2025 ஜூன் 30, திங்கட்கிழமை

காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலில் 31 காயங்கள்

Freelancer   / 2021 நவம்பர் 22 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுசன் என்ற இளைஞனின் உடலில் 31 காயங்கள் இருந்ததாக, நீதிமன்ற விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.

கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டிருந்த இளைஞன், பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்திருந்தார்.

குறித்த இளைஞன், ஐஸ் போதைப்பொருள் பக்கெட்டை விழுங்கியதால் அது வயற்றினுள் வெடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.

அதனை குறித்த இளைஞனின் குடும்பத்தினர் மறுத்திருந்ததுடன் குறித்த இளைஞனை பொலிஸார் தாக்கியதாலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இளைஞனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில், நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதன்போதே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அதில் விதுசனின் உடலில் 31 வகையான காயங்கள் அறியக்கிடைத்துள்ளதாகவும் உயிரிழந்த இளைஞர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.

பொலிஸார் தெரிவித்த விடயங்களுக்கு மாறான சம்பவம் குறித்த இளைஞனுக்கு பொலிஸ் காவலில் நடைபெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் ஒத்துவைக்கப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X