Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 04 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
கடந்த மாதம் 6ஆம் திகதி நடைபெற்ற 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஏதாவது ஒரு கட்சி அருதிப் பெரும்பான்மையைப் பெற்ற 161 உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், பிரதி மேயர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்கள் நேற்று முன்தினம் பதவிப் பிரமானம் செய்து கொண்டனர்.
மே மாதம் நடைபெறும் தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஜூன் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார்.
அதற்கு இணங்கவே நேற்று (02) 161 சபைகளின் பிரதான பதவிகளைப் பெற்றவர்கள் சத்தியப் பிரமானம் செய்து கொண்டனர்.
நாட்டில் மொதம் 341 உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் எல்பிட்டிய பிரதேச சபைக்கு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலின் முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளைப் பார்க்கிலும் கூடுதலான ஆசனங்களை (15 ஆசனங்களை) பெற்ற போதிலுத் ஏனைய சகல கட்சிகளினதும் மொத்த ஆசன எண்ணிக்கையும் 15 ஆக இருக்கிறது.
அங்கு தேசிய மக்கள் சக்திக்கு அருதிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அக்கட்சி இது வரை பிரச்சினை ஏதுவுமின்றி அப்பிரதேச சபையை நிர்வகித்து வருகிறது. மற்றொரு உள்ளூராட்சி மன்றமான கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் சட்டப் பிரச்சினையொன்றின் காரணமாக நடைபெறவில்லை. அதன் பிரகாரமே கடந்த 6ஆம் திகதி 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்றன.
அவற்றில் நேற்று முன்தினம் (01) மேயர்கள் மற்றும் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டு முறைப்படி நிறுவப்பட்ட 161 சபைகள் தவிர்ந்த ஏனைய 178 சபைகளின் தவிசாளர்கள் மற்றும் மேயர்களை அச்சபைகளைக் கூட்டி அவற்றில் நடத்தப்படும் தேர்தல் மூலம் தெரிவு செய்ய அந்தந்த பிரதேச உதவி தேர்தல் ஆணையாளர்கள் பின்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். ஏனெனில், அச்சபைகளில் எந்தவொரு கட்சியும் அருதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
2012ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்கான சட்ட திருத்தம் அறிமுகப்படுத்தப்படுதற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களில் இவ்வாறான குழப்ப நிலை ஏற்படவில்லை. அக்காலத்தில் தேர்தல்களை அடுத்து, எப்போதும் எந்தவொரு சபையிலும் ஏதாவது ஒரு கட்சி அருதிப் பெரும்பான்மையைப் பெற்றது.
இம்முறை தேர்தல் நடைபெற்ற சபைகளில் அறைவாசிக்கு மேற்பட்ட சபைகளில்
(178 சபைகளில்) எந்தவொரு கட்சியும் அருதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
அக்காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் விகிதாசார முறையிலேயே நடைபெற்றன.
அத்தேர்தல்களின் போது, ஆசன அடிப்படையில் முதலாம் இடத்துக்க வரும் கட்சிக்கும் இரண்டாம் இடத்துக்கு வரும் கட்சிக்கும் இடையே இடைவெளியை அதிகரிப்பதற்காக இரண்டு உத்திகள் கையாளப்பட்டன. முதலாம் இடத்துக்கு வரும் கட்சிக்கு மேலதிகமாக இரண்டு ஆசனங்களை (போனஸ் ஆசனங்களை) வழங்குவது ஒரு உத்தியாகும்.
தற்போது அமுலில் உள்ள விகிதாசார பாராளுமன்ற தேர்தலின்போதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலாம் இடத்துக்குவரும் கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஏறத்தாழ சமமாக வாக்குகளைப் பெற்றாலும் முதலிடத்துக்கு வரும் கட்சி இரண்டாம் இடத்துக்கு வரும் கட்சியைப் பார்க்கிலும் இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும்.
இது விகிதாசார முறையின் அடிப்படை நோக்கத்துக்கு முரணாக அமைந்தாலும் சபைகளில் அல்லது பாராளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்படுவதை அது தடுக்கிறது. இந்த போனஸ் ஆசனங்களை வழங்கும் முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கான கலப்பு தேர்தல் முறையில் இல்லை.
அதேவேளை, அக்காலத்தில் நேரடியாக ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு வாக்குகளைப் பெறாத மிகச் சிறிய கட்சிகளை ஆசன பகிர்வின்போது, ஒதுக்கி விடுவதங்காக வெட்டுப்புள்ளி முறை அமுலில் இருந்தது. இப்போது பாராளுமன்றத் தேர்தலிலும் இம்முறை அமுலாகிறது.
அந்த வெட்டுப் புள்ளியும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான கலப்பு தேர்தல் முறையில் இல்லை.ஆரம்ப காலத்தில் இந்த வெட்டுப் புள்ளியானது, செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 12 வீதமாக இருந்தது.
1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவிடம் விடுத்த கோர்ககையின் அடிப்படையில் அது 5 வீதமாகக் குறைக்கப்பட்டது.
கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுவதோடு, இந்த வெட்டுப் புள்ளி இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக மிகச் சிறிய கட்சிகளும் ஆசனங்களை பெரும் நிலை ஏறப்பட்டது. இதனால் ஒரு கட்சி ஒரு சபையில் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றாலும்
சிறு சிறு கட்சிகள் பெறும் ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை அதை விட அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், தேர்தலில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களை அடையும் கட்சிகள் உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சிறிய கட்சிகளை அணுகும். சிறிய கட்சிகள் பல நிபந்தனைகளை விதிக்கும் இது ஊழலுக்கே வழிவகுக்கும்.
இதனை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையை மீளாய்வு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவொன்றும் அதே ஆண்டு தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் சுட்டிக் காட்டியுள்ளது. இவ்வாறு போனஸ் ஆசன முறையும் வெட்டுப் புள்ளியும் இரத்தச் செய்யப்பட்டதன் காரணமாக இம்முறை 178 சபைகளில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய கலப்புத் தேர்தல் முறையில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், முன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்ததைப் பார்க்கிலும் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்தமையாகும். கலப்பு முறையின் கீழ் விகிதாசார முறைப்படியும் தொகுதி வாரி முறைப்படியும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தீர்ப்பதற்கு தொகுதி வாரி மற்றும் விகிதாசார ஆகிய இரு முறைகளிலும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களைக் குறைக்க வேண்டும். தொகுதிவாரி முறையில் தெரிவாகும் உறுப்பினர்களை குறைத்தால் அதற்கமைய விகிதாசார முறையில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தாமாகக் குறையும்.
தொகுதிவாரி முறையில் தெரிவாகும் உறுப்பினர்களைக் குறைக்கப் புதிதாக உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அதற்காகப் புதிதாகத் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும்.
2023ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைப் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையிலான எல்லை நிர்ணய ஆணைக்குழு நாடு முழுவதிலும் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் 8,350 ஆக இருந்த தொகுதிகளின் எண்ணிக்கையை 4,714 ஆக குறைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இம்முறை மிக இலகுவாக அவ்வறிக்கையின்படி, உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்துத் தேர்தலை நடத்தியிருக்கலாம். ஆயினும், வீண் விரயத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அதனை செய்யவில்லை.
ஏனைய எந்தவொரு கட்சியும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவும் இல்லை.
கலப்புத் தேர்தல் முறையின் கீழ் முதலில் தொகுதி அடிப்படையில் தேர்தல் நடைபெறும். வாக்காளர்கள் தத்தமது தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளில் தாம் விரும்பும் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பர். அதன்படி, தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் யார் என்பது தெரிய வரும்.
குறிப்பிட்டதோர் உள்ளூராட்சி மன்றத்துக்குத் தொகுதி வாரியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், அந்த மன்றத்தின் எல்லைக்குள் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் அந்தந்த அரசியல் கட்சி பெற்ற வாக்குகளின் விகிதாசாரப்படி, அக்கட்சிகளுக்கான மோத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்.
குறிப்பிட்டதோர் கட்சி தமக்குரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகத் தொகுதி வாரியாக பெற்றிருந்தால் அக்கட்சியின் தலைவர்
தமக்கு கட்சிக்குரிய மிகுதி உறுப்பினர்களை தமது விருப்பத்தின் படி நியமிக்க முடியும்.
இவ்வாறு கட்சித் தலைவர் உறுப்பினர்களை நியமிக்க முற்படும்போது, தான் உட்கட்சி சண்டை மூளுகிறது. அது கலப்புத் தேர்தல் முறையில் காணப்படும் மற்றொரு பிரச்சினையாகும். அண்மையில் இந்தப் பிரச்சினையால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர்கள் பலர் அவ்வமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
கலப்புத் தேர்தல் முறையின் கீழ் முதலாவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்றது. அப்போதும், அத்தேர்தல் முறையின் இக்குறைபாடுகள் காணப்பட்டன. ஆனால், அவற்றை நீக்கும் வகையில் உரிய சட்டத்தைத் திருத்த எந்தவொரு அரசாங்கமும் கடந்த ஏழு ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கவில்லை.
2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்த போதிலும், தமது கட்சி தோல்வியடையும் என்ற பயத்தால் தேர்தலை ஒத்திப்போடுவதற்காகவே அவர் அந்த நடவடிக்கையை எடுத்தார்.
2025.06.04
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago