2025 ஜூன் 14, சனிக்கிழமை

கொள்கலன் சர்ச்சையில் பின்னணி என்ன?

R.Tharaniya   / 2025 ஜூன் 11 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

சர்ச்சைகளையே தூங்கிக்கொண்டு இருக்கும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, குறிப்பிட்ட ஒரு கருத்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தால் அது மிகப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும்.

ஆனால், கடந்த வாரம் அவர் அக்கருத்தை தெரிவித்த போது அதை எவரும் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை.கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் சோதனையிடப்படாமல் கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்கலன்களைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்ட அர்ச்சுனா எம்.பி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களே அவற்றில் இருந்தன என்று கூறினார்.

கடந்த வருடம் ஜெர்மனிக்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க புலம்பெயர்ந்தவர்களைச் சந்தித்ததன் விளைவாகவே அவ்வாயுதங்கள் தாய்லாந்திலிருந்து இந்தக் கொள்கலன்களில் நாட்டுக்குள் வந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்ற காலத்தில் யாராவது இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்து இருந்தால் அதை எத்தனை பேர் நம்புவார்கள் என்பது ஒரு புறமிருக்கத் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அத்தனை அரசியல் கட்சிகளும் அதனை ஊதிப் பெருக்கி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும்.

ஆனால், கடந்த 5ஆம் திகதி அர்ச்சுனா இவ்வாறு கூறிய போது சகல எதிர்க்கட்சிகளும் அதை வைத்து அரசியல் இலாபம் தேட முற்படுவது ஒரு புறமிருக்க அனுரகுமாரவின் பரம எதிரியும் அதனை புறக்கணித்தமையே காணக்கூடியதாக இருந்தது.

பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, அர்ச்சுனா எம்.பியின் கூற்றை உத்தியோகப்பூர்வமாக மறுத்தாலும் அவரும் அதனைப் பாரதூரமாகக் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரியவிருந்தது. அவர் வெறும் கடமைக்காகவே அந்த மறுப்பறிக்கையை வெளியிட்டார் என்றே தெரிந்தது.

அர்ச்சுனா கிளப்ப முற்பட்ட அந்த சர்ச்சை அவ்வாறு புஸ்வானம் ஆகிவிட்ட போதிலும் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் பற்றிய சர்ச்சை நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் தொடர்கிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்களும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளும் அளிக்கும் பதில்கள் திருப்திகரமானதாக இல்லை.

அதேவேளை, எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை நோக்கமாகக் கொண்டே இக்கொள்கலன்களைப் பற்றிய பிரச்சினைகளை எழுப்புகிறார்கள் அல்லாமல், நேர்மையாக உண்மையிலேயே என்ன நடந்தது என்று ஆராய்ந்து அறியும் அக்கறையுடன் கேள்விகளை எழுப்புகிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், ஜனவரி மாதம் இந்த பிரச்சினை முதன் முதலில் எழுப்பப்பட்ட போது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போன்ற எதிர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்புக்கு சொந்தமாகக் கொள்கலன்களே இவ்வாறு பரீட்சிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டுள்ளன என்று கூறினார்.

ஆளுநர் அதனை மறுத்த போதிலும், எதிர்க்கட்சியினர் அவரை விட்டுவிடவில்லை. இறுதியில் அவர் தமது பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இரகசிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்தே எதிர்க்கட்சியினர் அவரை கைவிட்டனர்.

கடந்த டிசெம்பர் மாதம் கொழும்பு துறைமுகத்தில் ஆயிரக் கணக்கில் கொள்கலன்கள் நிறைந்து அவற்றை விடுவிப்பதில் சுங்க அதிகாரிகள் பெருமளவில் சிரமப்பட்டனர். கப்பல்களில் இருந்து இறக்கப்படும் கொள்கலன்களை விடுவிப்பதற்கு முன்னர் பரீட்சிப்பதற்காகத் துறைமுகத்துக்கு வெளியே இடமில்லாமையே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இப்பிரச்சினையை ஆராய்ந்து தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்காகக் கடந்த டிசெம்பர் மாத இறுதியில் போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

இறக்குமதியாளர்களின் கடந்த கால நடத்தை, கொள்கலன்களின் உள்ளடக்கம் பற்றிய ஆவணங்கள் போன்ற பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில கொள்கலன்களைப் பரீட்சிக்காமல் விடுவிப்பதென அக்குழு தீர்மானித்துள்ளது. அக்குழுவின் பரிந்துரையின் பேரிலேயே கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்த 323 கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்தே எதிர்க்கட்சியினர் இக்கொள்கலன்களை ஆளுநர் ஹனீப் யூசுப்பின் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டவை என்று கூறத் தொடங்கின. சுங்கத் திணைக்களம் அதனை மறுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

என்றதொரு நிபுணர்கள் குழுவொன்று நிறுவப்பட்டு அதன் மேற்பார்வையில் ஆபத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய கொள்கலன்களை சோதனையிடாமல் விடுவிக்கக் கடந்த வருடம் ஜூலை 18ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன்படி, பலமுறை அவ்வாறு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

அப்போதும், இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களில் 60 சதவீதமானவை திறந்து சோதிக்கப்படுவதில்லை என்றும் அந்நிலையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான குழு இந்த 323 கொள்கலன்களை விடுவிக்கத் தீர்மானித்ததாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், ஆளுநர் ரகசிய பொலிஸை நாடும் வரை எதிர்க்கட்சியினர் அவரையே குற்றஞ்சாட்டியது.

எதிர்க்கட்சியினர் அவரை கைவிட்ட போதிலும், விடயத்தைக் கைவிடவில்லை. எனவே கடந்த பெப்ரவரி மாதம் இந்த 323 கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பாக விசாரணை செய்வதற்காக திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ.கே.செனவிரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அத்தோடு, சில தனி நபர்கள் செய்த முறைப்பாடுகளை அடுத்து இரகசிய பொலிஸாரும் இந்த 323 கொள்கலன்களைப் பற்றி விசாரணை ஒன்றை ஆரம்பித்தது. இந்த விடயத்தில் பல கேள்விகள் எழுகின்றன.

60 சதவீத கொள்கலன்கள் சோதனையிடப்படாமல் விடுவிக்கப்படுவது என்றால், அத்தோடு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்து அதாவது கடந்த வருடம் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் Screening unit பலமுறை சோதனையிடாமல் கொள்கலன்களை விடுவிக்க முடிவு செய்திருந்தால் டிசெம்பர் மாதம் துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டது எவ்வாறு என்பது முக்கியமானதொரு  கேள்வியாகும்.

அது அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள்ளாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சதியா?சோதனையிடாமல் கொள்கலன்களை விடுவிக்கும் நடைமுறை ஒன்று இருந்திருந்தால் அதனை இதற்கு முன்னர் எந்தவோர் அரசியல்வாதியும் விமர்சிக்காதது ஏன்?அதேபோல், அவ்வாறு 60 சதவீதம் கொள்கலன்கள் சோனையிடாமல் விடுவிக்கப்பட்டு இருந்தால் Screening unit புதிதாக என்ன செய்தது? 60 சதவீத கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்டது.

என்றால் அத்தோடு Screening unit மூலமும் அம்முறை பரிந்துரைக்கப்பட்டு வந்திருந்தால் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையிலான குழு என்ன செய்தது? அக்குழு ஏன் இந்த 323 கொள்கலன்களை மட்டும் விடுவிக்கப் பரிந்துரைத்தது? அக்குழு பரிந்துரைக்கும் வரை  Screening unit தாமாக நடவடிக்கை எடுக்காமல் காத்திருந்தார்? அதேவேளை, அவ்வாறானதொரு நடைமுறை ஏற்கனவே இருந்திருந்தால் இந்த 323 கொள்கலன்களின் விடுவிப்பு மட்டும் எவ்வாறு சர்ச்சைக்குரியதாக்கியது?

60 சதவீதம் கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்படுவதாகவும் Screening unit மூலமாகவும் அவ்வாறு செய்ய பரிந்துரைக்கப்படுவதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவிக்கும் கருத்தை எதிர்க்கட்சிகள் ஒரு போதும் நிராகரிக்கவில்லை. அவ்வாறாயின் அவர்கள் எந்த அடிப்படையில் இந்த 323 கொள்கலன்களைப் பற்றி மட்டும் கேள்வி எழுப்புகிறார்கள்? 

எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று வைத்து கொண்டாலும், அதை விசாரிக்க அரசாங்கம் திறைசேரியின் பிரதிச் செயலாளர் தலைமையில் ஏன் குழுவொன்றை நியமித்தது? 
அந்தக் குழு நியமிக்கப்பட்டு 4 மாதங்கள் சென்றடைந்து விட்டன.

4 மாதங்களாகியும் அக்குழுவுக்கு ஏன் தமது அறிக்கையை இன்னமும் சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது? இரகசிய பொலிஸாரின் விசாரணைக்கு என்ன நடந்தது?
சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் இருந்த பொருட்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டது.

அப்பொருட்கள் வர்த்தகர்களின் பொருட்கள் என்பதால் அவற்றை வெளியிட்டால் வர்த்தக போட்டியில் அவ்வர்த்தகர்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்ற அடிப்படையில் சுங்கத் திணைக்களம் அதை நிராகரித்துள்ளது. அதை எந்தவொரு எதிர்க்கட்சியும் நிராகரிக்கவில்லை.

கொள்கலன்கள் Screening unit ளில் இருந்த பொருட்களின் விவரத்தை அம்பலப்படுத்துகிறேன் என்று கூறி பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடந்த 9ஆம் திகதி ஒரு பட்டியலை வெளியிட்டார். அதன் பிரகாரம் சட்ட விரோத பொருட்கள் எதுவும் அவற்றில் இருக்கவில்லை.

இவை தான் உண்மையிலேயே அவற்றில் இருந்ததா என்று ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டபோது, அவர் தெரியாது என்றார். அவ்வாறாயின் ஏதோ பெரிய இரகசியத்தை அம்பலப்படுத்துவதைப் போல, சுங்கத் திணைக்களத்திடம் இருந்து பெற்ற ஆவணம் ஒன்றை ஏன் வெளியிட வேண்டும். எல்லாம் அரசியல் பிரசாரம் போல் தான் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .