2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஆத்ம திருப்தி மட்டும் போதும்: மஹிந்த

Kanagaraj   / 2016 மே 03 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதிலிடப்பட்டோர் பயிற்றப்படாதோர்:ஊடகப்பிரிவு
பதிலிடப்பட்டோர் பயிற்றப்பட்டோர்:
இராணுவப் பேச்சாளர்
பிரமுகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கமுடியாது:கருணாசேன

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரில் 50 பேர், நேற்றுத் திங்கட்கிழமை (02) காலை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று,முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்ட இராணுவத்துக்குப் பதிலாக 50 பொலிஸார், நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் பதிலீடு செய்யப்பட்டனர் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.  

வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்ட 50 பேரில், மேஜர்கள் ஐவரும் கொமண்டோக்கள் 45 பேரும் அடங்குவர். எனினும் பதிலீடு செய்யப்பட்டுள்ள பொலிஸாரில் நால்வர் உப-பொலிஸ் பரிசோதகர்கள் என்றும் ஏனைய 46 பேரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என்றும் ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.

பதிலிடப்பட்டோர் பயிற்றப்படாதோர்: ஊடகப்பிரிவு

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பிலிருந்து 50 பேர் விலகிக்கொள்ளப்பட்டனர்.

அவர்களுக்காக 50 பொலிஸார் பதிலிடப்பட்டனர். அவர்கள்,  மிக மிக முக்கியமான நபர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் பயிற்றப்படாதவர்கள் என்று மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச்செயலாளர் ரொஹான் வெலிவிட்ட அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மஹிந்த ராஜபக்ஷ என்பவர், உலகிலேயே மிகவும் பலம்வாய்ந்த பயங்கரவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தொழித்தவராவார். ஆகையால்,அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது என்பது நிபுணர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இதனை, சாதாரண பொதுமக்களும் விளங்கி வைத்துக்கொண்டுள்ளனர். உலகிலேயே கொடூரமான பயங்கரவாத அமைப்பை அழித்தொழித்த தலைவர் என்றவகையில், மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே உலகிலேயே உயிருடன் வாழ்கின்றார். ஆகையால், அவருக்கு உகந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதனால்தான், நன்றாகப் பயிற்றப்பட்ட இராணுவத்தினர் 50 பேர், அவருடைய பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டனர். ஆகையால், அவருடைய உயிரைப் பாதுகாக்கும் வகையில், போதுமான வகையில் இராணுவப் பாதுகாப்பை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிலிடப்பட்டோர் பயிற்றப்பட்டோர்: இராணுவப் பேச்சாளர்

முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பதிலிடப்பட்டிருக்கும் பொலிஸார் 50 பேரும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தோர் என்றும், பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் நன்று பயிற்றப்பட்டவர்கள் என்றும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

பிரமுகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கமுடியாது: கருணாசேன

அதிமுக்கிய பிரமுகர்களுக்கு இராணுவம் பாதுகாப்பளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இது, இன்று, நேற்று எடுக்கப்பட்ட தீர்மானமல்ல. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அதிமுக்கிய பிரமுகர்களுக்கு இராணுவம் பாதுகாப்பளிப்பது என்பது சட்டவிரோதமானதாகும். அவருக்கு, போதுமானளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

ஆத்ம திருப்தி மட்டும் போதும்: மஹிந்த

தன்னுடைய இராணுவ பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் நீக்கப்பட்டமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பேஸ்புக் கணக்கில் கருத்தொன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,

'எனக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இன்று அவர்கள் என்னருகில் இல்லை என்பதை நான் உணர்ந்தாலும், நாட்டிலிருந்த போர் எனும் அச்சத்தைப் போக்கி, உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுத்த ஆத்ம திருப்தி என்னிடம் எஞ்சியுள்ளது.

இதுவரை காலமும், எனக்குப் பாதுகாப்பளித்த அனைத்து இராணுவ உத்தியோகத்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  உங்களது சேவையை, கௌரவமாக மதிக்கின்றேன்' என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X