2026 மே 02, சனிக்கிழமை

இந்தியாவின் இலங்கைக் கொள்கை வகுப்பில் தமிழக அரசியல் சக்திகள் செல்வாக்குச் செலுத்தியதில்லை

A.P.Mathan   / 2012 மார்ச் 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் இலங்கைக் கொள்கையை வகுக்கும் செயன்முறைகளில் தமிழக அரசியல் சக்திகள் ஒருபோதுமே செல்வாக்குச் செலுத்தியதில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியேற்படுகின்ற அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள் வெளிக்காட்டியிருக்கக்கூடிய உணர்வுகளை ஓரளவுக்கேனும் மதித்து புதுடில்லி அதன் இலங்கைக் கொள்கையை வகுத்துக்கொண்டதில்லை.

ஆனால், இந்திய நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கக்கூடிய இலங்கை அரசாங்கங்களை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று புதுடில்லி சிந்தித்திருக்கக்கூடிய காலகட்டங்களில் தேவையேற்பட்ட போது தமிழக அரசியல்  சக்திகளையும் தலைவர்களையும் பயன்படுத்துவதில் மாத்திரம் அக்கறை காட்டப்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுப் பிரதிபலிப்புக்கள் இந்தியாவில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று புதுடில்லி கூறியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் கூட, அந்தத் தாக்கங்கள் வெறுமனே  இந்தியாவின் வியூகங்களுக்கு நியாயப்படுத்தல்களைத் தேடுவதற்கான ஒரு சாக்குப் போக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வெளிப்படையானது என மூத்த ஊடகவியலாளரும் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மன்று நிறுவனத்தின் ஸ்தாபகரும் ஈபிஆர்எல்எப், ஈரோஸ் இயக்கங்களின் முன்னாள் உறுப்பினருமான மனோ இராஜசிங்கம் நினைவுரையில் “இலங்கை நெருக்கடியில் சர்வதேசத் தலையீடுகளும் தமிழர் அரசியலின் எதிர்காலமும்“ என்னும் தொனிப்பொருளில் உரையாற்றும்போதே வீ.தனபாலசிங்கம் மேற்படி கூறினார். அங்கு பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் முழு வடிவம் இங்கே தரப்படுகிறது.

இலங்கை நெருக்கடியில் சர்வதேசத் தலையீடுகளும் தமிழர் அரசியலின் எதிர்காலமும்

இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் இரண்டு தளங்களில் தீவிரமடைந்து காணப்படுகின்றன. ஒன்று உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பின்னரும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டியிருக்கின்ற செயன்முறைகள் பற்றி  கிஞ்சித்தேனும் அக்கறையின்றி இருக்கின்ற அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கின் விளைவாக மூண்டிருக்கின்ற பிரச்சினைகள். மற்றையது நாட்டு மக்களை இன, மத, பேதமின்றி படுமோசமாகத் திணறடித்துக்கொண்டிருக்கின்ற முன்னென்றுமில்லாத வகையிலான பாரதூரமான பொருளாதாரப் பிரச்சினைகள்.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் விளைவான இடர்பாடுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு இனநெருக்கடியுடன் தொடர்புடைய சர்ச்சைகள் அரசாங்கத்திற்கு தாராளமாக உதவிக் கொண்டிருக்கின்றன. இது விடயத்தில் அரசாங்கம் பெருமளவுக்கு அதன் நோக்கங்களில் வெற்றிகண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

சிங்கள மக்களின் அமோகமான ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரு தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனநெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகளுக்கு சிங்கள மக்களின் சம்மதத்தைப் பெறக்கூடிய ஒரு அனுகூலமான நிலையில் இருக்கிறார் என்று பல அரசியல் தலைவர்களும் அவதானிகளும் கூறிவந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கருத்துக்களை இலங்கையின் யதார்த்தபூர்வமான அரசியல் நிலைவரங்களை முறையாகப் புரிந்துகொண்டதன் வெளிப்பாடுகளாகக் கருதுவதற்கில்லை.

சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சியதிகாரத்திற்கு வந்திருக்கக்கூடிய இலங்கையின் எந்தவொரு ஆட்சியாளருமே இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தணிப்பதற்கோ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான குறைந்தபட்ச அக்கறையைத்தானும் காட்டுவதற்கோ முயற்சித்ததில்லை. அத்தகைய சூழ்நிலையே தொடர்கிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய இதுவரையான செயற்பாடுகள் யாவுமே காலத்தை இழுத்தடிப்பதற்கான மூலோபாயங்களாக அமைந்தன என்பதே எமது இன நெருக்கடியின் வரலாறாகும்.
இதன் விளைவாக இலங்கைத் தமிழ், முஸ்லிம் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் ஒருங்குசேர்த்தே ஓரங்கட்டப்பட்டு ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களைச் சமத்துவமான பிரஜைகளாக நோக்குவதில் அரசாங்கங்கள் காட்டி வந்திருக்கும் கர்வத்தனமான அலட்சியமே இறுதியில் உள்நாட்டுப் போரை மூள வைப்பதற்கு பிரதான காரணமாகியது. அந்தப் போர் சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்து மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவிற்கு வந்த போதிலும், நீறுபூத்த நெருப்பாக  இருக்கும் இன நெருக்கடி இலங்கையைத் தொடர்ந்தும் வருத்திக் கொண்டேயிருக்கிறது. இத்தகையதொரு பின்னணியிலேயே இன்றைய இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் நிலைவரத்தையும் ஆட்சியாளர்கள் சர்வதேச ரீதியில் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற சவால்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை வெளியுலகிலிருந்து அரசாங்கத்திற்கு வரக்கூடிய நெருக்குதல்களே தங்களது மீட்சிக்கான ஒரு பாதையைத் திறந்துவிடுமென்று தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்கவேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் கூட, அத்தகையதொரு நம்பிக்கையிலிருந்து தமிழ் மக்கள் விடுபடக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு அக்கறைகாட்டுவதற்குத் தயாராக இல்லை.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து சுமார் 3 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய பயனுறுதியுடைய எந்தவொரு அரசியல் சமிக்ஞையையும் தமிழ் மக்களுக்குக் காட்டாமல் இருந்துவரும் அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளின் இடத்திற்கு புதிய எதிர்நிலைச் சக்தியொன்று தேவைப்படுகிறது.
சோவியத் யூனியனின் தகர்வையடுத்து முடிவுக்கு வந்த கெடுபிடி யுத்தத்திற்குப் பிறகு உலகின் ஒரேயொரு வல்லரசாக விளங்கிய அமெரிக்கா உலகின் மீதான அதன் மேலாதிக்க வேட்கையைத் தொடருவதற்காக புதியதொரு எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதி நியூயோர்க்கிலும் வாஷிங்டனிலும் இடம்பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களையடுத்து அமெரிக்காவுக்கு வசதியான ஒரு எதிரி கிடைத்தான். பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய போர் என்ற போர்வையில் கடந்த ஒரு தசாப்த காலமாக உலக மேலாதிக்கத்திற்கான தனது வியூகங்களை அமெரிக்கா வகுக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், அதே வியூகங்களின் விளைவான நெருக்கடிகளின் சகதிக்குள் இருந்து எவ்வாறு கௌரவத்துடன் வெளியேறுவது என்றே வாஷிங்டன் இப்போது திணறிக்கொண்டு நிற்கிறது.

அதேவேளை, புதிய உக்திகளை வகுத்து முன்னெடுப்பதில் அமெரிக்கா தொடர்ந்தும் அக்கறை காட்டிக்கொண்டே இருக்கிறது. அதனடிப்படையிலேயே அதன் ஆசியபசுபிக் பாதுகாப்புத் திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கான எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு வகைப்படுத்தும் கைங்கரியங்களில் வாஷிங்டன் ஈடுபட்டிருக்கின்றது. அது வேறு விடயம்.

அதேபோன்றே இலங்கையின் உள்நாட்டு போரின் முடிவிற்குப் பிறகு அரசாங்கத்திற்கு அதன் பேரினவாத நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அந்த எதிரியை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளின் வடிவில் அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது.

அந்தச் சக்திகளினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயன்முறைகள் நீண்ட கால நோக்கில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எத்தகைய பயன்களைக்கொண்டுவரக்கூடியதாக இருக்குமென்பது விவாதத்திற்குரியதாக இருக்கின்ற போதிலும் அரசாங்கத்தைப் பொறுத்தவரை வசதியான ஒரு எதிரியாக அவை அமைந்துவிட்டதை யாரும் மறுதலிக்கமாட்டார்கள்.

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்டுவந்த முறைமைகளைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கக்கூடிய பிரிவினரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற போதிலும் கூட ஒட்டுமொத்தமாக புலம்பெயர் தமிழர்களை எதிரிகளாகச் சிங்கள மக்களுக்குக் காட்டுவதன் மூலமாக அரசாங்கத்தினால் அரசியல் ஆதாயத்தைப் பெறக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களைப் பொறுத்தவரை முக்கியமான பிரச்சினை கடந்த பல வருடங்களாக அவர்கள் மத்தியில் கட்டுறுதியான ஒரு அரசியல் சமுதாயம் ஆரோக்கியமான சிந்தனைகளின் அடிப்படையில் செயற்பட முடியாமல்இருந்து வரும்  நிலைவரமாகும். உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் வலுவான அரசியல் சமுதாயமொன்று இல்லாதவர்களாக வெற்றிடமொன்றிலேயே விடப்பட்டிருந்தார்கள். இந்த அரசியல் வெற்றிடத்தைத் தோற்றுவிக்கும் பணி உள்நாட்டுப் போரின் ஒரு கணிசமான இடைக்கட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பதை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் வழிநடத்தப்பட்டு வந்திருக்கக்கூடிய மார்க்கங்களை நன்கு நிதானத்துடன் திரும்பிப்பார்ப்பதற்கு மனம் கொண்டவர்களினால் விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்பது எனது உறுதியான நம்பிக்கை.

சுமார் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் வழிநடத்தப்பட்ட முறைகளில் இருக்கக்கூடிய மிகவும் நடைமுறைச் சாத்தியமற்றதவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களை இத்துணை தியாகங்களுக்கும் இழப்புகளுக்கும் பின்னரும் கூட அரசியல் அநாதைகளாக்கி நாட்டின் எல்லைகளுக்கப்பாலிருந்து ஏதாவது அசரீரி வருகிறதா என்று ஏக்கத்துடன் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய அவல நிலையைத் தோற்றுவித்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத எவருமே தமிழ் மக்களைச் சரியான பாதையில் மீண்டும் வழிநடத்துவதற்கான பக்குவத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதும் எனது அபிப்பிராயம்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் சகல அம்சங்களிலுமே ஆயுதமேந்திய இயக்கத்தின் வன்முறைக் கலாசாரம் ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கப்பட்டதன் விளைவாகவே ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு அந்தப் போராட்டம் ஆரோக்கியமான தடத்தில் செல்ல முடியாமல் போனது. தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதன் நூற்றாண்டுப் பூர்த்தியை இரு மாதங்களுக்கு முன்னர் கொண்டாடியது. அப்போது தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியைச் சாத்தியமாக்கிய கறுப்பினத் தலைவர்களின் தூரநோக்குடனான செயற்பாடுகள் பற்றி சர்வதேச ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்ட பல அரசியல் அவதானிகள் அன்று ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்தில் தீவிர முனைப்புக்காட்டியவர்களை விடவும் அந்தப் போராட்டத்தின் சகல அம்சங்களிலும் ஆயுதமேந்திய கெரில்லா இயக்கத்தின் செல்வாக்கு மேலாதிக்கம் செலுத்தாது இருப்பதை உறுதி செய்யக்கூடிய அரசியல் துணிச்சலும் விவேகமும் கொண்டவர்கள் பலம்பொருந்தியவர்களாக விளங்கியதை பிரத்தியேகமாகச் சுட்டிக்காட்டியிருந்தனர்.  இந்த இடத்திலே தான் நம் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டங்களின் கொள்கைகள், தந்திரோபாயம் ஆகியவை எவ்வாறானவையாக அமைந்திருந்தன என்பது பற்றிய சுய பரிசீலனை அவசியமாகிறது.

எமது கடந்த காலத்தை அக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு திரும்பிப் பார்ப்போமாக இருந்தால்  இதுவிடயத்தில் இருக்கக்கூடிய மறுதலிக்க முடியாத உண்மையை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமமிருக்க முடியாது.

இனிமேலும் கூட கண்ணாடியில் நிலாவைக் காட்டும் அரசியலைத் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கக்கூடாது . அந்த மக்கள் மத்தியில் கட்டுறுதியான ஒரு அரசியல் சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பணி வேறு யாருக்கும் உரியதல்ல. அதற்கென ஆகாயத்திலிருந்து யாருமே குதிக்கப் போவதுமில்லை. இன்று எஞ்சியிருக்கக்கூடிய தமிழ்க் கட்சிகளும் குழுக்களுமே கடந்த ஆறு தசாப்த கால போராட்டங்களில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் கசப்பானதும் அதேவேளை கனதியானதுமான அனுபவங்களிலிருந்து முறையான படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு தற்போதைய நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இசைவாக கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டும்.

போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த மூன்று வருட காலத்தில் தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியைச் செய்வதில் தங்களுக்கு இருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து மானசீகமாக அக்கறைகாட்ட வில்லை என்பதே உண்மையாகும்.  எவர் மீதும் வசைபாட வேண்டுமென்பதற்காகவோ அல்லது குறைகூற வேண்டுமென்பதற்காகவோ இதை நான் கூறவில்லை. ஆயுதப் போராட்டமோ போரோ முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அதேபோராட்டங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைந்த தேசிய இனப் பிரச்சினை இன்னமும்  முடிவுக்கு வரவில்லை. நீறு பூத்த நெருப்பாகவே அந்தப் பிரச்சினை எம்முன் விரிந்து கிடக்கின்றது.

வன்னியில் முல்லைத்தீவின் கரையோரத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த அரசாங்கப் படைகள் தேசிய இனப்பிரச்சினையையும் சேர்த்தே அங்கு கடற்கரை மணலில் புதைத்துவிட்டதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் போக்கு சிங்கள பௌத்தவாத அரசியல் சக்திகள் பிரகடனம் செய்ததை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.  கடந்த மூன்று வருட காலத்தில் இலங்கையின் அரசியல் நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அந்தக் கடும் போக்குச் சக்திகள் மாத்திரமல்ல, தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பெரும் பகுதியும் தேசிய இனப் பிரச்சினை முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டுவிட்டது என்ற மனோபாவத்திலேயே இருக்கிறது என்று தான் கூற வேண்டியிருக்கிறது.

இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக துணிவாற்றலுடன் குரல் கொடுக்கக்கூடிய அரசியல் தலைமைத்துவத்தை மீண்டும் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டுமென்பதற்காக தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தனியார் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள  தமிழ்ப் பத்திரிகைகள் இடையறாது பல்வேறுபட்ட நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் குரல் கொடுத்து வருவதை நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

வரலாற்றுப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு ஏற்ற முறையில் உரிமைப் போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. போராட்டமொன்று முடிந்துவிட்டதாக எவராவது கருதுவாரேயானால் அவர் வரலாறு பற்றி அறியாதவர் என்பதே அர்த்தமாகும். போராட்டம் முடிந்துவிட்டது என்பது அல்ல அவர் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார் என்பதே உண்மையாகும். பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான முதல் மூன்று தசாப்தங்களில் தமிழ் மிதவாதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் போராட்டங்களில் இருந்தும் அடுத்த மூன்று தசாப்தங்களில் முன்னெடுக்கப்பட்ட  ஆயுதப் போராட்டங்களிலிருந்தும் படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு கடந்த காலத்தைய வக்கிரத்தனமான அரசியல் குரோதங்களிலிருந்து விடுபட்டு தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் புதிய பாதையில் செல்வதற்கு முன்வரக்கூடுமென்று எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.

என்னதான் தங்களுக்குள் பழைய குரோதங்கள் இருந்தாலும் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வென்று வரும்போது ஒன்றுபட்டு கருத்தொருமிப்பின் அடிப்படையில் குரல்கொடுக்க தற்போதைய தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் முன்வந்திருக்க வேண்டும். ஆரம்ப நடவடிக்கையாக இராணுவமயமாக்கலை அகற்றி மனித உரிமைகளை மதிக்கும் ஜனநாயக சூழ்நிலையைத் தோற்றுவிக்கக்கூடிய செயன்முறைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் சிவில் நிர்வாகத்தின் சீரமைப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுப்பதில் ஐக்கியப்பட்டு நின்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாதிருந்ததன் மூலமாக அவை புதிய அரசியல் பருவ நிலையில் தங்களின் பொருத்தப்பாட்டை தாங்களாகவே கேள்விக்குள்ளாக்கியிருந்தன என்று தான் கூற வேண்டியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள்

போரின் முடிவுக்குப் பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய சகல தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தங்களது பிரதான அரசியல் பிரதிநிதிகளாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தெரிவு செய்திருப்பதால் அக்கூட்டமைப்பின் தலைவர்கள் கடந்த மூன்று வருட காலத்திலும் கடைப்பிடித்துவந்திருக்கும் அணுகுமுறைகளின் தார தம்மியங்கள் பற்றி இச்சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் சார்பில் எந்த அரங்கில் என்றாலும்  ஏகபிரதிநிதிகளாக பேசக்கூடிய தகுதியைக்கொண்டவர்களாக இருந்தார்கள் என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்ததற்கான காரண காரியங்களை இக்கட்டத்தில் அலசப்புறப்படுவது அவசியமற்ற ஒன்று.
ஆனால், கடந்த மூன்று வருட காலத்திலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேர்தல்களில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்ன காரணத்திற்காக தங்களுக்கு வாக்களித்தார்கள் என்பதை கூட்டமைப்பின் தலைவர்களில் சிலர் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

2010 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது பதவிக்காலத்திற்கு மக்களின் ஆணையைக் கேட்டுநின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்திற்குத் தலைமை தாங்கியவர் என்பதைக் கூட கருத்தில் எடுக்காமல் வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் கூட தமிழ் மக்கள் அதிகப் பெரும்பான்மையாக அவரை ஆதரித்தார்கள். இறுதிக் கட்டப் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் அநேகமாக 2008 பிற்பகுதியில் என்று நினைக்கிறேன், பொன்சேகா கனடிய பத்திரிகையொன்றிற்கு அளித்த பேட்டியில் இலங்கையில் சிறுபான்மையின மக்கள் வேண்டுமானால் வாழ்ந்துவிட்டுப் போகலாம், ஆனால், பிரத்தியேகமான உரிமைகள் என்று எதனையும் கோருவதற்கான அருகதை அவர்களுக்கு இல்லை. இது சிங்களவர்களின் நாடு என்று கூறியிருந்தார். அத்தகைய ஒருவரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியேற்பட்டமை உண்மையிலேயே அவர்களை வரலாறு வஞ்சித்த ஒரு இருண்ட சந்தர்ப்பமாகவே நான் பார்க்கிறேன்.

அரசியல் ரீதியில் தங்களை நலமடித்தவர்கள் யார் என்பதை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதன் வெளிப்பாடாக மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வாக்களித்த பாணியை நோக்கவேண்டுமேயன்றி வேறு எந்தவிதத்திலும் அல்ல.

அடுத்து வந்த தேர்தல்களில் அது பாராளுமன்றத் தேர்தல்களாக இருக்கலாம், உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டங்கட்டமாக நடத்தப்பட்ட தேர்தல்களாக இருக்கலாம், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மையாக வாக்களித்ததற்கு பிரதான காரணம் அரசாங்கம் போரின் முடிவிற்குப் பிறகு தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கடைப்பிடித்து வந்திருக்கக்கூடிய கயமைத்தனமான அணுகுமுறைகள் பற்றிய தங்களின் உணர்வுப் பிரதிபலிப்புகளை கொழும்புக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிக்காட்ட வேண்டுமென்பதற்காகவேயாகும். எந்தவிதமான துடிப்பான அரசியல் செயற்பாடுமே முன்னெடுக்கப்பட முடியாதிருந்த வேளையில், அதுவும் குறிப்பாக தேர்தல்களில் வாக்களிக்கக்கூடிய மனநிலையில் கூட அவர்கள் இல்லாதிருந்த வேளையில் தங்களை மீண்டும்  தமிழ் மக்கள் ஆதரிக்க முன்வந்ததன் அடிப்படைக் காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தேர்தல்கள் மூலமாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் பிரதிநிதிகளாக விளங்குகிறார்கள். இலங்கை மீது நெருக்குதல்களைக் கொடுக்கின்ற சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் கூட தற்போதைய சூழ்நிலையில் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளாக இருந்தாலென்ன, இன நெருக்கடிக்கான அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கான வழிவகைகளாக இருந்தாலென்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியதே முக்கியமானதென்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இத்தகைய பின்புலத்திலே தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் அவர்களின் உரிமைகளுக்காக பயனுறுதியுடைய முறையில் துணிவாற்றலுடன் குரல் கொடுக்கக்கூடிய அரசியல் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பும் பணியில் எந்தளவுக்குத் தங்களால்  பங்களிப்பைச் செய்யக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருகணம் பின்னோக்கிப் பார்ப்பதற்கு தார்மீக ரீதியான கடப்பாட்டைக் கொண்டவர்கள். இதையே அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் அவர்களிடம் இப்பொழுது எதிர்பார்க்கிறார்கள்.

தனியார் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை போரின் முடிவுக்குப் பின்னரான அவற்றின் அணுகுமுறைகள் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது இனிமேல் வலுவானதாக  இல்லாமல் சிதறுண்டதாக இருக்க வேண்டுமென்ற நோக்குடன் ஆட்சியதிகாரக் கட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்ற சூழ்ச்சித்தனமான செயல்முறைகளுக்கான எதிர்வினையாகவே அமைந்துவந்திருக்கின்றன. இதுவே தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளவு கடந்த ஆதரவாகச் செயற்படுகின்றன என்ற தோற்றப்பாட்டைக் காட்டியது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களின் வரலாற்றில் இன்றைய காலகட்டம் உண்மையில் சிக்கலானது மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கான எதிர்கால வாய்ப்புக்கள் எத்தகையவையாக அமையப் போகின்றன என்பதைத்  தீர்மானிக்கக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்புடனான பணியை தமிழ் அரசியல்வாதிகளிடம் வேண்டி நிற்பதுவுமாகும்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னகப்படுத்தியிருக்கும் “அரசியல் வெளி’ இரு முனைகளிலும் கூரான ஆயுதத்தைப்  போன்றதாகும். அண்மைக்காலத்தில் எம்மால் காணப்படக்கூடியதாக இருந்த தமிழ்க் கூட்டமைப்பின் அங்கத்துவ அணிகளுக்கிடையிலான முரண்பாடுகள் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. இதை தமிழ் ஊடகங்கள் உணர்ந்திருக்கின்ற அளவுக்கு கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்ற ஒரு சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

எந்தவொரு அரசியல் பிரச்சினையிலும் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய பாத்திரங்களை அரவணைப்பதும் எதிர்ப்பதும் மக்கள் சமூகத்தின் பொது நலன்களை  அடிப்படையாகக் கொண்டு அந்தந்த காலகட்டத்தின் சூழ்நிலைகள் வேண்டிநிற்கின்ற பிரதிபலிப்புக்களைப் பொறுத்தவையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல அணுகுமுறைகளையும் ஆதரித்துத் தான் ஆக வேண்டுமென்று எந்த விதியும் தமிழ் மக்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் இல்லை. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அக்கூட்டமைப்பைச் சிதறடிக்கக்கூடிய எந்தவிதமான ஒரு செயன்முறையினாலும்  தமிழ் மக்களுக்கு பயனேற்படப்போவதில்லை.

இராஜதந்திர விவேகத்துடனான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதே தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது என்பதில் சந்தேகமில்லை. அதுவே கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கிறது என்றால் அதுபற்றி சாதாரண தமிழ் மக்களுக்கு முறையான விளக்கப்பாடு ஏற்படக்கூடியதாகவே கூட்டமைப்பின் சகல தலைவர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கருத்து வெளிப்படுத்தல்கள் அமைய வேண்டும். ஆனால், உண்மை நிலை அவ்வாறானதாக இல்லை. தமிழ் மக்களினால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்ற காரணங்களுக்காக கூட்டமைப்பின் தலைவர்கள் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள். இது தமிழ் மக்களை பெருமளவுக்கு குழப்ப நிலைக்குள்ளாக்கியிருக்கிறது. தங்களை தமிழ் மக்கள் நிராகரிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டிய விவேகமான அரசியல் அணுகுமுறையைக் கருத்தொருமிப்பு அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டியது கூட்டமைப்பின் தலைவர்களின் பணியாகும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் தங்களது அணிகளைத் தனித்தனியாக பலப்படுத்துவதற்கு அண்மைக்காலமாக முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் கூட்டமைப்பின் சஞ்சலமான ஐக்கியத்திற்கு மேலும் ஆபத்தைத் தோற்றுவிக்கக்கூடியவையாக இருக்கின்றன என்பதை இக்கட்டத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. அத்தலைவர்கள் தங்கள் கட்சிகளின் தனித்துவங்கள் பற்றி எத்தகைய மாயையும் மருட்சியையும் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி தமிழ் மக்கள் உண்மையிலேயே கிஞ்சித்தும் அக்கறைப்படுவதாக நான் நினைக்கவில்லை. ஐக்கியப்பட்ட அணுகுமுறை மூலம் தங்களது அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுக்க வல்ல ஒரு அமைப்பே தங்களுக்கு இன்று தேவை என்பதில் தமிழ் மக்கள் மிகுந்த தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இத்தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானதாகும். 

இந்தியா பற்றிய நோக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அணுகு முறைகளைப் பற்றி ஆராய்கின்றபோது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடுகள் பற்றி கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவின் பங்கும் ஈடுபாடும் இல்லாமல் இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதென்பது முடியாத காரியமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதை விளங்கிக் கொள்வதில் எவருக்கும் சிரமமிருக்க முடியாது. அரசாங்கத் தலைவர்கள் கூட இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானது என்று இடையறாது கூறிக்கொண்டிருக்கின்ற போதிலும் அத்தகைய தீர்வைக் காண்பதில் இனிமேலும் காலம் தாழ்த்தக் கூடாது என்று இந்தியத் தரப்பினரால் வலியுறுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் முகத்தைச் சுழித்துக் கொண்டே பிரதிபலிப்புகளை வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவின் அணுகுமுறைகள் தொடர்பில் முறையான விளக்கத்தைப் பெறுவதற்கு சில அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இலங்கை இன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் இந்தியாவின் அணுகு முறைகள் தொடர்பில் கடந்த பல தசாப்தங்களில் பெறக்கூடியதாக இருந்த அனுபவங்களை இலங்கைத் தமிழர்கள் மாத்திரமல்ல தமிழ் நாட்டுத் தமிழர்களும் இனிமேலும் கவனத்தில் எடுக்காமல் இருப்பது முறையானதல்ல. இது மிக மிக அவசியமான ஒரு விடயமாகும்.

இந்தியாவின் இலங்கைக் கொள்கையை வகுக்கும் செயன்முறைகளில் தமிழக அரசியல் சக்திகள் ஒருபோதுமே செல்வாக்குச் செலுத்தியதில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியேற்படுகின்ற அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள் வெளிக்காட்டியிருக்கக்கூடிய உணர்வுகளை ஓரளவுக்கேனும் மதித்து புதுடில்லி அதன் இலங்கைக் கொள்கையை வகுத்துக்கொண்டதில்லை.

ஆனால், இந்திய நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கக்கூடிய இலங்கை அரசாங்கங்களை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று புதுடில்லி சிந்தித்திருக்கக்கூடிய காலகட்டங்களில் தேவையேற்பட்ட போது தமிழக அரசியல்  சக்திகளையும் தலைவர்களையும் பயன்படுத்துவதில் மாத்திரம் அக்கறை காட்டப்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுப் பிரதிபலிப்புக்கள் இந்தியாவில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று புதுடில்லி கூறியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் கூட, அந்தத் தாக்கங்கள் வெறுமனே  இந்தியாவின் வியூகங்களுக்கு நியாயப்படுத்தல்களைத் தேடுவதற்கான ஒரு சாக்குப் போக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வெளிப்படையானது.

இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலன்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுடன் கொஞ்சிக் குலாவிய ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்திற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுமென்று அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தீர்மானித்த போது புதுடில்லியின் வியூகங்களுக்கு தமிழ் நாடு தவிர்க்க முடியாத வகையில் ஒரு தளமாக அமைந்தது. அந்த மாநிலத்தில் ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் புதுடில்லிக்கு ஏற்பட்டது.

ஆனால், அதற்குப் பிறகு நிலைவரங்களில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிய போது தமிழ்

  Comments - 0

  • Mohammed Hiraz Thursday, 29 March 2012 01:33 AM

    பொருளாதார தடை விதித்தால் பாதிக்கப்படபோவது சிங்கள மக்கள் மட்டும் அல்லவே!!! ஏற்கனவே ஸ்ரீலங்காவின் மிக பின் தங்கிய பிரதேசங்களான வடக்கும் கிழக்கு பகுதிகளுமே!!! ஏனெனில் ஸ்ரீலங்காவிலேயே அதிக ஏழைகள் வாழும் மாவட்டம் மட்டக்களப்பாக இருகின்றது இந்நிலையில் மக்கள் பொருளாதார மேன் பாட்டுக்கெதிரான அரசியலை யார் செய்தாலும் நிச்சயமாக அதனை மக்கள் ஜீரனித்து கொண்டு இன்னும் ஐம்பது ஆண்டுகளை ஓடும் நிலையில் இல்லை!!!

    Reply : 0       0

    உன்னைப்போல் ஒருவன் Thursday, 29 March 2012 03:24 AM

    திரு.மேதகு.ஹிராஸ் அவர்களே, சிறிலங்காவில் அதிக ஏழைகள் வாழும் மாவட்டம் நுவரெலியா. நீங்கள் கருத்து கூறும்போது உண்மைகளை மட்டும் கூறுங்கள்... மற்றபடி உங்கள் கருத்து நியாயமானது தான்...

    Reply : 0       0

    pasha Thursday, 29 March 2012 02:21 PM

    ஆம் இந்தியா தனது தேசிய நலனை கருத்தில் கொண்டே எந்த ஒரு வெளிநாட்டு கொள்கையையும் வகுக்கும் தமிழக அழுத்தம் என்பது வெறும் பூச்சாண்டி. கருணாநிதியோ ஜெயலலிதாவோ இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பில் எந்த செல்வாக்கும் செலுத்த முடியாது 2009 இறுதி கட்ட யுத்தம் ஒரு சான்று.

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 29 March 2012 03:01 PM

    உன்னைபோல் ஒருவன், கடந்த ஆண்டு மத்திய வங்கி அறிக்கையை படித்து விட்டு முடிவுக்கு வாங்க. எது ஏழை மாவட்டம் என்பது தொடர்பில் சும்மா ஆதாரம் இல்லாம குற்றம் சாட்டுவதில் என்னதான் சுகமோ????

    Reply : 0       0

    e.p.mathuranayakam Thursday, 29 March 2012 08:58 PM

    நீங்கள் சொல்லி இருப்பது சரி

    Reply : 0       0

    உன்னைப்போல் ஒருவன் Friday, 30 March 2012 01:48 AM

    திரு.ஹிராஸ் அவர்களே, உங்களை குற்றம் சாட்டவில்லை. நீங்கள் கருத்து கூறும்போது உண்மையை பேசினால் உங்களின் கருத்துக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும். நானும் கடந்த வருட அறிக்கையை படித்து விட்டு தான் பேசுகிறேன்.. நீங்கள் இலங்கையில் வாழ்பவரா??? சந்தேகமாக இருக்கிறது...

    Reply : 0       0

    jeyarajah Saturday, 31 March 2012 01:27 PM

    அமைச்சர் குணசேகர சொல்வது போல இந்த இனப்பிரச்சனையைத் தோற்றுவித்தது இரு பிரதான கட்சிகளே . அவைதான் இதற்கு தீர்வு காண வேண்டும். அதே போல ஆயுதமே தீர்வு என்று புறப்பட்ட தமிழ் இனத்தை முள்ளியில் முடக்கியது சர்வதேசமே. அவைதான் இப்போது இதற்கு தீர்வு காண வேண்டும். ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .