2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சூடு கண்டும் அடங்காப் பூனைகள்

Mayu   / 2024 மார்ச் 11 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடுகண்ட பூனைகள் பல நம் நாட்டில் இருக்கின்றன. சில பூனைகள் ஒதுங்கிக் கொள்வது வழமையாக இருந்தாலும் சில மீண்டும் மீண்டும் அடுப்படிக்கு வந்து அந்தச் சூட்டியின் கதகதப் பினை அனுபவிக்க துடித்துக் கொண்டே இருக்கும்.

அவ்வாறானவர்களும் இருக்கத்தான்செய்கிறார்கள். அடுப்பங்கரைப் பூனைகளை நினைவுபடுத்தும் வகையிலான சில முக்கியமான நிகழ்வுகள் கடந்த வாரத்தில் நடைபெற்றன. ஒன்று பதவி விலகி நாட்டைவிட்டுச் சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வருகை, இரண்டாவது வாக்களித்த மக்களாலேயே “வேண்டாம் வீட்டுக்குப் போ” என விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புத்தக வெளியீடு, ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு. இவையெல்லாமே ஒருவகையில் ஒரே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியாக இருக்கின்ற நேரத்திலேயே அதிலிருந்து மஹிந்த தரப்பினர் பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. இக்கட்சி ஓர் அரசியல் கூட்டணியே.

ஸ்ரீய கட்சிகளாகவிருந்த இலங்கை தேசிய முன்னணி, நமது இலங்கை சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து 2016 நவம்பரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியாக மாறிக்கொண்டன. ஆரம்பத்தில் இதன் தலைவராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டத்தரணி சாகர காரியவாசம் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காரியவாசம் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளராவார். பின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராசபக்ச தலைவராகவும், பசில் ராஜபக்ஷ தேசிய அமைப்பாளராகவும் இருந்தனர். இப்போது தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடமாக உள்ளது. ஆனாலும், அக் கட்சியின் பிரதான செயற்பாட்டாளராக பசிலே இயங்குகிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் 22018 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இக்கூட்டணி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, இலங்கையின் 340 சபைகளில் 126 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.

பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டு 52.25 சதவீதமான 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார்.

தன்னுடைய வெற்றியினை சிங்கள மக்களின் வெற்றியாக அவர் காட்டியது மாத்திரமல்லாமல், அனுராதபுரத்தில் பதவிப்பிரமாணமும் செய்துகொண்டார். 2019 ஜனாதிபதித் தேர்தலில் தேசியவாத சார்பு, பொருளாதார வளர்ச்சி, தேசியப் பாதுகாப்பு போன்ற கொள்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற 2020 பாராளுமன்றத் தேர்தலில் 145 இடங்களைக் கைப்பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றி பெற்றது. 2019 நவம்பர் 18 முதல் 2022 ஜூலை 14 வரையில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ தனது மூத்த சகோதரர் மஹிந்த ராசபக்சவின் ஆட்சியில் 2005 முதல் 2015 வரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் இருபதாவது திருத்தம் மூலம் தனது பதவி அதிகாரங்களை அதிகரித்தார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் பல அதிகார பதவிகளுக்கு நியமித்தார். அது முதல் விமர்சனத்தினை ஏற்படுத்தியது. கொவிட்-19 தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் வெற்றிகரமாக நாட்டை வழிநடத்தியதாகக் கூறினாலும், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமானது 1948இல் சுதந்திரமடைந்ததன் பின்னரான காலத்தில் முதல் தடவையாகக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றது.

இந்த உண்மையை பொதுவெளியில் அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. இது ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் முறைகேடு காரணமாகவே ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்பட்டது. பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி அக்கட்சியின் அரசாங்கம் என்றிருந்த மகிந்த தரப்பினருக்கு எதிராக எழுந்த பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவி, நிதி அமைச்சர் பதவி என அனைத்துமே பறிபோன நிலையில் மீண்டும் அதனைக் கட்டமைக்கும் பணி இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்ற வழக்குகள், நெருக்கடிகள் என இருந்த நிலையிலிருந்து மீண்டு நாட்டைவிட்டு அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ கடந்த வாரத்தில் நாடு திரும்பியதுடன் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை மீளவும் கட்டமைக்கின்ற பலப்படுத்துகின்ற வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்.

அதேநேரத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருக்கும் ~ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ எனும் நூல் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு விடயங்கள் சிங்களப் பேரினவாதச் சிந்தனையைத் தூண்டுவதாகவும், வெளிநாடுகள் பலவற்றைச் சாடுவதாகவும் அமைந்திருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. முக்கியமாக, தன்னுடைய வெளியேற்றத்துக்குக் காரணமாக இருந்த அரகலய போராட்டத்திற்கு தமிழ், முஸ்லிம்களே முக்கியமானவர்களாக இருந்தார்கள்.

தன்னுடைய ஆட்சி நீடித்தால், சிங்கள பௌத்தர்கள் மேலும் பலப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே இப்போராட்டங்களில் அவர்கள் தூண்டப்பட்டிருப்பார்கள் என்று கூறுவதிலிருந்து அவருடைய சிங்கள மேலாதிக்க மனோநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே கூறமுடியும்.

அந்தவகையில், பசிலின் வருகையும் கோட்டாபய வின் புத்தக வெளியீடும் ஜனாதிபதியுடனான மற்றும் ஏனைய சந்திப்புக்களும் ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதாகவே அமைந்திருப்பதாகக் கொள்ளமுடியும்.

இந்த இடத்தில்தான் பதவிக் காலத்தில் தீவிர அலட்சியம் மற்றும் தவறான நிர்வாகத்தின் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். நாட்டில் தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து உருவாக்கப்படும் சூழல்கள் எதனை இலக்காகக் கொண்டவை என்பது வெளிப்படையாகும்.

2022 ஏப்ரலில் உருவான பொது மக்களின் அதிகரித்த எதிர்ப்பு ஜூலை மாதத்தில் முடிவுக்கு வந்தது. ஆனாலும், மீண்டுமொரு போராட்டம் நடைபெறாது என்ற கருத்தோ, ஒரு மக்கள் புரட்சி வேறு வகைகளில் உருவாகாதென்ற உறுதிப்பாடோ நாட்டிலில்லாத நிலையில் இவ்வாறான முயற்சிகள் வெற்றியளிக்குமா என்பது மக்களது தீர்ப்பிலேயே தங்கியுள்ளது.

கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் பிரதமராகி, தற்காலிக ஜனாதிபதியாகி, பாராளுமன்றத்தின் ஊடாக 9ஆவது ஜனாதிபதியாகப் பதவியில் இருக்கும் ரணில் நாட்டின் வன்முறையை அடக்கி, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளைப் பெற்று முன்னகர்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்த முன்னெடுப்பு நாட்டை முன்னேற்றுகிறார் என்ற மனோநிலையை குறிப்பிட்டளவான மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில், இவ்வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலும், அடுத்த வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இவ்வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலும், அடுத்த வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகள் வெளிவந்தது முதல், யார் யாருடன் கூட்டுச் சேர்வது, எந்தக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது, யாருடைய கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் போட்டியிடுவது என பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், பசிலின் வருகையும் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலும் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றன. முதலில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்பார்ப்பவர்களுக்கு அது மகிழ்ச்சியான செய்திதான். இருந்தாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முயற்சி மீண்டும் ஒரு தேவையற்ற நிலையை நாட்டுக்கு ஏற்படுத்தாமலிருந்தால் சரி. என்றாலும் அதிகாரப் பசி யாரைவிட்டது. இது சூடு கண்ட பூனையை நினைவுபடுத்தாமல் இருந்தால் சர


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .