Janu / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவத்தை கண்டித்து திங்கட்கிழமை (16) காலை கல்முனை நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற பின்னர் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் கருப்பு பட்டா அணிந்த சட்டத்தரணிகள், பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், அதனை பிரதிபலிக்கும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் சட்டத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். சட்டத்தரணிகள் தங்களது தொழில் பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என கல்முனை கிளை தலைவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் இதன்போது வலியுறுத்தினார்.
“ஒரு சட்டத்தரணி மீது நடத்தப்படும் தாக்குதல், முழு நீதித்துறையின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் பொறுப்பாகும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான துரிதமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம்,” என அவர் குறிப்பிட்டார்.
நூருல் ஹுதா உமர்


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .