Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 05 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
நாம் ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மோசடி செய்த, குற்றங்கள் புரிந்த அரசியல்வாதிகள் எத்தரத்தில் இருந்தாலும் சிறை செல்வார்கள் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்த அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆணை வழங்கியிருந்தபோதும்,
இத்தனை நாட்களும் இவ்விடயத்தில் அடக்கி வாசித்து வந்த அநுரகுமார அரசு தற்போது ‘கைது வேட்டை’ ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்தக் கைது வேட்டைகள் ஒருபக்கத்தில் மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் அனுர அரசு ‘கைது வேட்டை’ என்ற படம் காட்டி தமது ஆட்சியின் பலவீனத்தை, இயலாமையை மறைக்க முற்படுவதாகவும் அதனால்தான் கைதாகின்றவர்கள் ஒரு சில நாட்களிலேயே வெளியே வந்து விடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகள் அரச மாளிகைகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அறிவிப்புடன் ராஜபக்ஷக்களை இலக்கு வைத்து அனுரகுமார அரசு தொடங்கிய ஆட்டத்தில் ‘அரச மாளிகை’ ஆட்டம் களையிழந்த நிலையில், மோசடிக் குற்றச்சாட்டுக்களில் முன்னாள் ஆட்சியாளர்களான பொதுஜன பெரமுனவினர் இலக்கு வைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர்களுடன் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களும் கைதாகி பிணையில் வெளியே வந்தனர்.
இந்த கைது வேட்டையில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் ராஜபக்ஷக்களின் தீவிர விசுவாசியுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சிக்கினார். ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற நிலையில், வடிவமைக்கப்பட்ட அதிசொகுசு காரை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்க ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கடந்த வருட இறுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவும், சதொச ஊழியர் குழுவைக் கடமையிலிருந்து நீக்கி, வேறு பணிகளில் ஈடுபடுத்திய வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்ததாலும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் பிணையில் வெளியில் வந்தார். இதற்கிடையில் அடுத்த அதிரடியாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரான அனுர பிரியதர்சன யாப்பாவை அவரது மனைவியுடன் அனுரகுமார அரசு அதிரடியாகக் கைது செய்து அதிர்ச்சி கொடுத்தது. 2014ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிங்கிரிய மற்றும் நாரம்மல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 6,146,110 ரூபாவை பெற்று, அந்தப் பணத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, பிரசாரம் செய்தமை மூலம் அரச சொத்துகள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின அடிப்படையில், அனுர பிரியதர்சன யாப்பாவும் அவரது மனைவியும் கைதானார்கள். பின்னர் பிணையில் வெளியே வந்தனர்.
இவ்வாறான நிலையில்தான், மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ஷவை அதிரடியாகக் கைது செய்து ராஜபக்ஷ குடும்பத்தையும் பொதுஜன பெரமுனவினரையும் ஆட்டம் காண வைத்தது
அனுரகுமார அரசு. இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பணமோசடி சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு அவரும் பிணையில் வெளியில் வந்தார்.
இதன்பின்னர் ஆட்டம் சற்று ஓய்வடைந்த நிலையில், தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கியை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் பிரதமரின் மருமகனுமான
துமிந்த திசாநாயக்க தானாகச் சிக்கி தற்போது சிறையில் உள்ளார்.
மீண்டும் கைது வேட்டையைத் தொடங்கிய அனுர அரசு, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அவரது மகன் ஆகியோரை மருந்து இறக்குமதி மோசடி தொடர்பில் கைது செய்து சிறையில் அடைத்து. ஒரு சில நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர்களும் பிணையில் வெளியே வந்து விட்டனர். இதனால் பெரிதாகப் பேசப்பட்ட இந்த கைது விடயமும் உடனடியாக அடங்கி விட்டது.
இவ்வாறான நிலையில்தான், முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ ஆகியோர் மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி மஹிந்தானதாவுக்கு
20 வருட சிறைத்தண்டனையும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதனைவிட முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கும் 25 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பொதுஜன பெரமுன எம்.பியுமான நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்னாள் அரசியல்வாதிகள், பிரபலங்கள் கைது என ஆட்டத்தை அனுரகுமார அரசு ஆரம்பித்துள்ள நிலையில், இக்கைதுகள் தொடர்பாக ‘அரசியல் பழிவாங்கல்’ என்ற வகையிலான தீவிர எதிர் பிரசாரங்களும் எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளது.
இந்த அரசாங்கம் வழக்குகளை சோடித்து சாட்சியங்களை உருவாக்கிப் பழிவாங்க முயற்சிக்கின்றது. யாரைக் கைது செய்ய வேண்டும் என்பது குறித்து இரவு கலந்துரையாடி கைது செய்யும் நிலை காணப்படுகின்றது எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதேவேளை, இந்த அரசியல் கைதுகளின் பின்னணியில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு குழுவின் செயலாளராகப் பதவி வகித்த தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இருப்பதாகவும் தற்போதைய கைதுகள் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவில்லை
என்றும் முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெலஉறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முக்கிய பதவி வகித்தவரே தற்பொழுது பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கின்றார். அவர் தனது அரசியல் பழிவாங்கல்களைத் தொடர்கின்றார் என நாமல் ராஜபக்ஷவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டுவரும் அதனைத் தூக்கி நிறுத்தவே இவ்வாறான கைதுகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் எந்த வித நியாயமான குற்றச்சாட்டுக்களோ ஆதாரங்களோ இல்லாமல் முன்னாள் அரசியல்வாதிகளை, பிரபலங்களை அனுரகுமார அரசு கைது செய்வதனால்தான் கைதான ஒரு சில நாட்களுக்குள் அவ்வாறு கைதானவர்களுக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்கி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் பிணையில் அனுமதிக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல, மாறாக அவர்களைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதே நோக்கம். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் பிணை கிடைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். அதுதான் சட்டம். எனினும், புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி, சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விசாரணைகளைத் தொடரலாம். வழக்குத் தாக்கல் செய்வதன் மூலமே சந்தேக நபர் ஒருவரைத் தண்டிக்க முடியும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது அனுரகுமார அரசு மேற்கொள்ளும் கைதுகள், நீதிமன்றங்கள் வழங்கும் பிணைகளைப் பொறுத்தவரையில், அனுரகுமார அரசு ‘முன்னாள் மோசடி அரசியல்வாதிகள் கைது’ என்ற படம் ஒன்றைக் காட்டி மக்களைக் கொஞ்சம் உசுப்பேற்றவும் ஊடகங்களைப் பரபரப்பாக்கவும் அதன்மூலம் அனுரகுமார அரசு ஊழல் மோசடி அரசியல்வாதிகள் விடயத்தில் தீவிரமாகச் செயற்படுவதாகவும் காட்டுவதற்கே முயற்சிப்பதாகவே தெரிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago