க!
21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago