Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 03 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
ஏதோ முஸ்லிம் சமூகத்திற்கு இப்போது எந்தவிதமான குறுங்கால மற்றும் நீண்டகால பிரச்சினைகளும் இல்லை என்பது போலவும், நாட்டில் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகளையே முஸ்லிம்களும் எதிர்கொண்டுள்ளார்கள் என்பது போலவும் தான் முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
ஆனால், உண்மையில் முஸ்லிம்களுக்கு இலட்சக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகள் உள்ளன. அரச உயர் பதவி மற்றும் வளப் பங்கீட்டில் பாகுபாடு உள்ளது, மாற்றாந்தாய் மனப்பாங்கு தொடர்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான கொலைகள், உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால் இதுபற்றி பேசுவதற்குத்தான் யாரையும் காணவில்லை.
வட மாகாணத்தில் 5940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்காக மூன்று மாத கால அவகாசத்துடன் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறும் முடிவுக்கு அரசாங்கம் வந்திருக்கின்றது. தமிழ் அரசியல்வாதிகளின் தொடரானதும் கடுமையானதுமான அழுத்தமே இதற்குக் காரணமாகும்.
அப்படியென்றால், முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை விவகாரத்திலோ அல்லது ஏனைய குறுங்கால நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலோ முஸ்லிம் தலைவர்கள், கட்சிகள் மற்றும் எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் எம்.பிக்களால் ஏன் இவ்வளவு காலமும் இவ்வாறான நகர்வுகளைச் செய்ய இயலாமல் போயிருக்கின்றது?
முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக உயிரையும்
துச்சமென மதிப்போம் என்று கூறிய முஸ்லிம் கட்சிகள் சார் எம்.பிக்கள் ஏன் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக கூட்டிணைந்து குரலையாவது கொடுக்கவில்லை என்பது முக்கியமான கேள்வி.
முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுண, எஸ்.ஜே.பி. தொடக்கம் ஆளும் தேசிய மக்கள் சக்தி வரை எந்தக் கட்சியும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் காலத்தைக் கடத்தின, கடத்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மையாகும்.
தேர்தல் வந்தால் அல்லது உள்ளூராட்சி சபையில், மாகாண சபையில் ஆட்சியமைக்க வேண்டும் என்றால், முஸ்லிம் கட்சிகள், தலைவர்கள் இணைவது பற்றிய கதைகள் உலாவரத் தொடங்குகின்றன. ஆனால், சமூக விடயத்தில் ஏன் இந்த எண்ணம் ஏற்படுவதில்லை.
முஸ்லிம் கட்சிகளில் அரசியல் செய்த முன்னாள் எம்.பிக்கள் மற்றும் இப்போதைய எம்.பிக்கள் மட்டுமன்றி, என்.பி.பி., எஸ்.ஜே.பி. போன்ற கட்சிகள் ஊடாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம்களும் கூட தங்களை அரசியல் ‘மேதைகள்’, ‘ஞானிகள்’ என்றே நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற விடயத்தில் ‘அந்த ஞானம்’ வெளிப்படுவதே இல்லை. நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் எம்.பி.க்கள் குரல் கொடுப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிக்காமை ஒருவித பாகுபாடு எனக் கருதி. அதற்காகக் குரல் எழுப்பத் திராணியற்றவர்களாகவே ஆளும் தரப்பின் முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளனர் எனலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது சீர்குலைந்து விட்டது. பல தமிழ்க் கட்சிகள் குழுக்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றுள் சில அணிகள் ஒரு காலத்தில் ஆயுத இயக்கங்களாக அறியப்பட்டவையாகும். அக் குழுக்கள் தொடர்பாக மக்களுக்கு குறிப்பாக, முஸ்லிம்களுக்குப் பல கசப்பான அனுபவங்கள் உள்ளன என்பது வேறு கதை.
ஆனால். இவையெல்லாம் இன்று தமிழ் மக்களுக்கான அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளன.பதில் தலைவர், செயலாளருடன் தமிழரசுக் கட்சி செயற்பட்டாலும் தமது இலக்கை தவறவிடவில்லை. எல்லா தமிழ்க் கட்சிகளும் வெவ்வேறு வழித்தடங்களில் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பதையும், ஒரே விடயத்தையே வெவ்வேறு அணுகுமுறையில் வலியுறுத்துவதையும் காண முடியும்.
தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், இந்த ஒருங்கிணைந்த செயற்பாடு நிறையப் பலன்களை அவர்களுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஆளுக்கொரு கோணத்தில் பயணித்தாலும் சமூகம் என்று வருகின்ற போது அவர்கள் ஒரு பொதுவிடத்தில் ஒன்று கூடுகின்றார்கள் என்பது கவனிப்பிற்குரியது.
ஆயினும், இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு, முஸ்லிம்களின் விவகாரங்களை, பிரச்சினைகளைக் கையாள்வதற்கும், ஒன்றிணைந்த (கூட்டு) பலத்தின் ஊடாக அவற்றை வெற்றி கொள்வதற்கும் ஏற்பாடு ஒன்று மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரியது.
அப்படியென்றால், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை ஒன்றுதிரட்டி அதிகாரத்தில் உள்ள, அதிகாரத்தில் இல்லாத, முஸ்லிம் தலைவர்கள். எம்.பிக்கள் எல்லோரும் இணைந்து குரல்கொடுப்பதற்கான ஏற்பாட்டை எங்கிருந்து செய்வது? பூனைக்கு மணி கட்டுவது யார்?
முஸ்லிம் கட்சிகள் தம்முடைய சொந்த சமூகத்திற்காகக் குரல் கொடுக்கும் போக்கினை, காலவோட்டத்தில் இணக்க அரசியல் என்ற பெயரில் பெருந்தேசியக் கட்சிகள் மழுங்கடிக்கச் செய்துள்ளன.
பெரும்பான்மைக் கட்சிகளில் இலங்கையர் என்ற பொதுமைப்படுத்தலின் கீழ் செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் எம்.பிக்களுக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆரம்பித்து வைத்த பேரம் பேசும் அரசியலானது அவரது மரணத்தின் பின்னர் பதவிகளுக்காக, பணத்திற்காக சோரம் போகும் அரசியலாக எப்போது மாறத் தொடங்கியதோ அப்போதே முஸ்லிம்களின் அபிரலாஷைகளும் பிரச்சினைகளும் குப்பைத் தொட்டிக்குள் சென்று விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த 25 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருக்கின்ற றவூப் ஹக்கீம், அதன் பின்னர் ‘காங்கிரஸ்களை’ உருவாக்கிய றிசாட், அதாவுல்லா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தனித்துவமான முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை மீள் வாசிப்புச் செய்ய வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளில் எல்லா கட்சிகளிலும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் ஊடாக மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக, மாகாண சபை உறுப்பினராக அதிகாரங்களைச் சுகித்தவர்கள் எத்தனை ஆயிரம் ஏக்கர் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார்கள் என்பதைச் சொல்ல வேண்டும்.
வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ஏக்கர் காணிகளின் பிரச்சினைகள் உள்ளன. வடக்கில் ஒருவிதமாகவும் கிழக்கில் வேறு விதமாகவும் இப் பிரச்சினை உள்ளது. அரச நிறுவனங்கள், படைத்தரப்பு மற்றும் தனிநபர்களின் நடவடிக்கைகளின் காரணமாக முஸ்லிம்கள் தங்களது நிலங்களை உரிமை கொண்டாட முடியாத நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக, கிழக்கைப் பொறுத்தவரையில், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் இல்லை என்பதுதான் மிகப் பெரிய குறைபாடாகும். இது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாரிய விவகாரம் என்பதை அரசியல்வாதிகளும் மறந்து விட்டார்கள் மக்களும் மறந்து விட்டார்கள்.
காணிப் பற்றாக்குறை இருப்பது ஒருபுறமிருக்க நாற்பது வருடங்களாகத் தீர்க்கப்படாத காணிப் பிரச்சினைகள் உள்ளன. எல்லா முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் தேர்தல் காலத்தில் இவற்றைப் பேசுகின்ற போதிலும் கூட, பிறகு மறந்து விடுகின்றனர். பெருந்தேசியக் கட்சிகளுடன் இணைந்துள்ள சில சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்ட சம்பவங்களும் உள்ளன.
ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரும், தமிழ் மக்கள் தமது போராட்டத்தைக் கைவிடவில்லை. குறிப்பாக, காணிக்காகத் தமிழ் மக்கள் தொடராகக் குரல்கொடுத்து வருகின்றனர். மக்கள் மாதக்கணக்காகப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சமகாலத்தில் தமிழ் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர்.
உதாரணமாக, 5940 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானி வெளியான பிறகு தமிழ் எம்.பிக்கள் நேரடியாக அரசிற்கு அழுத்தம் கொடுத்தனர். வெளிநாட்டு இராஜதந்திரிகளை அணுகி உதவி கோரினர்.
அதுமட்டுமன்றி, “இதனை வாபஸ் பெறவில்லை என்றால், மே 28ஆம் திகதி போராட்டம் வெடிக்கும்” என்று பகிரங்கமாகவே அறிவித்தனர். விளைவு, அரசாங்கம் அடிபணிந்தது! இதனை வாபஸ் பெறுவதற்கான வழிவகைகளை இப்போது அரசு தேடி வருவதாகக் கூறப்படுகின்றது.
இப்படியான ஒரு ஒன்றிணைந்த இயக்கப்பாடு முஸ்லிம் மக்களிடமும் இல்லை. அரசியல்வாதிகளிடமும் இல்லை. காணி விவகாரத்தில் மட்டுமன்றி, 99 சதவீதமான ஏனைய சமூகப் பிரச்சினைகளில் கூட ஒரு புள்ளியில் சந்தித்து, ஒருமித்துச் செயற்பட்டு, கூட்டுப் பலத்தின் மூலம் சமூகப் பிரச்சினைகளை வெல்வதற்கு எந்தப் பிரயத்தனங்களையும் முஸ்லிம் சமூகம் செய்யவில்லை.
இலங்கையில் நடுநிலையான ஒரு அரசாங்கம் வந்து, அவர்களாக வீடு தேடிவந்து முஸ்லிம்களின் பிரச்சினைகளை அறிந்து, அவற்றை அவர்களாகவே தீர்த்து வைக்கும் ஒரு நாள் வரும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்களா?
மந்திரத்தால், மாயா ஜாலத்தால் மாங்காய் விழும் என்று கண்மூடித்தனமாக, நம்பிக் கொண்டு, இன்னும் எத்தனை வருடங்களுக்கு முஸ்லிம் சமூகம் வாழாவிருக்கப் போகின்றது?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago