Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 10 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
நாட்டை ஆளுகின்ற அரசாங்கமும் எம்.பிக்களும் மாறினால் அல்லது சட்டமும் நீதியும் முறையாக அமுல்படுத்தப்படுவதாக ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. மாற்றம் என்பது சமூகத்தில் இருந்து உருவாக வேண்டும்.
சமூகம் எதிர்பார்க்கும் விதத்தில் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமன்றி, அதிகாரிகளும் செயற்படுவதற்கான அழுத்தத்தை மக்கள் பிரயோகிக்க வேண்டும்.
இந்த இயந்திர வாழ்க்கையில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வேலைப்பழு, நேரமின்மை உள்ளிட்ட காரணங்களினால் எதை பற்றியும் கேள்வி கேட்கும், தட்டிக் கேட்கும் போக்கு பொதுவாகவே குறைவடைந்து விட்டது.
அரசியல், சமூக இயக்கங்களை நெறிப்படுத்துவதற்கான ஒரு விளையூக்கியாக, அழுத்தக் குழுவாக மக்கள் செயற்படுகின்ற போக்கைப் பெரிதாகக் காண முடிவதில்லை.
ஒரு சில்லறைக் கடையில் ஏன் இவ்வளவு இலாபம் வைக்கின்றார்கள், மீன்களின் விலை ஏன் இவ்வாறு அதிகரிக்கின்றது, பல்தேசியக் கம்பனிகள் கண்ட மாதிரி பொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதித்தது யார், ஆசிரியர்கள் ஏன் பாடசாலைகளை விட தனியார் வகுப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள், சில அதிகாரிகள் சட்டத்திற்குப் புறம்பாக செயற்படும் தைரியம் எங்கிருந்து வந்தது, என்பது தொடக்கம் அரசியல் விவகாரங்கள் வரை பலவற்றில் சமூகம் பராமுகமாக இருப்பதாகவே தெரிகின்றது.
இலங்கையில் பொதுவாகவே ஆட்சியாளர்களை, அதிகார வர்க்கத்தைத் தட்டிக் கேட்கும் அல்லது அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் போக்கு குறைவாகும். சிங்கள, தமிழ் சமூகங்களில் ஓரளவுக்கு அவை இருக்கின்ற போதிலும், முஸ்லிம் சமூகத்தில் வெளியக அழுத்தக் குழு ஒன்று மருந்துக்குக் கூட இல்லை.
இனவாதத்தைத் தூக்கிக் கொண்டு ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தாலும், சமத்துவம் பேசிக் கொண்டு அனுரகுமாரக்கள் ஆட்சிபீடமேறினாலும் பௌத்த சமூகத்திற்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டே தீரும். எந்த அரசாங்கமும் சிங்கள பெரும்பான்மை மக்களின் நலன்களை விட ஏனைய சமூகங்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதில்லை.
இருப்பினும், சில நேரங்களில் ஆட்சியாளர்களோ அரசியல் தரப்பினரோ சில தவறான முடிவுகளை எடுக்கிள்ற போது, சிங்கள சமூகத்தில் இருந்து அதனை சரிப்படுத்துவதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பௌத்த குழுக்கள், செயற்பாட்டாளர்கள் அதனைச் செய்கின்றனர். கடந்த காலத்தில் ஜே.வி.பியும் இதனைச் செய்தது.
மிகவும் முக்கியத்துவமான விவகாரங்களில் நேரடியாகவே சிங்கள புத்திஜீவிகளும், மகா சங்கத்தினரும் களமிறங்குகின்றனர். பௌத்த பீடங்கள் நேரிடையாகவே அரசாங்கத்திற்கு உறைப்பான செய்தியைச் சொல்கின்றன. இதனை பல தடவை கண்டிருக்கின்றோம். புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னரும் ஓரிரு தடவை இதனை அவதானிக்க முடிந்தது.
அதேபோல், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இப்படியான அழுத்தக் குழுக்கள் எப்போதும் இருந்திருக்கின்றன. தமிழ் ஆயுத குழுக்கள் போராட்டம் என்ற பெயரில் பல மரணங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறத்தில் தமிழ்த் தேசிய அரசியலில் இவை ஒரு மறைமுக அழுத்தக் குழுவாக செயற்பட்டதாக சொல்லலாம்.
அதைவிட முக்கியமாகத் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று இன்னுமொரு பெரிய வலையமைப்பு இதற்குப் பின்னால் பணியாற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதே இந்த அடிப்படையில்தான் என்பதை இங்கு மறந்து விடக் கூடாது.
இன்று தமிழ்த் தேசிய அரசியலில் பிரிவுகள், குழப்பங்கள் ஏற்பட்டமைக்கு அழுத்தக் குழுக்களின் செல்வாக்கு குறைவடைந்தமை ஒரு காரணம் எனக் கூறினாலும், அந்த குழப்பங்கள் ஒரு கட்டுக்குள் இருப்பதற்கும் அவையே காரணம் என்பதை மறுக்க முடியாது. அந்தளவுக்கு இன்னும் தமிழ்ச் சமூகத்தில் அந்த வெளியழுத்தம் உள்ளது.
தமிழ் மக்களுக்கான அரசியலை வென்றெடுப்பதில் கிட்டத்தட்ட எல்லா பரப்புக்களிலும் உள்ள அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் குறியாக உள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவ, ஆசிரியர் சமூகம் உள்ளடங்கலாக புத்திஜீவிகளும் துறைசார்ந்தவர்களும் புலம்பெயர்ந்தோரும் தமிழ் மக்களுக்கான அரசியலை வழிநடத்த முன்னிற்கின்றனர்.
ஆனால், முஸ்லிம் சமூகத்தின் அரசியலை, ஏனைய விவகாரங்களை முன்கொண்டு செல்வதற்கும் அதற்கான வெளியக அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கும் ஒரு அழுத்தக் குழு இல்லை என்பதுதான், இந்த பத்தி வெளிப்படுத்துகின்ற கவலையாகும்.
முஸ்லிம் சமூகத்தில் குழப்பகர கும்பல்கள், விதண்டாவாத குழுக்கள் உருவாக வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. இப்பத்தியின் நோக்கங்களைப் பிழையாக விளங்கிக் கொள்ளக் கூடாது.
மாறாக, முஸ்லிம் அரசியல் தலைவர்களும், எம்.பிக்களும் மட்டுமன்றி, சமூக நிறுவனங்களும் தவறான வழியில் செல்கின்ற போது, அல்லது அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல் காலத்தை இழுத்தடிக்கின்ற போது, அதற்காக வெளியில் இருந்து ஒரு வினையூக்கியாக சமூகத்தின் ஒரு பகுதியினர் செயற்பட வேண்டும்.
அழுத்தக் குழு என்பது, ஒரு பதிவு செய்யப்பட்ட குழுவாக இருக்க வேண்டும் என்பதில்லை. உள்நோக்கம் கொண்ட ஆட்களின் கூட்டமா அமையவும் கூடாது. சமூக நலன் பற்றிச் சிந்திக்கின்ற பலர் ஒன்றிணைந்து உலகின் எந்த இடத்தில் இருந்து கொண்டும் ஒரு கூட்டான அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும். ஆனால் இதன் நோக்கம் தூய்மையானதாக, குழப்பத்தை ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் பெரும் கனவுகளோடு உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு பெரும் பொறுப்பிருக்கின்றது. ஆய்வு ரீதியாகவும் அறிவார்ந்த அடிப்படையிலும் இந்த சமூகத்தை வழிநடத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.
மக்களை சரியாக அரசியல் மயப்படுத்துவதுடன், முஸ்லிம் அரசியல்வாதிகளை வழிப்படுத்துகின்ற பணியையும் செய்ய வேண்டும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் கடந்த 25 வருடங்களாக ஒலுவில் பல்கலைக்கழகம் அந்தப் பணியைச் செய்யவில்லை. நிறையப் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
வேறு பல பலன்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் தமிழர் மற்றும் சிங்களவர் அரசியலில் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் பங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியது.
முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள். படித்தவர்கள் மத்தியில் இருந்து அழுத்தக் குழுக்கள் உருவாகவில்லை. முன்னாள் அரசியல்வாதிகள் தமது அனுபவத்தின் அடிப்படையில் ஒரு அழுத்தக் குழுவாக இணையவில்லை. ஓய்வு நிலை முஸ்லிம் அதிகாரிகள் தமது அனுபவத்தை, அறிவை கூட்டாகத் திரட்டி சமூகத்திற்கான ஒரு வினையூக்கியாக செயற்படவில்லை.
முஸ்லிம் டயஸ்போரா என்ற ஒன்று இருக்கின்றதா என்றே தெரியவில்லை.
ஜம்மியத்துல் உலமா சபை போன்ற அமைப்புக்கள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலும் பிரதான பள்ளிவாசலே இந்த வேலையைச் செய்யலாம். ஆனால், முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகள் மட்டுமன்றி பெரும்பான்மை கட்சியின் முஸ்லிம் எம்.பிக்களும் தவறான வழியில் பயணிக்கும் இன்றைய காலம் வரைக்கும், அந்தப்
பணியை இவ்வமைப்புக்கள் நிறைவேற்றியதாகத் தெரியவில்லை.
இந்தத் தோரணையில் அழுத்தக் குழுக்கள் என்ற அடைமொழியோடு அவ்வப்போது உருவான சில அமைப்புக்கள் சில மாதங்களுக்குள்ளேயே காணாமல் போயின. சில அமைப்புக்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியோடு கலந்து விட்டன. இன்னும் பல செயற்பாட்டாளர்கள் களத்திற்கு வராமல். இன்னும் வட்சப் குழுமங்கள் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்திற்குள் ஆயிரக்கணக்கான பேஸ்புக் போராளிகள் உள்ளனர். ஒவ்வொரு கட்சிக்கும் வக்காளத்து வாங்குகின்ற கூட்டம் உள்ளது. விடயதானம் பற்றிய எந்த அறிவும் இன்றி பேசுகின்ற, எழுதுகின்ற ஒரு கூட்டம் உள்ளது. அது மட்டுமன்றி சமூக சேவகர்கள் என்று சொல்லிக் கொண்டு பொன்னாடைக்காகவும் கௌரவப்பட்டங்களுக்காகவும் செலவழிக்கின்ற ஒரு புகழ்விரும்பிக்
கூட்டமும் உள்ளது.
ஆனால், யாருமே ஒரு முறையான அழுத்தக் குழுவாக, வெளியில் இருந்து அரசியல்வாதிகளை, ஆட்சியாளர்களை நாகரிகமாகக் கேள்வி கேட்கின்ற, பலமாக அழுத்தம் கொடுக்கின்ற சக்தியாக தம்மை வளர்த்துக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்பதை விட அவர்களைக் கண்மூடித்தனமாக நம்புகின்ற மக்களே அதிகரித்துள்ளனர்.
இதனால்தான் கடந்த கால் நூற்றாண்டாக முஸ்லிம் அரசியல் தவறிகெட்டுப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முன்னாள் எம்.பிகள், இப்போதைய எம்.பி;க்கள் சமூகநலனை பற்றிச் சிந்திக்காது தமது
மனம் போன போக்கில் செல்வதற்கும்
இது ஒரு முதன்மைக் காரணமாகும். ஏனெனில் சமூகம் கேள்வி கேட்கும் என்ற எந்த பயமும் அவர்களுக்கில்லை.
முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள், ஆளும் என்.பி.பி. உள்ளிட்ட பெரும்பான்மைக் கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்கள் சமூக விடயத்தில் செய்யத் தவறிய விடயங்களைச் செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதற்கு அல்லது
தவறான முடிவுகளை எடுக்கும் போது அது பற்றி கேள்வி எழுப்புவதற்கு சமூகத்தில் யாருமே தயாரில்லை என்றால், முஸ்லிம் அரசியலை சமூக நலனை மையப்படுத்தியதாக மாற்றியமைப்பதற்கான வாய்ப்பே இல்லை.
எனவே, வெளியக அழுத்தங்களை வழங்கி சமூக, அரசியல் விடயங்களை நெறிப்படுத்துவதற்கான பொறிமுறையை முஸ்லிம் சமூகம் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால், இதைவிட மோசமான விளைவுகளை இனிமேலும் தாங்கிக் கொள்ள தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago