2025 ஜூன் 14, சனிக்கிழமை

முரணான திசையில்   பயணிக்கத் தொடங்கியுள்ளதா?

R.Tharaniya   / 2025 மே 29 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

மாற்றம், மக்களாட்சி, ஜனநாயகம், இன, மத, நல்லிணக்கம், சுதந்திரம் என்ற கோஷங்களோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 

(ஜே.வி.பி.) அரசு,சில மாதங்களுக்குள்ளேயே வீழ்ச்சி  அடையத் தொடங்கியதனால் ஏமாற்றம், நிறைவேற்றதிகாரம, சர்வாதிகாரம், இன, மத நல்லிணக்க  விரோதம் என்ற 
ஜனநாயக ஆட்சிக்கு  முரணான திசையில்  பயணிக்கத் தொடங்கியுள்ளது.

முன்னைய அரசுகளும் இந்த வழியில் பயணித்தாலும் கூட நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தில் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்த வில்லை. எதிர்க்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன. 

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின. எதிர்க்கட்சிகளின்  கருத்துக்களை செவிமடுத்தன. ஆனால், தற்போதைய  அரசு பாராளுமன்றத்தில் கூட எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தனத்தையும் அடாவடித்தனங்களையும் அடக்கி ஆளுகைகளையும் முன்னெடுக்கின்றது.

சபை முதல்வராக  உள்ள அமைச்சர் பிமல் ரத்னாயக்க, சபை சம்பிரதாயங்களையும் நிலையியல் கட்டளைகளையும் எதிர்க்கட்சிகளுக்குள்ள சிறப்புரிமைகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்காது மிகவும் மோசமான வகையில் தான்தோன்றித்தனமாகவும் சர்வாதிகாரத்தனமாகவும் நடந்து கொள்வது இலங்கை பாராளுமன்றத்தில் முன்னெப்போதும் சபை முதல்வர்கள்  நடந்து கொள்ளாத தலைக்கன நடத்தைகளாகவே உள்ளன.

தாம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, எதிர்க்கட்சிகளின் உரிமை என அரசுடன் வாதாடிய, போராடிய இவர்கள் இப்போது முன்னைய அரசுகளை விடவும் சர்வாதிகாரத்தனமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடந்து கொள்ளத் தலைப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றக் குழுக்களுக்குத் தலைவர்களைத் தெரிவு  செய்யும் விடயத்தில் முதலில் தேசிய மக்கள் சக்தி, ஆட்சியாளர்களின் வேடம் கலைந்தது.

தாம் எதிர்க்கட்சியில் இருந்தபோது எந்த எந்த பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிகள் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமெனப் போராடிப் பெற்றார்களோ தாம் ஆட்சியாளர்களான பின்னர் அந்த பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகள் கோரியபோதும், அதனை அவர்களுக்கு வழங்க மறுத்து தாமே வைத்துக் கொண்டனர்.

அது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அரசைக் கடுமையாக விமர்சிக்கும், குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும், பதிலளிக்க முடியாத கேள்விகளை எழுப்பும்  எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இலக்கு வைக்கப்பட்டுப் பழிவாங்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறானவர்களில் அரசினால் குறிப்பாக சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்கவால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி  முதல் பலிகடாவாகப்பட்டவர் சுயேட்சைக்குழு 17இன்  யாழ். மாவட்ட எம்.பியான டொக்டர் அர்ச்சுனா இராமநாதன்.

சபையில் அதிக  இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் சர்ச்சை பேச்சுக்களைப் பேசுவதாகவும் குற்றம்சாட்டி அவரின் சபை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய  விசேட குழு  நியமிக்கப்பட்டு அக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை யடுத்து 4 வாரங்களுக்கு அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைகள்,வெளிவிடும் கருத்துக்களை நேரடி ஒளிபரப்பு செய்ய விசேட குழுவின் பரிந்துரையில் தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு தடை பாராளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை. அது மட்டுமன்றி சபையில் அடிக்கடி எழுந்து கேள்வி எழுப்பிய குற்றச்சாட்டில்  அர்ச்சுனா இராமன்தான் எம்.பி. சபையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

அது மட்டுமன்றி, எதிர்க்கட்சிகளின் சிறப்புரிமைகளைக் வழங்க மறுத்தும்  சபாநாயகரைக்கூடத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தன் கண் அசைவு, கையசைவுகளுக்கு செயற்பட வைப்பதுடன், சபா பீடத்திற்கு தலைமை தாங்கும் உறுப்பினர்களைக்கூட, மிரட்டும் தொனியில் உரத்துப் பேசி எதிர்க்கட்சிகளுக்கான நேரத்தை வழங்க விடாது செய்கின்றமை,

ஒலி வாங்கியை முடக்குகின்றமை, குறுக்கீடுகள் செய்து பேசவிடாது தடுக்கின்றமை போன்றவற்றில் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க செயற்படும் விதம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக்  கொண்டு சென்றபோதும், சபை முதல் வரின் சர்வாதிகாரத்தில்  எந்த மாற்றமும் நிகழவில்லை.

இவ்வாறான நிலையில், தான் கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய அக்கல் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பியான தயாசிறி ஜயசேகர மீதும் சபைமுதல்வரின் சர்வாதிகாரம் பாய்ந்தது.

பாராளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதி தயாசிறி ஜயசேகர எம்.பிக்கும் சபை முதல்வருக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்ட நிலையில், தயாசிறி ஜயசேகரவின் செயற்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் ஜகத் விக்ரமரட்னவினால் மூவரடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

20ஆம் திகதி சபைக்குள்  தயாசிறி ஜயசேகரவின் செயற்பாடு தொடர்பில் என்னிடம் முன்வைக்கப்பட்ட  முறைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, அது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையை முன்வைப்பதற்காகப் பிரதி குழுக்களின் தலைவர் ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடா  கயந்த கருணாதிலக்க ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர்கொண்ட குழு என்னால் அமைக்கப்பட்டுள்ளது

என்று சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட எதிர்க்கட்சி, அரசாங்கம் இவ்வாறு விசாரணைக் குழுக்களை அமைக்குமாக இருந்தால், இதனை முன்மாதிரியாகக் கொண்டு அரசாங்கத்தினால் போடப்படுவதைப் போன்று எதிர்க்கட்சியும் அரச தரப்பினர்களின் செயற்பாடுகள், இடையூறுகள், அனுமதி மறுப்புக்கள் என எல்லாவற்றுக்கும் சபாநாயகரிடம் முறைப்பாடுகளைச் செய்ய நேரிடும்.

அப்போது அரசு தரப்பினரின் முறைப்பாடுகளை ஏற்று சபாநாயகர் விசேட விசாரணைக் குழுக்கள் அமைப்பது போன்று எம்முடைய முறைப்பாட்டுக்களி ஏற்றும் அதற்காகவும் விசேட விசாரணைக் குழுக்களைக்  குழுக்களையும் நியமிக்க நேரிடலாம் என தெரிவித்தன.  

அவ்வாறு கூறியதுடன் மட்டும் நிற்காது, சபைமுதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள்  கடந்த கால சபை முதல்வர்களின் நன்னடத்தைக்கு முற்றிலும் விரோதமானது என்று குறிப்பிட்டும் 2025.05.20ஆம் திகதியன்று சபை முதல்வர் நடந்து  கொண்ட விதம் குறித்து விசாரணை செய்ய வேண்டும்.

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பமான தினத்தில் இருந்து சபை முதல்வரின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் கடந்த கால பாராளுமன்றத்தின் சபை முதல்வரின் நன்னடத்தைகளுக்கு முற்றிலும் விரோதமானது. எனவே, சபை முதல்வர் சபையில் நடந்து கொள்ளும்  விதம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்  சபாநாயகரிடம் எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுத்தனர்.

அது மட்டுமன்றி, பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பில் தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்  
சபைக்கு  அறிவித்தார்.

கேள்விகள் பொது முக்கியத்துவம் மிக்க விடயங்களாக இருப்பது கட்டாயம். சிறிய அறிவித்தலொன்றின் ஊடாக அதற்கான பதிலைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், கேள்விகள் தயாரிக்கப்பட வேண்டும். அதேபோன்று, அவ்வாறான கேள்விகளின் உள்ளடக்கம் ஒரு குறிப்பிட்ட விடயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும், அமைச்சர் ஒருவரின் விடயத்துடன் தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும் .

10ஆவது பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் கேட்கப்பட்ட இவ்வாறான கேள்விகள் பொது முக்கியத்துவத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகளாக  இருந்துள்ளன. அத்துடன், 
ஒரு அமைச்சருக்குப் பதிலளிக்கக் கூடியவாறும் அல்லாமல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளாகவும் இருந்துள்ளன.

இதேவேளை, நிலையியல் கட்டளைகளின்படி இவ்வாறான கேள்விகளின் போது மேலதிக கேள்விகளைக் கேட்பதற்கான ஏற்பாடுகள் இல்லாத போதும் விளக்கமாகக் கோருவது போன்று பெரும்பாலும் மேலதிக கேள்விகளைப் போன்று அவை முன்வைக்கப்படுகின்றன.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவருக்கு மேலதிகமாக வேறு எம்.பி. விளக்கம் கோருவதற்கும் மற்றும் கேள்வியெழுப்புவதற்கும் முயற்சிக்கின்றார். நிலையியல் கட்டளைகளுக்குப் புறம்பாக முன்வைக்கப்படும் கேள்விகள் தொடர்பில் நிலையியல் கட்டளைக்கு அமையத் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு நேரிடும் என்பதனை சபைக்கு அறிவிக்கின்றேன் என சபாநாயகர் கூறியுள்ளதன்  மூலம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முடக்கப்படும் நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை உள்ளது என்ற தலைக்கனத்தில் ஆடும் அரசு ஆரம்பித்து வைத்துள்ள இந்த தவறான முன்னுதாரணத்தால் இனி பாராளுமன்றத்தில் அரசும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி இவ்வாறு ஒருவருக்கொருவர் விசாரணைக் குழுக்களை  அமைக்கக் கோரி சபாநாயகரிடம் முறைப்பாட்டு செய்யும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன்,

எதிர்க்கட்சிகளினால் எழுப்பப்படும் அரசுக்குப் பதிலளிக்க முடியாத, தர்மசங்கடமான, பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய கேள்விகளைத் தவிர்க்கும், தடுக்கும் நிலை  பாராளுமன்றத்தில் தற்போதைய  அரசினால் சர்வாதிகாரத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .