Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 22 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
கடந்த பொதுத் தேர்தலில் விகிதாசார முறையில் தனிக் கட்சியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி கடந்த 70 ஆண்டுகளில் தலைநகரைக் கைப்பற்றிய முதலாவது இடதுசாரி கட்சி என்ற பெருமையையும் கடந்த திங்கட்கிழமை(16) அன்று நிலைநாட்டிவிட்டது.
1955ஆம் ஆண்டிலேயே இறுதியாகக் கொழும்பில் இடதுசாரி மேயர் ஒருவர் இருந்தார். பின்னர் நிதி அமைச்சராகவும் கடமையாற்றிய லங்கா சமசமாஜ கட்சியின் அக்கால தலைவரான கலாநிதி என்.எம்.பெரேரராவே அந்த மேயராவார்.
இம்முறை தேர்தலில் மற்றுமொரு முக்கியத்துவமும் இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்தது முதல் இரண்டு மேயர்களைத் தவிர் கொழும்பில் ஏனைய சகல மேயர்களும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். 1954ஆம் ஆண்டு கலாநிதி என்.எம்.பெரேரா மேயரானார்.
2006ஆம் ஆண்டு ஐ.தே.கவின் வேட்பு மனுப் பட்டியல் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக அக்கட்சி சுயேச்சை குழு ஒன்றை ஆதரித்ததது. அக்குழுவின் தலைவரான முஹம்மத் இம்தியாஸ் அம்முறை மேயரானார்.
மே மாதம் 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் பணி இந்நாட்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த திங்கட்கிழமை கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களில் அப்பணி நடைபெற்றது. அதன்படி, கொழும்பு நகரின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் விராய் கெலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டார். அதே கட்சியைச் சேர்ந்த ஹேமந்த குமார பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
மேயர் பதவிக்காக இருவர் மட்டுமே பொட்டியிட்டனர். விறாய் மாநகர சபையின் 117 மொத்த உறுப்பினர்களில் 61 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருடன் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ரீஸா சரூக் 54 வாக்குகளை மட்டுமே பெற்றார். இரண்டு வாக்குகள் செல்லுபடியற்றதாகி விட்டதாக தேர்தலை நடத்திய மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிக்கா ஜயசுந்தர தெரிவித்தார்.
மே மாதம் 6ஆம் திகதி மொத்தம் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடைபெற்ற போதிலும் அவற்றில் கொழும்பு மாநகரின் அதிகாரத்தை கைப்பற்றுவதைத் தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு கௌரவப் பிரச்சினையாகவே கருதின. தேசிய மக்கள் சக்தி 339 உள்ளூராட்சி மன்றங்களில் 267 மன்றங்களில் முதலிடத்துக்கு வந்தது. 119 சபைகளில் அருதிப் பெரும்பான்மையை பெற்றது.
கடந்த ஜூன் 2ஆம் திகதி 161 சபைகளில் மேயர்கள் மற்றும் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டு அச்சபைகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. அவற்றில் தாம் அருதிப் பெரும்பான்மையைப் பெற்ற சபைகள் உள்ளிட்ட 151 சபைகளின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றிக்கொண்டது.
தேசிய அளவில் பிரதான கட்சிகளாக கருதப்படும் ஏனைய மூன்று கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுக்கு அன்று ஒரு சபையிலேனும் அதிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் 10 சபைகளை கைப்பற்றிக்கொண்டன.
எனவே, நாட்டின் பிரதான உள்ளூராட்சி மன்றமான கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றி அந்த அத்தனை அவமானத்தையும் மூடி மறைத்துக் கொள்ளலாம் என்று அம்மூன்று கட்சிகளும் கருதின. அதேவேளை, எத்தனை சபைகளை வென்றாலும் தலைநகரை வெற்றிகொள்ளாவிட்டால், அது பெரும் அவமானமாகத் தேசிய மக்கள் சக்தி கருதியது.
எனவே, இரு தரப்பினரும் ஆதரவு தேடித் தேர்தலில் ஆசனங்களை வென்ற சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன. அத்தோடு, மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற தமக்கே தார்மிக உரிமை இருக்கிறது என்றும் இரு சாராரும் வாதிடலாயினர்.
தனிக் கட்சியாகத் தாமே கூடுதல் ஆசனங்களை வென்றுள்ளோம் என்றும் எனவே, அந்த தார்மிக உரிமை தமக்கே இருக்கிறது என்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வாதிட்டனர். தேசிய மக்கள் சக்திக்கு சபையில் 117 உறுப்பினர்களில் 48 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்றும் 69 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளனர் என்றும் ஏனைய கட்சிகள் கூறின. 69 உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டே தெரிவாகியுள்ளனர் என்பதை அவர்கள் காணவில்லை போலும்.
தேர்தலுக்கு முன்னர் திருடர்கள் என கூறி, ஏனைய கட்சிகளை விமர்சித்த தேசிய மக்கள் சக்திக்கு மேயர் தெரிவின் போது, ஏனைய சிறு கட்சிகளின் ஆதரவைப் பெறத் தார்மிக உரிமை இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வாதிட்டனர். ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட்ட அக்கட்சிகளுக்கும் கூட்டாக சபையின் அதிகாரத்தை கைப்பற்றத் தார்மிக உரிமையில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூறினர். இறுதியில் தேசிய மக்கள் சக்தி தலைநகர் கொழும்பைக் கைப்பற்றிவிட்டது.
தேசிய மக்கள் சக்திக்கு கொழும்பு மாநகர சபையில் 48 உறுப்பினர்களே இருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து விராய் கெலி பல்தசாருக்கு வாக்களித்த மற்றைய 13 உறுப்பன்ர்கள் யார் என்பது இனித் தான் தெரிய வரும். அவர்கள் ஏனைய மூன்று பிரதான கட்சிகளின் உறுப்பினர்களாக இருந்தால் அது விறாய்யின் நிர்வாகத்தை விரைவில் பாதிக்கலாம்.
ஏனெனில், யார் என்று தெரிய வந்தால் அக்கட்சிகள் அவ்வுறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கலாம். அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்கலாம். அவ்வாறு செய்யாவிட்டாலும் அது சபையில் பெரும்பான்மை வாக்குகளால் பிரேரணைகளை நிறைவேற்றிக் கொள்வதில் விராய்க்கு பிரச்சினையாக அமையலாம்.
சபையில் மேயர் தெரிவுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அதற்கான வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பாக நடைபெற வேண்டுமா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பாக நடைபெற வேண்டுமா? என்று தேர்தலை நடத்திய மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிக்கா ஜயசுந்தர சபையோரிடம் கேட்டார். அதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூறினர்.
ஏனைய மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் அதனை எதிர்த்தனர். கடும் வாக்குவாதத்தை அடுத்து, இறுதியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
தேர்தலில் விராய் வெற்றி பெற்றதையடுத்து, ஐமசவின் சில உறுப்பினர்கள் ஆணையாளர் சட்டவிரோதமாக நடந்துகொண்டார் என்றும் அதற்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியிருந்தனர். ஆனால், சபையினர் ஏகமனதாக விருப்பம் தெரிவிப்பதால் இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதாக கூறிவிட்டே ஆணையாளர் வாக்கெடுப்பை நடத்தினார்.
இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததன் பின்னரே இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது என்று சகல ஊடகங்களும் தெரிவித்தன. வாக்கெடுப்பும் அமைதியாக நடைபெற்றதாகவே தொலைக்காட்சி மூலம் காணக்கூடியதாக இருந்தது. எனவே, சட்ட நடவடிக்கை பயன் தருமா என்பது சந்தேகமானதாகும்.
இரகசிய வாக்கெடுப்பு என்பது ஒன்றும் சட்ட விரோதமான நடவடிக்கை அல்ல. சபையின் பெரும்பான்மையோரின் விருப்பத்துக்கு மாறாக அது நடைபெற்று இருந்தால் மட்டுமே அது சட்ட விரோதமாகும். 2022ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பொன்றின் மூலமே ரணில் விகரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், மேயர் விராய் இப்போது சில சவால்களைச் சந்திக்க நேரிடும். அவருக்கு மேயராக வருவதற்கு உதவிய ஏனைய கட்சிகளை அல்லது சுயேச்சை குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் சிலவேளை, தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்காகப் பகரமாகப் பல கோரிக்கைகளை முன்வைக்கலாம். அவை சிலவேளை ஊழலாகவும் அமையலாம்.
அதேவேளை, அவ்வாறு மேயராவதற்கு அவருக்கு உதவிய ஏனைய குழுக்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தமது ஆதரவை வாபஸ் பெறலாம். 1955ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையில் கலாநிதி என்.எம்.பெரேராவுக்கு ஆதரவு வழங்கிய கம்யூஸ்ட் கட்சி உறுபபினர் அந்தனி மார்செலஸ் ஐ.தே.கவுக்குத் தாவினார். அத்தோடு, என்.எம்.பெரேரா சபையில் பெரும்பான்மையை இழந்தார்.
ஐ.தே.க. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்தது. அவர் பதவியை இழந்தார். ஐ.தே.கவின் வீ.ஏ.சுகத்ததாச மேயரானார்.
அதேபோல், ஏனைய கட்சிகளின் சில உறுப்பினர்களின் ஆதரவின்றி மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதும் சிலவேளை பிரச்சினையாகலாம். ஆயினும், முதல் வரவு-செலவுத் திட்டம் தோல்வியடைந்தாலும் உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி, மேலும், ஒரு வருடம் வரை மாநகர சபையை நடத்திச் செல்ல சபையின் அனுமதியின்றி நிதி வசதி பெற முடியும். ஆனால், அதன் பின்னர் முடியாது.
இதுபோன்ற இடையூறுகள் இல்லாவிட்டாலும். மத்திய அரசாங்கத்தில் நடைபெறுவதைப் போலவே ஊழலுக்குப் பழகிவிட்ட உயர் அதிகாரிகள் ஊழலற்ற முறையில் மாநகரை அபிவிருத்தி செய்வதற்குப் பல இடையூறுகளை விளைவிக்கலாம்.
அவற்றை உடைத்துக்கொண்டு முன் செல்வதானால் முதலில் மேயர் நேர்மையான அதிகாரிகளை இனங்கண்டு படிப்படியாக ஊழல் பேர்வழிகளைக் களையெடுக்க வேண்டியேற்படும். அந்தத் தடையைத் தாண்டினால் கொழும்பை அபிவிருத்திச் செய்யப் போதியளவு வருமானம் மாநகர சபையிடம் இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago
7 hours ago