2025 மே 19, திங்கட்கிழமை

விக்னேஸ்வரன் அரசியல் சூழலை மாற்றுவாரா?; சூழல் அவரை மாற்றுமா?

Menaka Mookandi   / 2013 ஜூலை 19 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபைத் தேர்தல் நெருங்கி வரும் போது மேலெழுந்து வந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்கு எதிரான குரல்கள் படிப்படியாக மங்கிவிட ஆரம்பித்துள்ளன.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து பறிக்காமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என சவால்விட்ட அமைச்சர் விமல் வீரவன்ச இப்போது தமது கட்சி வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மட்டும் கூறி வருகிறார்.

தமது கொள்கைக்கு பொருந்தாததினால் வட மாகாண சபைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாவிட்டால் மாகாண சபை முறைக்கே அவரது கட்சி எதிரானது என்பதால் ஏனைய மாகாண சபைகளில் இருந்தும் அவரது கட்சி உறுப்பினர்களை அவர் விலக்கிக்கொள்வாரா?

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக அனேகமாக செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஒரே ஒரு முதலமைச்சர் வேட்பாளர் மடடுமே இப்போதைக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்து. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மட்டுமே அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு வித்தியாசமான நியமனம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பொதுவாக சட்டத்துறையில் உள்ளவர்கள் அரசியலுக்கு வந்த போதிலும் நீதிபதிகள், நீதியரசர்கள் அரசியல் களத்தில் இறங்குவதில்லை. அவ்வாறு வந்தாலும் ஏற்கனவே அரசியல் தொடர்பு இருந்தால் மட்டுமே அவ்வாறானவர்கள் அரசியலுக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் வட மாகாண சபைக்கு போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஆனால் அவர் முதலமைச்சர் வேட்பாளரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

அவர் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அன்று அரச இயந்திரத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் இன்று அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடுகிறார். அன்று அரச இயந்திரத்தின் ஒரு அம்சமான நீதித்துறையை பிரதிநிதித்துவப்படுத்திய நீதியரசர் விகனேஸ்வரன், அரசாங்கத்தை எதிர்த்து போட்டியிடுகிறார். எப்படி இருக்கிறது?

விகனேஸ்வரன் அறிவுள்ளவர், பண்பானவர், கௌரவமானவர் என்பதை எவரும் மறுக்கப்போவதில்லை. தமிழ் கூட்டமைப்பு அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்ததை அடுத்து பண்பானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றதோர் கருத்து சிங்கள சமூகத்திலும் தோன்றியுள்ளது. ஆனால் அக்கருத்து தொட்டிலிலேயே இறந்துவிடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.

எவ்வளவு தான் பண்பானவராகவும் அறிவுள்ளவராகவும் கௌரவமானவராவும் இருந்த போதிலும் விக்னேஸ்வரன் அரசியலில் எவ்வளவு தூரத்திற்கு மிளிர்வார் என்பதை காலம் தான் கூற வேண்டும். ஏனெனில் சட்டத் துறையில் நிபுணராக இருந்த போதிலும் அரசியலில் உள்ள அநாகரிகத் தன்மை சட்டத் துறையின் அநாகரிகத் தன்மையைப் பார்க்கிலும் படுமோசமானது என்பதை அவர் உணரவில்லைப் போலும்.

சட்டத்துறையில் எதற்கும் ஒரு வரம்பு (சட்ட வரம்பு) இருக்கிறது. அரசியலில் எந்த அநாகரிகத்திற்கும் வரம்புகள் இருப்பதாக தெரியவில்லை. சட்டமா அதிபரோடு கலந்துரையாடி சில விடயங்களை செய்துகொள்ள முடியும் என அவர் டெய்லிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் கூறியிருந்தார். அரசாங்கம் அவருக்கு அவ்வளவு இலகுவாக செயற்பட இடமளிக்கும் என்று ஊகிக்க முடியாது.

அவரது இந்த கூற்றை வாசிக்கும் போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஞாபகம் வந்தது. அவரும் படு பயங்கர போர் களத்திலும் காணாதவற்றை அரசியலில் கண்டுவிட்டார். பயங்கர போர் களத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் அரசியலுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

எற்கனவே அமைச்சர் வீரவன்ச, விக்னேஸ்வரனை பிரிவினைவாதியாக்கிவிட்டுள்ளார். ஆயுத பலத்தில் தனித் தமிழ் நாட்டை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இப்போது சட்டத்தின் மூலமாக அதனை பெறுவதற்காக சட்ட வல்லுநர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர் என அவர் கூறயிருக்கிறார்.

விக்னேஸ்வரனை அல்லாது வேறு எவரையாவது தமிழ் கூட்டமைப்பு நிறுத்தியிருந்தால் அவர் அந்த வேட்பாளரிலும் எதையாவது பயங்கரத்தை கண்டுபிடித்து விடுவார். இவர் போன்றோர் மறந்து விட்ட அல்லது விளங்கிக் கொள்ளாத முக்கிய விடயம் என்னவென்றால் பிரிவினையை நாடியவர்களை நாட்டின் ஐக்கிய கட்டமைப்பிற்குள் வைத்திருப்பதற்காகவே அதிகார பரவலாக்கல் சித்தாந்தத்தை அதன் சிற்பிகள் நூறாண்டுகளுக்கும் முன்னர் பிரேரித்தனர்.

அதாவது அதிகார பரவலாக்கலின் நோக்கமே மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சிக்கு பிராந்திய சபைகளின் அதிகாரத்தை வழங்குவது அல்ல, பிரிவினையை கோரும் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதே.

எப்போதோ ஒரு நாள் பிரிவினையை கோரிய மக்கள் தேசிய கட்சிகளை அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறானதோர் நிலைமையே உண்மையான நல்லிணக்கம் என்றழைக்கப்படலாம். ஆனால் அந்த நிலைமையை பலவந்தமாக உருவாக்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட மக்கள் தேசிய கட்சிகளை நிராகரிக்கலாம்.

ஆனால் அம்மக்களை வென்றெடுப்பது தேசிய கட்சிகளின் திறமையில் தங்கியிருக்கிறது. ஆனால் அதிகார பரவலாக்கலின் நோக்கத்திற்கு முரணாக செயற்படுவதன் மூலம் அதனை சாதிக்க முடியாது. பிரிவினையை கோரிய மக்களின் பிரிதிநிதிகளும் அதிகார பரவலாக்களை துஷ்பிரயோகம் செய்யாது பெரும்பான்மையினரை வென்றெடுக்க முயல வேண்டும். நடைமுறை எதுவாக இருந்தாலும் சித்தாந்தம் அவ்வாறு தான் கூறுகிறது.

விக்னேஸ்வரன் ஒருபோதும் தனி நாட்டை கோரியவரல்லர். அவரது சட்ட அறிவை பாவித்து தமிழீழத்தை பெறுவதாக இருந்தால் அதற்காக அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மற்றொரு முதலமைச்சர் வேட்பாளருக்கு அவரது சட்ட அறிவை வழங்கலாம்.
 
விக்னேஸ்வரனின் அரசியல் களமிறங்களை அரசாங்கம் பாரதூரமாக கருத்திற் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே தான் அவரும் கவனமாக அடி எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.

பெரிய 'கார்ட்' களை போட்டு விளையாட முற்படுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பலத்தை உணர்ந்திருப்பது தெளிவாகிறது என அமைச்சர் டிலான் பெரேரா கடந்த வியாழக்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றின் போது கூறியிருந்தார். ஆனால் அக்கூற்றின் மூலம் அரசாங்கமும் விக்னேஸ்வரன் பெரிய 'கார்ட்' என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.

நீதிபதிகள், நீதியரசர்கள் அரசியலுக்கு வருவது நாகரிகமா என்ற கேள்வியும் இங்கு எழாமலில்லை. அவ்வாறானவர்கள் அரசியலக்கு வருவதனால் அவர்கள் நீதிபதி ஆசனத்தில் இருந்து வழங்கிய தீர்ப்புக்கள் சம்பந்தமாக சிலர் சந்தேகம் கொள்ளலாம்.

மறுபுறத்தில் அவ்வளவு சமூகப்பற்று அல்லது ஜனநாயகப் பற்று இருந்தால் அவ்வாறானவர்கள் பதிவியில் இருந்த காலத்தில் அதனை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு ஏன் வரவில்லை என்றும் வேறு சிலர் கேட்கலாம்.

அரசாங்கம் நீதியரசர்களுக்கும் முப்படைகளில் மூத்த அதிகாரிகளுக்கும் அவர்கள் ஓய்வு பெற்ற பின் பல பதவிகளை வழங்குவதன் மூலம் ஏற்கனவே அவர்களது பதவிக் காலம் பற்றிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே நீதியரசர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பின் பதவிகளை வழங்குவதை அரசாங்கள் நிறுத்த வேண்டும் என அண்மையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரியவும் கூறியிருந்தார்.

இருந்த போதிலும் பண்பானவர்கள் அறிவுள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை சமூகம் ஊக்குவிகக் வேண்டும.; ஏனெனில் இன்று அரசியல் சுத்த சாக்கடையாக மாறியிருக்கிறது. அது வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கான (பகற் கொள்ளைக்கான) அனுமதிப் பத்திரமாகவே உள்ளது.

போதாக்குறைக்கு பிரதேச மட்டத்திலும் அரசியல்வாதிகளின் கப்பம், கற்பழிப்பு, கொலை, தாக்குதல்கள், இலஞ்சம் போன்ற குற்றச் செயல்கள் ஊடகங்களில் வராத நாளே இல்லை. ஒரு நாளும் தொழிலொன்றை செய்யாதவர்கள் அரசியலுக்கு வந்து கோடிக் கணக்கு பணத்தை வீசி விளையாடுகிறார்கள்.

கப்பம், கற்பழிப்பு, கொலை, தாக்குதல்கள், இலஞ்சம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள தமது கட்சியைச் சேர்ந்தவர்களினால் தமக்கு வெளியில் தலைக் காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே கூறுகிறார். ஆனால் அதற்கு அக்கட்சியின் தலைவர்களே தான் போறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர மேர்வின் சில்வா பகிரங்கமாகவே ஒரு அரச அதிகாரியை மரத்தில் கட்டி வைத்தார். அது தொடர்பான ஒழுக்க விசாரணையின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவர் குற்றவாளியல்ல என தீர்ப்பளித்தது. ஊடக நிறுவனங்களை தாக்கியவர்கள் தண்டிக்கப்படவில்லை. துமிந்த சில்வா இன்னமும் ஐ.ம.சு.கூட்டணியன் நாடாளுமனற உறுப்பினராக இருக்கிறார்.

ஒரு ஆசிரியையை பகிரங்கமாக முழந்தாளிடச் செய்த மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீ.ல.சு.க.வின் வேட்பாளர் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். பி.பி. ஜயசுந்தர அரச பதவிகளை ஏற்கக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றமே மீண்டும் அவர் அரச பதவி ஏற்கலாம் என்று தீர்ப்பளித்தது. தாம் ஒரு கொலையாளி என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அணமையில் கூறியிருந்தார். அவர் இவ்வளவு காலம் எவ்வாறு தப்பியிருந்தார? இந்த பட்டியல் பல பக்கங்களாக நீடிக்கலாம்.

எனவே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வேறு எவரையும் குறைகூறிப் பயனில்லை. இதே நிலைமை தான் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக் காலத்திலும் நாட்டில் நிலவியது. எனவே பண்பானவர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்க்கத்தக்க விடயமாகும். ஆனால் சமூகத்தை திருத்த அரசியலில் பிரவேசித்த பலர் இறுதியில் அந்த சாக்கடை அரசியலின் றிரந்த பிரதிநிதிகளாகியுள்ளனர்.

அரசியல்வாதிகள் இந்த நிலைமையை சீர் செய்வார்கள் என்று கருதுவது முட்டாள் தனமேயல்லாமல் வேறொன்றுமல்ல. மக்களும் இந்நிலைமையை உணர்நது பண்பானவர்களை மட்டுமெ தெரிவு செய்வோம் என்ற முடிவுக்கு வர வேண்டும்.

அதுவும் இப்போதைக்கு சாத்தியம் என்று தெரிவதில்லை. ஈரான் போன்ற நாடுகளில் என்றால் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ஒருவரது நடத்தை சிறந்ததாக இருக்க வேண்டும என சட்டமே கூறுகிறது. ஆனால் இங்கு அவ்வாறான சட்டம கொண்டு வரப் போவத யார்?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X