A.P.Mathan / 2012 ஜூலை 23 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவராகியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. நிதி அமைச்சராக இருந்த இவர் பழுத்த அரசியல்வாதி என்றால் மிகையாகாது. 7,13,763 வாக்குகளைப் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மாவை சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். பி.ஏ.சங்மா பெற்ற வாக்குகள் வெறும் 3,15,987 மட்டுமே. இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு விநோதம் நடைபெற்றது. நாட்டின் மிகப் பெரும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலயாம் சிங் - பிரணாப் முகர்ஜிக்கு போட்ட வாக்கே செல்லாது என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அது மட்டுமின்றி கேரள மாநிலத்தில் நூற்றுக்கு நூறு சதவீத வாக்குகளை பிரணாப் முகர்ஜி பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பி.ஏ.சங்மாவிற்கு பெருமளவான வாக்குகள் கிடைக்காதது "மண்ணின் மைந்தர்" என்று பிரசாரம் செய்த அவருக்கு பின்னடைவாகியது. இதுவரை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பதிவான மொத்த வாக்குகளில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற குடியரசுத் தலைவர்களான பக்ருதீன் அலி அஹமது, கியானி ஜெயில் சிங், ஆர்.வெங்கட்ராமன் போன்றோர் வரிசையில் பிரணாப் முகர்ஜியும் இப்போது சேர்ந்திருக்கிறார். இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 13ஆவது குடியரசுத் தலைவராக இம்மாதம் 25ஆம் திகதி பதவியேற்கிறார் பிரணாப் முகர்ஜி. அவர் முன் பல சவால்கள் உள்ளன. வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு முக்கிய தேசிய கட்சிகளுமே மிகக்குறைந்த எம்.பி.சீட்டுகளையே பெறும் என்ற கருத்துக்கள் இப்போதே முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்புகிறது. பிரணாப் வெற்றி பெற்றதும் அவரை வாழ்த்தப் போன சோனியா காந்தி - ராகுல் காந்தியுடன் சென்றது இங்கே குறிப்பிடத்தக்கது. மத்தியில் கூட்டணி ஆட்சிதான் என்ற நிலைப்பாடு ஏறக்குறைய 23 வருடங்களாக நிலைத்து விட்டது. இன்னும் அதுதான் நிலைமை என்றே தெரிகிறது. ஆகவே எதிர்வரும் தேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவரின் முக்கிய அதிகாரமான "பிரதமரை ஆட்சியமைக்க அழைக்கும் உரிமை"யை பிரயோகப்படுத்துவதில் சவாலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் பிரணாப் முகர்ஜி இருக்கிறார். ராஷ்டிரபதி பவனில் நிலுவையில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் இன்னொரு சவாலாக இருக்கும். ஏனென்றால், இதுவரையிருந்த டாக்டர் அப்துல்கலாமும் சரி, பிரதீபா பாட்டிலும் சரி அந்த மனுக்கள் மீது முடிவு எடுக்காமலேயே விடைபெற்று விட்டார்கள். இப்போது அவை பிரணாப் முகர்ஜியின் முன்பு வைக்கப்படும். அவற்றில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மனுக்களும், பயங்கரவாதி அப்சல் குருவின் மனுவும் இருக்கிறது. ராஜீவ் கொலையாளிகளுக்கு இரக்கம் காட்டுவீர்களா என்ற கேள்விக்கு, "கருணை மனுக்கள் மீது அரசியல் சட்டப்படி முடிவு எடுப்பேன்" என்று தேர்தல் பிரசாரத்தின் போதே சொல்லியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. ஆனாலும், கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பது அவர் முன்பு இருக்கும் முக்கிய சவால்களில் ஒன்றாகவே இருக்கும். பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே ஒருமுறை நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்த போது அவரிடம் பணியாற்றியவர். ஆகவே பிரதீபா பட்டேலுக்கும், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் இடையே இருந்த சீரான உறவு பிரணாப் முகர்ஜியிடம் இருக்குமா என்ற கேள்விக்குறி பல குவார்ட்டர்ஸ்களிலும் எழுந்துள்ளது. அரசின் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பது, பிரதமரை அப்பாயின்மென்ட் பண்ணுவது, மாநில அரசுகளை கலைப்பது போன்ற குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்தான் அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையே நெருடலை உருவாக்கும் விடயங்கள். புதிய குடியரசுத் தலைவராகப் போகும் பிரணாப் முகர்ஜி, வெறும் "ரப்பர் ஸ்டாம்பு" குடியரசுத் தலைவராக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்றார்போல், "என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்" என்று பிரதமர் கூறுவது போல், குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றதும் பிரணாப் முகர்ஜி அறிவித்திருக்கிறார் என்பது மிகவும் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .