2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

விவாகரத்தான மணமகனின் விசித்திர விளம்பரம்

S.Renuka   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வித் தகுதியும் கை நிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சிந்தனையை உயர்த்தி விடுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது சமீபத்திய சோஷியல் மீடியா சம்பவம் ஒன்று.. ஐஐடி-யில் படித்துவிட்டு, ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள பெரிய நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றும் 37 வயது நபர் ஒருவர், தனக்கு வரப்போகும் மணப்பெண் குறித்து வைத்த நிபந்தனைகள் தற்போது கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அப்படியென்ன நடந்தது? யாரிந்த ஐஐடி மாப்பிள்ளை?

சம்பந்தப்பட்ட பட்டதாரிக்கு ஏற்கெனவே கல்யாணமாகி விட்டது.. விவாகரத்தும் ஆகிவிட்டது. அதனால் 2ஆவது கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதற்காக ஓஎந்திரிலா கபூர் (Oendrila) என்ற மேட்ரிமோனியல் மேனேஜரை அணுகியுள்ளார்... அப்போது தனக்கு தேவைப்படும் பெண், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று பல கண்டிஷன்களை அடுக்கியிருக்கிறார்..

அதாவது தனக்கு வரப்போகும் மனைவி, 30 வயதிற்குள் இருக்க வேண்டும், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், இதுவரை திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தப் பெண் இதுவரை யாருடனும் காதலிலோ அல்லது எவ்வித உடல் ரீதியான உறவிலோ இருந்திருக்கக் கூடாது, அதாவது கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் கண்டிஷனை போட்டுள்ளார்.. அதுவும் மிகவும் கேஷூவலாக எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல் இவைகளை கூறியுள்ளார்.

இந்தக் கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஓஎந்திரிலா கபூர், "ஏன் இப்படி ஒரு நிபந்தனை?" என்று ஐஐடி பட்டதாரியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒரு "ஆய்வை" மேற்கோள் காட்டிப் பதிலளித்தாராம்..

அதாவது, ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாக அதிகமான உறவுகளில் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு அவர் தனது கணவருக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன என்று வாதிட்டுள்ளார்.

இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த ஓஎந்திரிலா, "அப்படியென்றால் நீங்களும் ஏற்கனவே கல்யாணமானவர்தானே? அதே லாஜிக் உங்களுக்கும் பொருந்தும் தானே?" என்று மடக்கியுள்ளார். அதற்கு அந்த நபர், "நான் ஒரு ஆண், அதனால் என்னை இதோடு ஒப்பிட முடியாது" என்று மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

உடனே ஓஎந்திரிலா கபூர், "நீங்கள் எதிர்பார்க்கும் 30 வயதுக்கு உட்பட்ட, பாரம்பரிய பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், 37 வயதான விவாகரத்தான ஒரு ஆணை எப்படி மணக்கச் சம்மதிப்பார்?" என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் மிகவும் திமிராக, "எனக்கு ஏற்கனவே அத்தகைய பெண்களிடமிருந்து ஏகப்பட்ட வரன்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மேட்ரிமோனியல் வெப்சைட்களில் இருக்கும் தகவல்கள் உண்மையானதா என்று சரிபார்க்கவே உங்க உதவியை தேடி வந்தேன்" என்றாராம்.

ஆனால், ஐஐடி பட்டதாரி, எப்பேர்ப்பட்ட விளக்கத்தை தந்தாலும், அவைகளை ஏற்க ஓஎந்திரிலா கபூர் மறுத்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, அந்த பட்டதாரியை தன்னுடைய கஸ்டமராகக்கூட ஏற்க மறுத்துவிட்டாராம்.

இப்படியா கண்டிஷன் போடுவது?
"உங்களிடம் தான் பெரிய பிரச்சனை உள்ளது. உங்கள் இத்தகைய எண்ணங்களால் நீங்கள் பெண்களை ஏமாற்றுவீர்கள்" என்று முகத்தில் அறைந்தாற்போலக் கூறி, அந்த நபரின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டாராம்.

இந்த சம்பவத்தை பொதுவெளியில் பகிர்ந்த ஓஎந்திரிலா கபூர், இப்படியா கண்டிஷன் போடுவது? படித்த நபரின் ஆணாதிக்க மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்..

கொந்தளித்த இணையம்
இதை படித்த நெட்டிசன்கள் பலரும், பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். "விவாகரத்தானவர்கள் பெரும்பாலும் அதே நிலையில் உள்ளவர்களையே தேட வேண்டும், அதை விடுத்து கன்னித் தன்மை எதிர்பார்ப்பது என்ன நியாயம்?" என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"இந்த மனிதரின் தைரியம் ஆச்சரியமாக இருக்கிறது, இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் சமூகத்தில் பெரும் பிரச்சனைகளை உருவாக்குகிறது" என்றும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

எனினும் ஒரு சிலர் "தனக்கு தேவையான துணையைத் தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமை உண்டு, அவரது விருப்பத்தை மதிக்க வேண்டும்" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் ஒன்று, பெரிய படிப்பும், கைநிறைய சம்பளமும் இருந்தால் மட்டும் ஒருவருக்கு நல்ல புத்தி வந்துவிடாது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்..!!

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .