Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையதளம் ஊடாக பண மோசடி செய்யும் நோக்கில் இலங்கையில் தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, குற்ற புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட 152 வெளிநாட்டவர்களில் 74 பேர் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி மாலை, சிலாபம் – அம்பகந்தவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது 131 சீனர்கள் (6 பெண்கள் உட்பட), 10 வியட்நாமியர்கள் (3 பெண்கள் உட்பட), ஒரு தாய்வான் பெண் மற்றும் ஒரு மலேசியர் என மொத்தம் 152 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 99 டெஸ்க்டாப் கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 கைத்தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இவர்கள் சுமார் மூன்று மாதங்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளதோடு, ‘புதிய தொழிலதிபர்களுக்கு பயிற்சியளிப்பதாக’ விடுதி ஊழியர்களிடம் கூறி ஏமாற்றியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த சோதனையை முன்னெடுத்தது.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் எஸ். டி. அபேரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் சிலாபம் மாவட்ட நீதிபதி ஜே. எஸ். டி. வீரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றப் பொறுப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய யாரும் முன்வராததனை அடுத்து, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரை இவர்கள் வெலிசரையில் உள்ள வெளிநாட்டவர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.
2026 ஏப்ரல் 15ஆம் திகதி 20 பேரும், 17ஆம் திகதி 54 பேரும் என மொத்தம் 74 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 78 சந்தேக நபர்கள் இன்னமும் தடுப்பு முகாமிலேயே உள்ளனர்.
இந்த விடுதலையில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த வெளிநாட்டவர்களுக்காக பிணை நின்றவர்கள் இலங்கை பிரஜைகள் என்பதாகும். இவர்களுக்குப் பிணை பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்துவது குற்ற புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம். எச். எம். சியாஜ்
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026